Sunday, September 16, 2018

15.09.2018 : அனுஷ நன்னாள்

15.09.2018 : அனுஷ நன்னாள்

பாரதியின் "தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு 
சூழ்கலை வாணர்களும்" என்ற பாடல் வரிகளின் சந்தத்திலே பெரியவாளைப் பற்றிப் பாடவேண்டும் என்று தோன்றியது.  

ஆனை முகனாய், குஹனாய், அன்னை பராசக்தியாய், அந்த அன்னை சிவகாமி உளம்கவர் நடராஜனாய், அந்த அன்னையேயான திருமாலாய் விளங்கும் பெரியவாளை நமஸ்கரித்து, பாடலை, பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



ஐந்து கரத்தவன் ஆனை முகக்கண
நாதனருட் கனியோன் - நித்தம்
சிந்துமருள் அமுதக்கடலாய் வரும்
முக்தனவன் நீயே! (1)

மன்றினில் ஆடிடும் வார்சடையன் நட
ராஜனெனும் தலைவன் - அவன்
சிந்தையில் ஆடிடும் சீர் மகனாம்
நடை ராஜன் அவன் நீயே! (2)

பாற்கடலிற் துயில் மாபொருளாம்
பரந்தாமனெனும் இறையோன் - அவன்
கூறும் உரைப் பொருள் தானது வாய்
திகழ்ந்திட்டவனும் நீயே! (3)

அண்டமனைத்தருள் நாயகியாம் பரா
சக்தி எனும் அன்னை - அவள்
விண்டமுதாமந்த வேதமதன் பொருள்
முற்றதுதுமாம் நீயே! (4)

வேலது கொண்டசுரர் குலம் மாய்த்திடும்
சூரனவன் முருகன் - எழில்
கோலமதே உரு கொண்டருள் செய்திடும்
சித்தனவன் நீயே! (5)

அத்தனை தெய்வமும் ஆனவுரு குரு
முத்தனவன் நீயே - எங்கள்
சித்தம் உறைந்தென்றும் இன்னருள் செய்திடும்
வித்தகனும் நீயே! (6)