Saturday, January 13, 2018

13/01/2018 : அனுஷ தினம்

13/01/2018 : அனுஷ தினம்

சென்னையிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூர் வாழ்வு. பெங்களூரிலிருந்து குடிபெயர்ந்து மும்பாய். சரியாய் 1 வருஷம் மும்பாய் வாழ்க்கை. மறுபடி இப்போது பெங்களூர் வாழ்வு. அலைச்சல். மறுபடியும் குழந்தைகளுடைய school; மறுபடியும் வீடு தேடும் படலம். வேலை. அடுத்து என்ன அடுத்து என்ன என்று மென்மேலும் உத்யோக நினைவு. சாப்பாடு. தூக்கம்.

பெரியவாளை நினைக்க எங்கே நேரம்?

துளி பக்தி இருந்தாலும் ஓடி வந்து அருளும் அந்த தெய்வமேதான் அந்த ஒரு துளி பக்தியையும் கொடுத்து அருள வேண்டும்.

பெரியவா சரணம்.




****************************************************************


ஊனதும் உருகி நில்லேன்; உள்ளொளி ஏதும் இல்லேன்
தேனுனை அறியாப் பிறவி படைத்திங்கும் கவலை இல்லேன்
நானெனதென்றே வாழும் வாழ்வதே குறியாய்க் கொண்டேன்
வானவர் ஏத்தும் கோனே! வந்தெனைக் காப்பாய் ஐயா (1)

சிந்தையில் உன்னை வைத்து செந்தமிழ் கொண்டு பாடி
எந்தையே ஐயா என்று சந்ததம் போற்றி நில்லேன்
வெந்துயர் வாழ்வை மெய்யாய் கொண்டு நாள் கழிக்கின்றேனே!
முந்தைய வினையோ? எந்தாய்! வந்தெனைக் காப்பாய் ஐயா! (2)

உண்டுவீண் உறங்கி நாளும் வாழ்வினைக் கழித்தும் என்றும்
விண்ணவர் ஏத்திப் போற்றித் தொழுதெழும் அமுதாம் உந்தன்
தண்மலர்ப் பாதம் எண்ணாக் கடையனாய் இருக்கின்றேனை
அண்ணலே அபயம் தந்து அன்னையாய்க் காப்பாய் ஐயா! (3)

அன்பதே சிவமாம்; அன்பில் என்பதும் உருகும் என்பார்
என்மனம் என்னும் பாலை வனத்தினில் உன்பால் வைக்கும்
அன்பது துளியும் இல்லேன்; இலையெனும் பதைப்புமில்லேன்
நன்மையே அறியா நெஞ்சன் என்னையும் காப்பாய் ஐயா (4)

நாமமே கேட்க உள்ளம் உருகியே நிற்பாரந்த
சேமமே கொண்டார் கூட்டம் சேர்ந்துமே மாறா நெஞ்சில்
காமமும் களவும் கோபம் மட்டுமே கொண்டேன் உமையாள்
வாமமே கொண்டோய் வந்து என்னையும் காப்பாய் ஐயா (5)

அருளதே வடிவாய் வந்தோய்! உன்னருள் நாடேன்; வீணாம்
பொருளதே நாடும் தீய வழக்கதே வாழ்வாய்க் கொண்டேன்
மருளதே மனமாய்க் கொண்டேன்; அந்தகன் வருமுன் வந்துக்
குருபரா நீயும் இந்தக் கடையனை காப்பாய் ஐயா (6)

மனைவியை மக்கள் தம்மை, போற்றிடும் சுற்றம் தம்மை
அனைத்துமாய் எண்ணி வாழ்வேன்; பரமனே உன்னை நெஞ்சில்
தினையளவேதும் எண்ணா நிலையதில் பயமும் இல்லேன்
வினைப்பயன் தானோ? எந்தாய்! வந்து நீ காப்பாய் ஐயா (7) 

உறவென்று உன்னைக் கொள்ளேன்; உன்பதம் நினையேன் வாழ்வில்
பிறருக்கே உழைத்து நின்றேன்; பணத்திற்கே குறியாய் நின்றேன்
அறநெறி ஏதும் இல்லேன்; பக்தியோ சிறிதும் இல்லேன்
மறலியே வருமுன் வந்து என்னை நீ காப்பாய் ஐயா (8)

பதவியைப் பொருளை, போக வாழ்வினை அடைவதொன்றே
சதமெனக் கொண்டேன்; துன்பம் துயருமே வந்தும் உந்தன்
பதமதை நாடி வீழ்ந்துக் கதறிடா நெஞ்சம் கொண்ட
அதமனைக் கடைக்கண் பார்வை கண்டு நீ காப்பாய் ஐயா! (9)

இன்னருள் ஒன்றே வேண்டி உன்பதம் நாடி என்றும்
உன்னடி போற்றி நிற்கும் அடியவர் கோடி உண்டு
உன்னருள் நாடா நிற்கும் ஒருவனை எங்கு காண்பாய்?
அன்னையே! அப்பா! வந்தேன்! என்னையும் காப்பாய் ஐயா! (10)