Wednesday, December 13, 2017

14.12.2017 : பெரியவா ஆராதனை : கண்ணீர் மாலை


14.12.2017 : பெரியவா ஆராதனை : கண்ணீர் மாலை

இன்று குருவாரம். பெரியவா ஆராதனை நடக்கும் நாள்.

“யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”  என்றார் மாணிக்கவாசகர்.

அந்த இறைவன் மலர் மாலையை உகக்கிறான். மலர் மாலையினும், பாமாலை உகக்கிறான். பாமாலையினும், பக்தர்களின் கண்ணீரை உகக்கிறான்.

அவன் பதம் தேடி, அழுத கண்ணீரால் செய்த பாமாலையை, இந்தக் கண்ணீர் மாலையை நிச்சயம் உகப்பான் என்றுதான் தோன்றுகிறது.

பெரியவா சரணம்.



அழுதால் உன்னையே பெறலாம் என்றாரே
கெழுதகைப் பெரியோரும்; நாளெலாம் உனையெண்னி
அழுவதே வாழ்வாகக் கொண்டேனைக் காவாயோ
பழுதிவன் என்னாமல் வந்து (1)

ஒரு சேய் அழுகைக்கு இரங்கியே   நீயன்று
பெருமுலை அமுதூட்டி நின்றனை இன்றிந்த
சிறு சேய் அழுகைக்கிரங்காயோ? உன்மனம்
உருகாதோ கண்ணீரைக் கண்டு (2)

உன்பதம் கண்ணீரால் அலம்பிட அருள்வாய் நீ
என்றெங்கள் பெரியோரும் சொன்னாரே! பிறைசூடி!
மன்றாடும் உமைநேசா! அழுகையாம் ஆற்றிலே
கன்றிவன் கரைவதும் பார் (3)

பதமதை மலரினால் அருச்சனை செய்வதின்
இதமதாம் கண்ணீரும் உனக்கென்றார் பெரியோரும்
சதமுமே கண்ணீரால் உன்பாதம் நனைத்தேங்கும்
அதமனை வந்து நீ கா (4)

நித்தமும் தண்ணீரால் அபிஷேகம் செய்வதின்
வித்தகா கண்ணீரை உவப்பாய் நீ என்பாரே
சித்தமும் சோர்ந்திங்கே கண்ணிரு குளமானேன்
அத்தனே வந்தென்னைக் கா (5)

பாவியேன் நானுமென் நெஞ்சுமே பொய் ஆனால்
மேவியே உன்பதம் அழுதிட்டால் பெறலாமென்
றாவியே அன்றுமா ணிக்கவாசகர் சொன்னார்!
தாவியே வந்தென்னைக் கா (6)

புலம்பலால் அருச்சனை செய்தனன் கண்ணீரால்
அலம்பினன் நின்பாதம் தாய் தந்தை குரு எந்தன்
உலகெலாம் நீ இங்கே உனைத்தேடி நின்றேனென்
குலம் வாழ வந்தென்னைக் கா (7)

கங்கையைச் சடையினில் தாங்கினை அவள்வேகம்
மங்கிடும் என் கண்ணீர் முன்னாலே நிற்காமல்
பொங்கிடும் அழுகையால் நீராட்டி நின்றேனை
இங்குடன் வந்து நீ கா (8)

அடியார்கள் அழுதிட்டால் அவனியே தாங்காது
அடியேனும் அழுதேங்க அதை நீயும் பார்ப்பாயோ?
அடித்திட்ட அடி போதும் பதமென்னும் அருள் தந்து
கடிதேகி வந்தென்னைக் கா (9)


உண்ணாமல் உறங்காமல் உன்பாதம் நினைத்துன்னைக்
கண்ணீராம் வென்னீரால் அபிஷேகம் செய்பவனை
 “கண்ணே என் மணியே என் குழந்தாய் நீ” எனக் கொஞ்சி

நண்ணி வந்துன்பதம் தா (10)

No comments:

Post a Comment