Thursday, April 27, 2017

28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!

28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!
***************************************************************************************************************

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்தக் குமரனுக்குப் பிடித்த அழகிய திருப்புகழின் ஒரு சந்தத்திலே, ஸ்வாமிநாதனாய் அவதாரம் செய்த நம் பெரியவாளைப் பாடும் சந்தோஷம், அவர் அருளாலே இன்றும் தொடர்கிறது. 

அபகார நிந்தைபட் ...... டுழலாதே ....     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே என்ற பாடலின் 

தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான     என்ற சந்தம்.  

பெரியவா சரணம். 



ஒருநாளு முன்பதம்….நினையாதே
     தவயோக மென்பதும் ….அறியாதே
உருகாத ழிந்திடும் …..மனதாலே
     உனைநான டைந்திடப் …..பெறுவேனோ?
அரனோடு சக்தியின்…….வடிவோனே!
     தவராஜ சங்கரப் …பெயரோனே!
அடியார வர்மனம்…உறைவோனே!
     திருஞான சுந்தரக் ….கிழவோனே!



Saturday, April 15, 2017

15.04.2017 : அனுஷ தினம்

15.04.2017 : அனுஷ தினம்
****************************************

இன்றைய அனுஷ தினத்திலிருந்து, மும்பை வாசம். Transfer ஆகி, குடும்பத்துடன், முதன்முதல் மும்பை வந்து சேரும் நாள், அனுஷமாயிருப்பதும், ஒரு சந்தோஷம்தான்.

பெரியவாளை, கடவுளாய், குருவாய், தாயாய், தந்தையாய் நினைத்துப் பார்ப்பது ஒரு சந்தோஷம்.

உம்மாச்சித் தாத்தாவை, தாத்தாவாகவே நினைத்து, நம்மை அவரது ப்ரியத்துக்குரிய பேரனாக நினத்துப் பார்ப்பது இன்னும் சந்தோஷம்.

அவர் சொல்லியிருப்பதில் எதையுமே நான் செய்வது இல்லை என்பதால், பெரியவாளை, குருவாக பக்தி பண்ணுவதென்பது, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். குருவாக எண்ணினால், குரு சொல்வதை, சொல்லி இருப்பதை, செய்ய வேண்டும். அதுதான் சிஷ்ய லக்ஷணம். அடியேனிடம் அந்த லக்ஷணம் ஏதும் இல்லை. ஆகையால், அவரை, குருவாக வைத்து பக்தி பண்ணுவது, என்னைப் பொறுத்த வரையில், கடினமான ஒன்றுதான்.

அதே சமயம், பெரியவாள், அந்த உம்மாச்சித் தாத்தாவை, தாத்தாவாக வைத்து பக்தி பண்ணுவது சுலபமானதாகத் தோன்றுகிறது.

ஒரு தாத்தாவை, ஒரு பேரன், எப்படி பக்தி செய்வான்? இந்தக் கேள்வியே சற்றே வேடிக்கையாகத் தோன்றுகிறது. தாத்தாவுக்கும், பேரனுக்கும், நடுவில், பக்தியா இருக்கும்? இல்லை! ப்ரேமையன்றோ இருக்கும்!!

தாத்தாவிற்கும், பேரனுக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதோ - என்று, மனது அடுத்த கேள்வி கேட்டது.

ஒரு மஹா சமுத்திரத்திற்கும், அடுத்த க்ஷணம் ஆவியாகப் போய்விடக்கூடிய ஒரே ஒரு சிறிய நீர்க்குமிழிக்கும் என்ன ஒற்றுமை இருந்து விட முடியும்?

இருந்தாலும்கூட, இந்த உம்மாச்சித் தாத்தாவிற்கும், அடியேனுக்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருப்பதாகத் தோன்றியது!!

"தாத்தா" என்னும் உரிமையோடு, பேரன், அவரின் தோள் மீதமர்ந்து, "தாத்தா, நானும் உன்னளவு உயரம் ஆகிவிட்டேன்" என்று சொல்வது போல, என்னுடைய உம்மாச்சித் தாத்தாவையும், என்னையும் "compare" செய்து பார்க்கத் தோன்றியதில், பிறந்த இந்தப் பாடலை, உம்மாச்சித் தாத்தாவின் பத கமலங்களுக்கே அர்ப்பணம் செய்கிறேன்.




***************************************************************************
பெரியதில் பெரியதான பெயர் பெற்றோய்! உன்னிடத்தில்,
சிறிதிலும் சிறியன் உன்சேய், பேசவே வந்து நின்றேன்! (1)

சிந்தையில் உன்னைவைத்து எண்ணியே இருந்தபோது,
எந்தையே உண்மை பலவும் நானுமே கண்டு நின்றேன்! (2)

பெரியவா உனக்கும் இந்தச் சிறியவன் எனக்கும் நடுவில்,
அரியவோர் பந்தம் உண்டு! ஒற்றுமை சிலவும் உண்டு! (3)


முற்றுமே துறந்தாய் நீதான்! பற்றினேன் உன்னை, நான்தான்!
ஒற்றுமை நம்மில் என்ன என்றிங்கே சொல்ல வந்தேன்! (4)

உலகெலாம் வாழவென்று, முழுதுமாய் நஞ்சை உண்ட
நிலவுலாவியனாமந்தக் கறைக்கண்டன் நீயே என்பார்! (5)

கறையதே மனமாய் நீங்கா அழுக்கதே உடம்பாய் வந்தேன்!
இறைவ, நின் கறையை விடவும், என் கறை பெரிதே அன்றோ! (6)

அறத்தினோர் வடிவமாக, அவனியில் வந்த நீயோ,
துறவினோர் வடிவமாகக் கையிலே தண்டம் கொண்டாய்! (7)

பாழ்நரகுற்ற பாவம் மானுட வடிவாய் வந்தேன்,
வாழ்வதே தண்டமன்றோ? இருப்பதும் வீணேயன்றோ? (8)

நானிலம் உய்ய வந்தோய்! தாயவள் வடிவாய் வந்தோய்!
ஞானியாம் உனக்கு ஏதும் ‘மனம்’ என்பதில்லையென்பார்! (9)

தன்வசம் இல்லா ஏதும், தன்பொருள் இல்லைதானே?
என்வசம் இல்லா மனதால், மனமென்பதெனக்கும் இல்லை! (10)

உன்னையே மனதில் கொண்டு, ஒற்றுமை கண்டு நானும்
சொன்னவை ஏதும் வைத்து கோபம் நீ கொள்ளல் வேண்டா! (11)

பெயரனும் உரிமையோடு, தாத்தனின் மடிமீதேறி
“உயரமே உன்னில் நான்தான்” என்னுமாறிங்கு நானும் (12)

உம்மாச்சித் தாத்தா உந்தன் மடிமீது ஏறி உன்னை
வம்புக்கிழுத்த பேச்சு – பெரிதாக எண்ணல் வேண்டா! (13)

தெய்வமாய், குருவாய் உன்னைக் கண்டு நான் தொழுதபோதும்
செய்தவம் ஏதுமில்லேன் – உன்னை நான் அடையவில்லை! (14)

அன்னையாய்த் தந்தையாய் என் ஆருயிர் தாத்தனாய் நான்
உன்னையே கண்டு நின்றேன்; கண்ணில் நீர் தேக்கி நின்றேன் (15)

குழந்தையாய் உந்தன் மடிமேல் ஆடிடக் கேட்டு நின்றேன்


வழங்குவாய் நீயும் இந்த வரத்தையே; அருள்வாயய்யா! (16)

Friday, March 31, 2017

01.04.2017 : கிருத்திகை நன்னாள் : ஒருகணமு முனதுபதம் தேடிச் சேவித் தறியேனே

01.04.2017 : கிருத்திகை நன்னாள்

நேற்றும், இன்றும் கிருத்திகை.  ஒவ்வொரு கிருத்திகை நாளிலும்,   அந்த குருபரனேயான பெரியவாளின் மேல் ஒரு பாமாலையை,  குருபரன் மகிழ்ந்த திருப்புகழின் ஒரு சந்தத்திலே புனைந்து அணிவிப்பது, அந்தப் பெரியவாளின் கருணையினால், இன்றும் தொடர்கிறது.

"ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே"  என்று வரும் 
பாடலின் சந்தத்திலே, இன்றைய பாடல். 
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான    என்ற சந்தம்.




ஒருகணமு முனதுபதம் தேடிச் சேவித்  தறியேனே
  உனதுவுரை எனதுவழி யாகப் போகக்  கிடையேனே

திருவருளை முழுமனது மாகத் தேடிச் சுகியேனே
  குருபரனை எனதுவுயி ராகப் பாவித் துணரேனே

அகமதனி லுனையறியு மார்கம் ஏதும் தெரியேனே
 உயிரதனி லுனையெழுதி நாளும் வாழக் கிடையேனே
 
புவியதனி லுனதுபத மேவும் சீலம் அருள்வாயே

  உனதருளி லனுதினமும் வாழும் கோலம் அருள்வாயே 

Friday, March 17, 2017

18.3.2017 : அனுஷ நன்னாள் : சல்லடை ஏழால்

18.3.2017 : அனுஷ நன்னாள் : சல்லடை ஏழால் 



இன்று, அனுஷ நன்னாள். பெரியவாளின் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அனுஷ ஜோதியை ஆராதிக்கும் நாள். உம்மாச்சித் தாத்தாவைக் கொண்டாடி மகிழும் நாள்.

பக்தர்களுக்கு மகிழ்ச்சியான நாள்தான்.

பக்தி ஏதும் இல்லாமலேயே, "பக்தன்" என்று தன்னை நினைத்துக் கொள்பவனுக்கு? பக்தன் போல நடிப்பவனுக்கு?

"நானும் பக்தந்தானா?" என்று சந்தேகத்திலேயே இருப்பவனுக்கு?

பக்தி ஏதும் இல்லாமல், பக்தன் போல் நடித்து, பக்தி இருப்பது போல் நடந்து கொள்ளும் அடியேனுக்கு, "என்று எனக்கு முழுதான பக்தி வரும்?" என்று அழுது அரற்றவென்றே ஏற்பட்ட நாள் என்றுதான் தோன்றுகிறது.

பொள்ளாச்சி ஜயம் என்ற அத்யந்த பக்தைக்கு ஒரு முறை பெரியவா சொல்லியிருக்கிறார் : "நான், என்னிடம் எல்லாரையும் நெருங்க விடுவது இல்லை. என் பக்தர்களை ஏழு சல்லடை இட்டுச் சலித்தாக்கும் தேர்ந்தெடுக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

"உண்மையிலேயே இவனுக்கு பக்தி இருக்கிறதா" என்று ஏழு விதமான சல்லடையிலிட்டுச் சலித்துத் தேர்ந்தெடுக்கிறார் பெரியவா என்றால், அந்தச் சல்லடை பக்கம் கூடப் போகத் தகுதியில்லாத அடியேன் கதிதான் என்ன?

பெரியவா மேல் முழுமையான பக்தி ஏதும் இல்லாவிட்டாலும், "பக்தி பண்ண வேண்டும்" என்ற நினைவைக் கொடுத்த அந்தப் பெரியவாளேதான் பக்தியையும் கொடுக்க வேண்டும்.



பெரியவா சரணம்.


“சல்லடை ஏழால் எந்தன் பக்தரை சலித்தெடுப்பேன்”
   என்று நீ சொன்னாய்; அந்தச் சல்லடை ஏதோ ஒன்றில்,
புல்லனாம் என்னையிட்டு சலித்திவன் சரியேயில்லை
   என்று நீ சொன்னால்கூட மகிழுவேன் ஆனால் என்னை
சல்லடை ஏழில் ஒன்றில் இடவுமே கூடாதென்று,
   அருகதை ஏதும் இவனுக்கில்லவே இல்லையென்று
சொல்லி நீ நின்றால் இந்த அடிமை நான் என்ன செய்வேன்?
   யாரிடம் அழுது நிற்பேன்? உன்பதம் எவ்வாறடைவேன்?

கடையனிற் கடையன் அடியேன் உன்பதம் சேர்வதெந்தன்
   முயற்சியாலவதொன்றோ? உன்னருள் அன்றி இங்கே
கடைத்தேரும் வழியும் உண்டோ? “சேய் இவன் பாவம்” என்று
   உன் மனம் நினைத்தாலன்றி, எனக்கினி கதியும் உண்டோ?
விடையேறும் அத்தன் வடிவே! அன்னையும் ஆகி நின்றோய்!
   கனிவுடன் என்னைப் பார்த்து, புன்னகை முறுவல் பூத்து,
கடைக்கண்ணால் அருளை வார்த்து, பரிவுடன் என்னை ஏற்று,
   பதமலர் அருள்வாயப்பா! அருள்மழை பொழிவாயப்பா! 

Sunday, March 5, 2017

5.3.2017: நேற்று கிருத்திகை: இன்பமருள் சோதிமுகம் .. ... அதுதேடி

5.3.2017: நேற்று கிருத்திகை:
*********************************************
ஒவ்வொரு கிருத்திகைப் பொழுதையும் ஒட்டி, திருப்புகழ்ச் சந்த்த்திலே அந்த குருபரனேயான பெரியவா மேலே ஒரு பாடல் பாடுவது, அவர் அருளாலே இந்தக் கிருத்திகையிலும் தொடர்கிறது.


பெரியவா சரணம்.
தந்ததனத் தானதனத் ...... தனதான
தந்ததனத் தானதனத் ...... தனதான
......... பாடல் .........
("உம்பர்தருத் தேநுமணி" எனத் தொடங்குல் பாடலின் சந்தம்)
இன்பமருள் சோதிமுகம் .. ... அதுதேடி
கண்ணருளும் ஞானமுதச் .. .. சுவைநாடி
பக்தரவர் ஓடிவரும்.. .. திருநாளில்
வந்துஅவர்க் காகவருள் .. ..தருவாயே
சுத்தமறை ஓதுமுரைப் .. .. பொருளோனே
அன்பர்மனத் தாமரையில்.. .. அமர்வோனே
கெஞ்சுமிவன் வேதனையும்.. .. அறியாயோ?
கஞ்சமலர் பாதமதும்.. .. தருவாயோ?

Saturday, February 18, 2017

18.02.2017 நாளை (19.2.17) அனுஷ நன்னாள்....

18.02.17 அனுஷப் பாடல்:

நாளை (19.2.2017) , அனுஷ நன்னாள். சென்னையில், சேத்துப்பட்டில், மேயர் ராமனாதன் ரோட்டில், சங்கராலயாவில் மஹாபெரியவாளுக்குப் புஷ்பாஞ்சலி நடை பெறுகிறது. 121 பக்தர்கள் ஒருசேர ஸ்ரீருத்ர ஜபம் செய்து, சமஷ்டியாய் அர்ச்சனை செய்து அந்த மஹாபுஷ்பங்களாலே சதுர்வேத பாராயணங்களுடன், ஸ்ரீசரணாளுக்கு, புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இந்த புஷ்பாஞ்சலி நடைபெறும் சமயத்தில் அடியேன் மனதிலே இன்றே ஒரு சிறிய புஷ்பாஞ்சலி செய்து பார்த்தேன்.

அழகிய மலர்கள் கொண்டு அந்த அழகிய தாளிணைகளுக்கும், புஷ்பம் போன்ற மேனிக்கும், பூஜை செய்து மனதிலே கண்ட தரிசனத்தை, இங்கே பாடலாய் வடிக்கப் பார்க்கிறேன்.

பெரியவா சரணம்.

****************************************************************************

தாமரை புஷ்பம் கொண்டு தாமரை மலர்த்தாள் தன்னை
சாமமும் போற்றி நிற்பேன் சரணமே தருவாயென்பேன் (1)

மல்லிகை மாலை உந்தன் தோளிலே சாற்றி சித்தம்
சில்லெனக் குளிர உந்தன் கண்களே கண்டு நிற்பேன் (2)

ரோஜாவால் மாலை செய்து துறவிகள் அரசனாம் என்
ராஜாவாம் உனக்குச் சூடி அழகினைப் பருகி நிற்பேன் (3)

முல்லையால் செய்த மாலை கழுத்தினில் சாற்றி இன்பத்
தெல்லையும் இதுவேயென்று உன்னையே பார்த்திருப்பேன் (4)

அரளியால் பந்தலிட்டு அரனுனை ஏற்றி வைத்தென்
சிரமதை உந்தன் தாளில் வைத்து நான் வாழ்ந்திருப்பேன் (5)

சண்பகப் பூவால் உந்தன் மார்பினில் மாலையிட்டுக்
கண்களும் குளிர உன்னை இன்புறக் கண்டு நிற்பேன் (6)

நந்தியாவட்டை மாலை நந்தீசன் உனக்கு சாற்றி
மந்திரம் உந்தன் நாமம் சொல்லியே வாழ்ந்திருப்பேன் (7)

குவளையால் மாலை செய்து மதிமுகம் ஒளிரச் சாற்றி
கவலையாம் நோயும் தீர்ந்துன் தாளிணை சேர்ந்திருப்பேன் (8)

நறுமலர் யாவும் தோற்கும் வாசனை மலர்த்தாளுக்கு
சிறுமலர் தொடுத்த மாலை சூட்டியென் மனம் களிப்பேன் (9)

மலர்களெல்லாமும் தோற்கும் மென்மையே வடிவாம் பாதம்
சிலமலர் கொண்டு பூஜை செய்து நான் களித்திருப்பேன் (10)

வாசனை மலர்கள் கோடி மாலையாய்த் தொடுத்தெடுத்தென்
ஈசனாம் உந்தன் பூஜை செய்வதே வாழ்வாய்க் கொள்வேன் (11)

பூவினால் கோர்த்த மாலை, மாலையில் வாடுமென்று
பாவினால் மாலை கோர்த்து, மேனியில் சாற்றி நிற்பேன் (12)

நாவினால் பாடி உன்னை மனதிலே எண்ணி உந்தன்
ஏவலே நாடி நிற்பேன்; பேரருள் தேடி நிற்பேன் (13)

காவலா காப்பாயென்றுன் தாளதே சிரமேற் கொண்டு
ஆவலாய் ஓடி வந்துன் சரணமே நாடி நிற்பேன் (14)

Sunday, February 5, 2017

5.2.2017 : கிருத்திகை: எக்கணமு மெய்த்தவநி னைப்பிலமர் வித்தகனை

5.2.2017 : கிருத்திகை:
************************************

ஒவ்வொரு கிருத்திகை தோறும், அந்த வடிவேலனேயான பெரியவாளின் மேலெ, அந்தக் கந்தன் புகழ் பாடும் திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் பாடுவது என்பது, இந்தக் க்ருத்திகையிலும், பெரியவாளின் அனுக்ரஹத்தில் நடந்திருக்கிறது.

பாடலைப் பெரியவாளின் சரணத்தில் அர்ப்பணிக்கிறேன்.

இன்றைய பாடல், "பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்" என்ற பாடலின் மெட்டின் அடிப்படையில், வருகிறது.

"தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான" என்ற சந்தம்.

********************************************************************

எக்கணமு மெய்த்தவநி னைப்பிலமர் வித்தகனை
நிர்மலனைப் பற்றிமிக விரைவாக (1)

பங்கயம லர்க்கரமு வந்தருளு கொற்றவனை
பித்தனவ நொத்தவனின் கழலேகி (2)

பக்தியொடு உந்தனிரு பங்கயம லற்கழலில்
என்புருக உள்ளமதும் நிலையேனோ? (3)

பற்றழிய சிட்சைதரு ரட்சகனில் பற்றிருகி
மற்றழிய உன்னினைவில் இறவேனோ? (4)

முந்தைவினை முற்றழிய பொற்கழலைப் பற்றிவரு
மந்தகனும் கட்டழியப் பெறுவேனோ? (5)

அன்புருவும் அன்னையென வந்துமனப் பந்தலதில்
தங்கிதரு மந்தசுகம் அடைவேனோ? (6)

எந்தையுனை சிந்தையினில் கொண்டுருகி இவ்வுலகில்
உந்தனிணை பத்மபதம் - உறுவேனோ? (7)