Tuesday, July 18, 2017

19.07.2017 : கிருத்திகை.

19.07.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

"ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
     
நாடண்டி நமசி வாய ...... வரையேறி"

என்னும் பாடலின் சந்தமாம்,

“தானந்த தனன தான தானந்த தனன தான
     
தானந்த தனன தான ...... தனதான” என்ற சந்தத்தில் இந்தப் பாடல்

ஓரந்த மெதுவி லாத ஆனந்த மயம தான
   கோனுந்த னடிக ளேக….அருள்தாராய் (1)

தாயுந்த னறிவி லாத சேயிந்த கடைய னான
   ஈனன்இ வனையு மாள…வருவாயே (2)

ஆறங்க முடையதான வேதங்கள் தினமு மோது
   பாதங்கள் பணியு சேவை – தருவாயே (3)

பாரெங்கும் புகழு ஞான போதத்தை எளிமை யாக
   யாரும்பு ரியும தான - சுவையான (4)

தேனுந்த னுரைக ளோதி நானுந்த னடிகள் சேர
   நாதன்உ னடியில் வாழ – அருள்வாயே (5)

Wednesday, July 5, 2017

06.07.2017 : அனுஷ நன்னாள்: “என் முயற்சி” யென்று ஒன்றால் ஆவது என்ன இங்கு ?

06.07.2017 : அனுஷ நன்னாள்:

இன்றைய அனுஷ தினத்திலே, மனதிலே ஒரு கேள்வி. அந்த ஈசனாம் பெரியவாளின் அருளை அடைய, ஒரே வழி, அவரின் பதகமலங்களைப் பற்றுதலே என்று அடியார்களும் அன்பர்களும் சொல்கிறார்கள். ஆனால், அந்தத் திருப்பாதங்களை எவ்வாறு அடைய முடியும்? அவர் அருள் இருந்தால்தானே அடைய முடியும்? “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்றல்லவோ பெரியவர்களெல்லாம் நமக்குச் சொல்லுகிறார்கள்?
“அருள் கிடைக்கப் பதம் வேண்டும் – பதம் கிடைக்க அருள் வேண்டும்” – என்றால், இதில், நம் முயற்சியால் ஆவதென்ன? புரியவில்லை.
பெரியவாளையே கேட்டு, அவரையே சரணடைவது ஒன்றுதான் வழியோ?
பெரியவா சரணம்.




உன்மலர்ப் பாதம் பற்றி உன்னையே சேர வேண்டும்
என்று நான் ஆசைப்பட்டு, “வழிசொல்லும்” என்று உந்தன்
இன்னடியாரைக் கேட்க, வழிசொன்னார், “நானிலத்தில்
உன்னருள் கிடைத்திட்டாலே உன்பதம் கிடைக்கும்” என்றார்! (1)

“இன்னருள் கிடைக்க நானும் என்னதான் செய்ய வேண்டும்?”
என்றுடன் அவரைக் கேட்க, இதழ்க்கடைச் சிரிப்பொன்றோடு,
மென்மையாய் அவரும் சொன்னார், “பெரியவா நாமம் சொல்லி,
பொன்மலர்த் தாளைப் பற்றி நிற்றலே வழியிங்கென்றார்” (2)

தலைசுற்றி நின்றேன் நானும்! உன்னருள் கிடைக்க நானும்
மலைமகள் வடிவே உந்தன் பதமலர் பற்ற வேண்டும்!
அலைகடல் துயிலும் அரசே, பதமலர் பற்றுதர்க்கோ,
விலைமதிப்பில்லா உந்தன் அருளன்றோ இங்கு வேண்டும்? (3)


“என் முயற்சி” யென்று ஒன்றால் ஆவது என்ன
இங்கு ?
உன் மனம் கனிந்து நீயே இரங்கி வந்தென்னை நோக்கி
“அன்பனே! குழந்தாய்! வா, என் அடிபற்று” என்று சொல்லி
இன்னருள் தந்து என்னை அடிமையாய்க் கொள்ளுவாயோ? (4)

உன்னருளாலே உந்தன் தாளினை வணங்கும் பேற்றை
மின்னொளிர் கமல பாதம் அடைந்திடும் அரிய பேற்றை
சின்னவன் கடையனேன் எனக்குமே நல்குவாயோ?
என்னுடை ஈசா! இங்கு, வந்தெனக்கருளுவாயோ? (5)