Tuesday, August 20, 2019

எக்காலம் : 17.8.19

உன் நினைவாயிருந்து உனக்காகவே வாழ்ந்து 
உன் நாமம் என் மூச்சு என்றாவதெக்காலம்?

உன்னடியார் பாதம் என் க்ரீடமாயிருந்து
என்னாளும் சத்சங்கம் என்றாவதெக்காலம்?

பொன்மேனி ஒளிவடிவை எப்போதும் என்னகத்தில்
கண்ணாரக்கண்டு மனம் களித்திருப்பதெக்காலம்?

தென்னாடுடைய சிவன் என்னாட்டவர்க்குமிறை
உன்னோடு நானிருந்து உனதாவதெக்காலம்?

வேரோடு வினைதீர்க்கும் பெருங்கருணைப் பேராற்றை
சேராதிருக்குமெந்தன்  வினைதீர்வதெக்காலம்?

அன்புருவாம் உன்னை அனுதினமும் அர்ச்சிக்கும்
இன்பத்தில் என்னை இழந்திருப்பதெக்காலம்?

விதியாலே விளைந்த உயிர் இதனை உன் பாதமதே
கதியென்று சமர்ப்பித்து நிறைந்திடுவதெக்காலம்?

ஓரிக்கை வந்தமர்ந்த ஓருருவை என்னுளத்தில்
வாரித்தொகுத்திழைத்துக் களிகூர்வதெக்காலம்?

கஞ்சி நகர் வளர் கருணைக்கடலை நித்தம்
கொஞ்சிக்கொஞ்சி உயிர் உருகிடுவதெக்காலம்?

பிறவிப் பிணி தீர்க்கும் பேரன்பின் பதம்சேர்ந்து
உறவு நீ ஒன்றே என்றிருப்பதெக்காலம்?