Showing posts with label 14.10.18 அனுஷம். Show all posts
Showing posts with label 14.10.18 அனுஷம். Show all posts

Saturday, October 20, 2018

14.10.18 : அனுஷ நன்னாள்

14.10.2018 : அனுஷ நன்னாள்:

இந்த நவராத்திரி சமயத்தில், இந்த அனுஷ நன்னாளிலே, அனுஷதேவனை, இந்தப் பாடலால் ஆராதனை செய்கிறேன்.

பெரியவா சரணம்.

காருண்ய மூர்த்தி வந்தார்!!



பத்தவதாரம் செய்து, பூமியே வந்த தெய்வம்
உத்தம முனிவனாக, சங்கர நாமம் தாங்கி
சித்தனாய் வேடம் பூண்டு அவனியே வந்ததம்மா!
பத்தரைக் காக்கவென்று இத்தரை வந்ததம்மா!

ஒன்பது நாட்கள் போரில் அரக்கரை அழித்த தேவி
துன்புற்றுழன்று வாடி அன்னையைத் தேடுமந்த
அன்பருக்காக கைலை நாதனை விட்டு பூமி
தன்பதம் பதித்து வந்தாள்; காவியே உடுத்தி வந்தாள்!

அட்டமா சித்தி என்னும் தேவியர் போற்றும் தேவி
சிட்டரின் வாழ்வு மேன்மையாகிடவென்று,  தீய
துட்டரை அழித்திடாமல் நல்லோராயாக்கவென்று
இட்டமாய்ப் பாதம் வைத்து பாரத பூமி வந்தாள்!

ஏழுலகெங்கும் வாழ காத்தருள் புரியும் ஈசன்
ஊழ்வந்துறுத்தக் கதறி அழுதிடும் மாக்கள் மாற
தாழ்சடை நீக்கிக் கையில் மான்மழுவதுவும் நீக்கி
ஆழிசூழ் உலகம் வந்தான்; காஞ்சிமா நகரம் வந்தான்!

அறுமுகம் கொண்டு சூரர் படைவென்ற தேவன், மாந்தர்
உறுபயம் போக்க வந்தான்; கவலைகள் நீக்க வந்தான்
அறுபகை வென்று வாழும் வகை சொல்ல தண்டம் ஏந்தி
குருவென இறங்கி வந்தான்; குவலயம் வாழ வந்தான்!

பஞ்சமா பொறிகள் வாட்டத் தவித்துடல் நடுங்கி நோயால்
அஞ்சியே அரற்றி வாழும் மாந்தரைக் காக்கத் தாயின்
நெஞ்சுகொண்டிங்கே வந்தான் தரணியைக் காக்க வந்தான்
பஞ்சின் மெல்லடியால் இந்தப் பாரை சீராக்க வந்தான்!

சதுர்வேதம் நொந்து நைந்து  கவனிப்பாரின்றி  வாடி,
விதிதனைத் தொழுதரற்றி அழுதிங்கே நின்றபோது,
மதுசூதன் அன்றோர் நாளில் வேதத்தைக் காத்தாற்போல
மதிசூடன் மறையைக்காக்க அவதாரம் செய்து வந்தான்!

முத்தேவர் சேர்ந்து இங்கே ஒன்றாகிப் புவியைக்காக்க
சித்தனின் ரூபம் கொண்டார்! தீஞ்சுவைத் தமிழில் வேதம்
மொத்தமாய் தெய்வக் குரலில் சொல்லவே வந்தார்; எங்கள்
உத்தமக் குருவாய் வந்தார்! உலகெலாம் உய்ய வந்தார்!

இருவினை அறுத்து மாய இருளினைக் களையும் ஞானத்
திருவென வந்தார்! ஜோதிச் சுடரென வந்தார்! லோக
குருவென வந்தார்! வாழ்வில் நிறையதே நிரம்ப வந்த
அருளென வந்தார்! இறையதாய் இனிதே வந்தார்!

ஓருண்மையன்றி இங்கே வேறுண்மையில்லை யென்னும்
பேருண்மை சொல்ல வந்தார்! பேருண்மை தானாய் வந்தார்!
ஆறுண்ட கொண்டை நீக்கி, மான்மழு சூலம் நீக்கி,
காருண்ய மூர்த்தி வந்தார்! காஞ்சிமா நகரே வந்தார்!