Sunday, June 16, 2019

Anusham : 16.06.2019

Anusham : 16.06.2019



நிதம் நாடு நகரமெல்லாம் சுற்றிவந்தடியாருக்கு
சதமருள் மலர்கள் கண்டேன்; அருளுமம்மலர்கள் நாதன்
பதமலர் என்றும் கண்டேன்; இதமருட் பதமே என்றும்
கதியெனக்கென்றும் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா!  (1)

அருள்மலை ஒன்றை வையம் யாவைக்கும் தாயாம் உண்மைப் 
பொருள்மலை ஒன்றை, துன்பம், படுதுயர், சோகமென்னும்
இருள்மலையெல்லாம் போக்கும் ஜோதியாம் மலையைத் தூக்கி
வரும் பத மலர்கள் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா (2)

அறம் பொருள் இன்பம் வீடு அனைத்தையும் அருளும் ஞானத் 
துறவினோர் ஒளியை, எந்தன் தாயொடு தந்தையான
உறவதை, எந்தன் நெஞ்சில் வாழ் துவராடை வேந்தை
பிறப்பறுப்பானைக் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (3)

பவரோகம் தீர்த்து ஆளும் பிஞ்சகப் பெம்மான் தன்னை,
சிவமதை,  அரையில் பூண்ட துவராடை தன்னை நித்தம்
நவநவக் கோலம் காட்டும் மதிபுனற்சடையன் தன்னை
உவந்தெனதுளமே கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (4)

வந்திடும் அடியார்க்கெல்லாம் வரமருள் தேவை, நெஞ்சில்
சிந்தனை செய்தோர்க்கெல்லாம் நலமருள் கோவை, நாளும்
வந்தனை செய்வோர் வாழ்வில் ஒளியதாம் ஜோதி தன்னை
எந்தையைக் கண்டேன் உந்தன் கலழிணை பணிந்தேனையா! (5)

கரமலர் தன்னை, நாயிற் கடையனாம் எனக்குமிங்கே
வரமருள் ஹஸ்தம் தன்னை, மெய்யடியாரை வாழ்த்திப்
பரமதும் நல்கும் பேற்றை,  கருணையாம் ஊற்றை,  கஞ்சி
வரதனைக் கண்டேன் அந்தக் கழலிணை பணிந்தேனையா! (6)

அமுததாம் தவத்தை, வாக்கை, உளமுடல் எல்லாமிங்கே
நமக்கென நல்கி நாம்செய் பாவமாம் நஞ்சையெல்லாம்
தமக்கெனக் கொள்ளும் தியாக வேந்தினை, பாகம் வாழும்
உமையவள் தன்னைக் கண்டேன்; கழலிணை பணிந்தேனயா! (7)

நஞ்சுண்ட கண்டன் தன்னை, அரவணி ஈசன் தன்னை
மஞ்சுண்ட கயிலை வாழும் மாமதி சூடி தன்னை,
அஞ்சுண்ட எந்தன் உள்ளம் ஆறுதல் பெறவே வந்த
அஞ்செழுத்தானை கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (8)

உலகெலாம் போற்றுமந்த ஒளிமலர் முகத்தைக் கண்டேன்
நலமெலாம் தருமோர் நாமம் சிவமதாய் சிரிக்கக் கண்டேன்
குலம் குணம் செல்வம் தந்து, சீரொடு சிறப்பும் நல்கும்
புலர் கதிர் முகமே கண்டேன்! கழலிணை பணிந்தேனையா! (9)

பொங்கிடும் அன்பு கண்டேன்; பொன்மலர் முகமே கண்டேன்
மங்கலம் பொங்கக் கண்டேன்; முகம் உளம் நிறையக் கண்டேன்
சங்கு சக்கரமும் கண்டேன்! உமையொரு பாகன் கண்டேன்
எங்குமானந்தம் கண்டேன் ; கழலிணை பணிந்தேனையா! (10)

Friday, March 1, 2019

Anusham : 26.2.2019

Anusham : 26.2.2019

அப்பா! நான் உன் குழந்தை இல்லையோ? குழந்தை அப்பா அம்மாவை விட்டுவிட்டு இங்கே அங்கே ஓடிக்கொண்டுதானே இருக்கும். தாய் தந்தையர் தானே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும்? 



சின்னஞ்சிறு குழந்தையது தாயவளை விட்டு புறம்
   ஓடுவதுபோல் நானும் ஓடிடுவேன்! முக்கண்ணா!
என்னுயிரே! ஆரமுதே! தாய்தந்தை ஆனவனே!
   மதலையிவன் பக்கம் நீ விட்டுவிட வேண்டா கேள்!
 
அறியாத பிள்ளையது விளையாட்டு பொம்மையதை
    கண்டவுடன் தாயவளை விட்டகன்று போவாற்போல்
சிறியேனும் வாழ்வினிலே சிறு இன்பம் தனைத்தேடி
     புறம்போகும் வேளையெனை விட்டுவிட வேண்டா கேள்!
 
நெருப்பதனை அழகான பொருளென்று தொட்டுவிட
      சிறு பிள்ளை நெருங்குவது போல் நானும் வாழ்வினிலே
அறுபகைவர் பின்னாலே அலைகின்றேன் எண்தோளாய்!
      எனைவிட்டு எங்கும் நீ போகாதே சொன்னேன் கேள்!
 
உனையென்றும் அகம்தன்னில் வைத்துந்தன் பாதமலர்
       அதைப்பற்றி வாழ்கின்ற அடியாரோ டிணங்காமல்
மனை, மக்கள் என வாழ்வில் புறம்போகும் சிறுவனெனைக்


         கைவிட்டு வேறெங்கும் போகாதே! சொன்னேன் கேள்!

Tuesday, January 8, 2019

08.01.2019 : பெரியவா மறைந்த (english) தினம்


08.01.2019 : பெரியவா மறைந்த (english) தினம்

இன்று, பெரியவா மறைந்த - English Date. இன்றும் என்றும், பெரியவா நம்முடனேதான் இருக்கிறார்கள். ஆனாலும், பூத உடலுடன் பெரியவா நம்முடனே, நம்மருகே இருந்த அந்த நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் எல்லா பக்தர்கள் மனதிலும் இருப்பது இயற்கைதான்.

என் மனதின் அந்த ஏக்கத்தினை, இந்தப் பாடலாக வடித்து, பெரியவாளின் பதமலர்களில் சமர்ப்பிக்கிறேன்.




உன்னருகில் நானிருந்து, உன்வதனம் பார்த்திருந்து
உன்மொழியே கேட்டு நிதம் உருகுவதும் எக்காலம்? (1)
கண்ணாலே காண்பதுவும் வாயாலே பேசுவதும்
எண்ணத்தில் எண்ணுவதும் நீயாவதெக்காலம்? (2)
சிந்தையெலாம் நீயாக, எந்தையுனையே நினைத்து
விந்தையுலகை விலக்கி வாழ்வதுமே எக்காலம்? (3)
எந்தனிரு விழிகளிலே உன்னுருவையே எழுதி
சுந்தரனே உனையென்றும் காணுவதும் எக்காலம்? (4)
உன்னருளால் உனையெண்ணி, உன்பதமே நான் பணிந்து
உன்னுருவை என்னுயிரில் எழுதுவதும் எக்காலம்? (5)
உனைப்பாடும் வேலையதே வேலையதாய் இருக்க மறு
நினைவெதுவும் இன்றி இனி இருப்பதுவும் எக்காலம்? (6)
உன் கோடி வார்த்தையிலே ஒன்றினையாயினும் நானிங்கு
என் வாழ்வின் வேதமெனக் கொள்வதுவும் எக்காலம்? (7)
உன் நாமம் மொழியாக, உன்னருளே வழியாக
உனபதமே கதியாக வாழுவதும் எக்காலம்? (8)

Thursday, January 3, 2019

03.01.2019 : அனுஷ நன்னாள்


03.01.2019 : அனுஷ நன்னாள்

பெரியவாளின் இந்த அனுஷ நன்னாளிலே, பெரியவாளிடம் எந்த மாதிரியான பக்தி பாவம் எனக்கு இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பக்தி இருக்கிறதா என்பது முதல் கேள்வி. பக்தியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதுதான் honest ஆன பதில். குருவாக, தெய்வமாகக் கொண்டாடப்படும் அந்தப் பெரியவாள் என் கண்களுக்கு, அகத்தில் இருக்கு ஒரு அன்பான தாத்தாதான்.

தாத்தாவிடம், பேரனுக்கு என்ன இருக்கும்? பக்தியா இருக்கும்? இல்லை. பாசம் இருக்கும். சமயத்தில் - especially - தப்பு பண்ணும்போதெல்லாம் - பயமும் இருக்கும்.

தாத்தா என்றால், அந்தப் பேரனிடம் அன்பு காட்டவேண்டாமோ? அன்பு காட்டுவது என்றால், பேரக் குழந்தையை மடியில் போட்டு அந்தத் தாத்தா சீராட்ட வேண்டாமோ? அப்படியில்லை என்றால் அது என்ன தாத்தா?

பேரக்குழந்தை, விஷமம் பண்ணத்தான் பண்ணும். அதுபாட்டுக்கும் ஓடும். விளையாடும். அடிபட்டால், தூக்கம் வந்தால், பசியெடுத்தால்தான் தாத்தா -பாட்டியிடம் வரும்.

ஐயா, பெரியவாளே! இந்தக் குழந்தையும் அப்படித்தான்....

எத்தனை விஷமம் நான் செய்தாலும், எத்தனை தப்பு பண்ணினாலும், எத்தனை உன்னிடமிருந்து விலகி ஓடினாலும், என்னை இழுத்தணைத்து, உன் மடிமீதிட்டு, அன்பு காட்டி அருள்வாய் ஐயா.....

பெரியவா சரணம்.





"வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!

உனையெண்ணி உருகிநாளும் உன்நாமம் சொல்லிச் சொல்லி
                உன்பதம் மேவுமுந்தன் அடியார்கள் இருக்க இங்கே
உனையெந்தக் கணமும் நினையா எனக்குமுன் கருணை காட்டி
                 உன்னடியாரோடிங்குன் பொன்னடி போற்ற வைத்தாய்!
அனைத்துலகுக்கும் தந்தை தாயுமாய் ஆன சோதீ!
                  முவத்து முக்கோடித் தேவர் பதம் பணி ஆதி மூலா!
எனையுமுன் சேயாய்க் கொண்டு, என் குற்றமெல்லாம் நீக்கி                
                  "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (1)


குணம் ஒன்றுமில்லேன்; குற்றம் மட்டுமே நிறைந்த நாயேன்
                 இனம் என்றுன் தொண்டர் கூட்டம் சேர்ந்திடா புன்மைப் பேயேன்
பணம் போகம் வாழ்வாய்க் கொண்டுன் பதமென்றும் நினையாத் தீயேன்
                  என்னையும் உந்தன் பாதம் பரவுமோர் பேறு தந்தாய்!
பிணமாக இந்த வாழ்வு முடியுமுன் கருணை கூர்ந்து
                   உன்னைப் பாடிடுமோரந்த வேலையே வாழ்வாய்ச் செய்வாய்!
கண நேரம் என்முன் வாராய் ! காட்சியே தந்து காவாய்!
                     "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (2)            

மனமென்னும் பேயால் நானும் படும், பாடறிவாய் நீயும்!
                    உனையெண்ணி உருகா நெஞ்சும், கண்டுநீர் சொரியாக் கண்ணும்
தினமுன்னைப் பாடா வாயும், உன்பதம் பணியா உடலும்
                     கொண்டுவாழ்ப் பதராமெனையும் பதம்தந்து காக்கும் தேவா!
புனம் காத்த வள்ளிமாதின் கரம் கொண்ட குமர வேலா!
                      அலைகடல் நஞ்சை உண்டு அமரரைக் காத்த சீலா!
சினமேதும் இன்றி இந்தச் சேயையும் காக்க வாராய்!
                     "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (3) 


காமத்தீ வாட்ட; கோபக் கனலெந்தன் உயிரை வாட்ட
                    ஆதரவு ஏதும் இன்றி ஐயா,  நான் அலைந்த காதை
காமனைத் தீயில் சுட்ட நீ நன்றாயறிந்த ஒன்றே!
                    இதழ்க்கடை சிரிப்பால் அந்த முப்புரம் சுட்ட தேவா!
சாமமே சொன்ன வேந்தன் அவனுக்கும் அருளும் வேதா!
                     காஞ்சி மா நகரில் வாழும் கருணை மாக் கடலே உமையாள்
வாமபாகமதாய்க் கொண்டோய்! கருணை கூர்ந்தருளே தாராய்!
                    "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (4) 
                      

பக்தி ஒன்றில்லேன் உன்மேல்; பக்தன்போல் நடித்து நின்றேன்!
                    உன் நாமம் சொல்லக்கூட  அருகதை ஏதும் இல்லேன்!
துக்கமே நிறைந்த வாழ்வை நித்தியம் என்றே கொண்டேன்!
                    திருப்புகழ் செப்பென்றருண கிரிக்கன்றுரைத்த பாலா!                     
முக்குணம் நீக்கி வந்த முழுமுதற் பொருளே! வேலா!
                     திக்குகள் எல்லாம் போற்றும் செந்தில்வாழ் அசுரர் காலா!
சக்தி ஆயுதமே நீக்கி வந்தமால் மருகா! என்னை
                  "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (5) 

Thursday, December 6, 2018

06.12.2018 : அனுஷ நன்னாள்

06.12.2018 : அனுஷ நன்னாள் : பெரியவா என்னும் பெரு நெருப்பு

இந்த அனுஷ நன்னாளிலே, பெரியவாளை வணங்கி, அந்தப் பெரியவாளின் நாமம் சொல்லப்போய் நான் பட்ட பாட்டை விளக்கி ஒரு பாடலாய் எழுதி, அந்தப் பாடலையும் பெரியவா பாதத்திற்கே அர்ப்பணிக்கிறேன்.

பெரியவா சரணம்.





அரனவன் நாமம் சொல்ல, அழுக்குகள் அழியும்; அந்தப்
பரனவன் பாதம் பற்ற நல்லவை சேரும் என்றெம் (1)

பெரியவர் சொன்னார்; அந்த அரனவன் வடிவேயான
பெரியவா நாமம் சொல்வாய்; நன்மையே விளையும் என்றார்! (2)

நல்லதே நடக்கும் இங்கென்றெண்ணியே நானும் காஞ்சிச்
செல்வனின் நாமம் சொன்னேன்! நடந்த அக்கதையைச் சொல்வேன்! (3)

"முக்கணா! புரமே செற்றோய்! பெரியவா!" என்று சொன்ன
அக்கணம் ஜ்வாலையொன்று நெஞ்சுளே புகுந்ததம்மா! (4)

கரும்பினை சுவைக்க நாவும் நெஞ்சுமே இனிக்கும்; ஜ்வாலை
நெருப்பினை சுவைத்து உண்டால் வாயொடு நெஞ்சும் வேகும் (5)

இரும்பினோர் இதயம் கொண்டேன்; பெரியவா நாமமென்னும் 
நெருப்பினை உண்டேன்; காமக் க்ரோதத்தாலான எந்தன் (6)

நெஞ்சமும் எரிந்ததம்மா! காமனன்றெரிந்தாற்போல
கொஞ்சமும் 'நான்' இல்லாமல் முற்றுமாய் எரிந்தேனம்மா! (7)

எரிவதைத் தடுக்க இங்கே செய்வதென்னென்று கேட்க
'அரியவன் நாமம் சொல்வாய்'! 'காப்பன்' என்றறிந்தோர் சொன்னார்! (8)

'அரியவன் வேறு - எங்கள் பெரியவா வேறு' - இல்லை!
"பெரியவா நாமம் சொல்ல, அரியவன் வருவான்" என்றார்! (9)

நீரினை உண்ட மேக வண்ணமே கொண்டான் நாமம்
வாரியே உண்டேன் - அந்தப் பெரியவா நாமம் சொல்லி! (10)

தீயினை அணைக்க நீரை ஊற்றுவார்; நாம நீரை
வாயினில் ஊற்றி நின்றேன்; நெருப்பினை வளர்க்கும் நீரை (11)

யாரிங்கே பார்த்ததுண்டு? இன்னாம நீரோ அந்தப்
பெரியவா நாமத்தீயை இன்னமும் வளர்த்த்தம்மா! (12)

வளர்ந்த அந்நெருப்பு எந்தன் முன்வினை எல்லாம் சுட்டுக்
கிளர்ந்திடக் கண்டேன்! பின்னர் வரும் ஜன்மம் எல்லாம் சுட்டு (13)

அமைந்திடக் கண்டேனிங்கே 'நான்' இல்லா என்னின் உள்ளே
அமைதியும் நிறைய எங்கும் பெரியவா நிறையக் கண்டேன்!! (14)

Saturday, October 20, 2018

14.10.18 : அனுஷ நன்னாள்

14.10.2018 : அனுஷ நன்னாள்:

இந்த நவராத்திரி சமயத்தில், இந்த அனுஷ நன்னாளிலே, அனுஷதேவனை, இந்தப் பாடலால் ஆராதனை செய்கிறேன்.

பெரியவா சரணம்.

காருண்ய மூர்த்தி வந்தார்!!



பத்தவதாரம் செய்து, பூமியே வந்த தெய்வம்
உத்தம முனிவனாக, சங்கர நாமம் தாங்கி
சித்தனாய் வேடம் பூண்டு அவனியே வந்ததம்மா!
பத்தரைக் காக்கவென்று இத்தரை வந்ததம்மா!

ஒன்பது நாட்கள் போரில் அரக்கரை அழித்த தேவி
துன்புற்றுழன்று வாடி அன்னையைத் தேடுமந்த
அன்பருக்காக கைலை நாதனை விட்டு பூமி
தன்பதம் பதித்து வந்தாள்; காவியே உடுத்தி வந்தாள்!

அட்டமா சித்தி என்னும் தேவியர் போற்றும் தேவி
சிட்டரின் வாழ்வு மேன்மையாகிடவென்று,  தீய
துட்டரை அழித்திடாமல் நல்லோராயாக்கவென்று
இட்டமாய்ப் பாதம் வைத்து பாரத பூமி வந்தாள்!

ஏழுலகெங்கும் வாழ காத்தருள் புரியும் ஈசன்
ஊழ்வந்துறுத்தக் கதறி அழுதிடும் மாக்கள் மாற
தாழ்சடை நீக்கிக் கையில் மான்மழுவதுவும் நீக்கி
ஆழிசூழ் உலகம் வந்தான்; காஞ்சிமா நகரம் வந்தான்!

அறுமுகம் கொண்டு சூரர் படைவென்ற தேவன், மாந்தர்
உறுபயம் போக்க வந்தான்; கவலைகள் நீக்க வந்தான்
அறுபகை வென்று வாழும் வகை சொல்ல தண்டம் ஏந்தி
குருவென இறங்கி வந்தான்; குவலயம் வாழ வந்தான்!

பஞ்சமா பொறிகள் வாட்டத் தவித்துடல் நடுங்கி நோயால்
அஞ்சியே அரற்றி வாழும் மாந்தரைக் காக்கத் தாயின்
நெஞ்சுகொண்டிங்கே வந்தான் தரணியைக் காக்க வந்தான்
பஞ்சின் மெல்லடியால் இந்தப் பாரை சீராக்க வந்தான்!

சதுர்வேதம் நொந்து நைந்து  கவனிப்பாரின்றி  வாடி,
விதிதனைத் தொழுதரற்றி அழுதிங்கே நின்றபோது,
மதுசூதன் அன்றோர் நாளில் வேதத்தைக் காத்தாற்போல
மதிசூடன் மறையைக்காக்க அவதாரம் செய்து வந்தான்!

முத்தேவர் சேர்ந்து இங்கே ஒன்றாகிப் புவியைக்காக்க
சித்தனின் ரூபம் கொண்டார்! தீஞ்சுவைத் தமிழில் வேதம்
மொத்தமாய் தெய்வக் குரலில் சொல்லவே வந்தார்; எங்கள்
உத்தமக் குருவாய் வந்தார்! உலகெலாம் உய்ய வந்தார்!

இருவினை அறுத்து மாய இருளினைக் களையும் ஞானத்
திருவென வந்தார்! ஜோதிச் சுடரென வந்தார்! லோக
குருவென வந்தார்! வாழ்வில் நிறையதே நிரம்ப வந்த
அருளென வந்தார்! இறையதாய் இனிதே வந்தார்!

ஓருண்மையன்றி இங்கே வேறுண்மையில்லை யென்னும்
பேருண்மை சொல்ல வந்தார்! பேருண்மை தானாய் வந்தார்!
ஆறுண்ட கொண்டை நீக்கி, மான்மழு சூலம் நீக்கி,
காருண்ய மூர்த்தி வந்தார்! காஞ்சிமா நகரே வந்தார்!

Sunday, September 16, 2018

15.09.2018 : அனுஷ நன்னாள்

15.09.2018 : அனுஷ நன்னாள்

பாரதியின் "தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு 
சூழ்கலை வாணர்களும்" என்ற பாடல் வரிகளின் சந்தத்திலே பெரியவாளைப் பற்றிப் பாடவேண்டும் என்று தோன்றியது.  

ஆனை முகனாய், குஹனாய், அன்னை பராசக்தியாய், அந்த அன்னை சிவகாமி உளம்கவர் நடராஜனாய், அந்த அன்னையேயான திருமாலாய் விளங்கும் பெரியவாளை நமஸ்கரித்து, பாடலை, பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



ஐந்து கரத்தவன் ஆனை முகக்கண
நாதனருட் கனியோன் - நித்தம்
சிந்துமருள் அமுதக்கடலாய் வரும்
முக்தனவன் நீயே! (1)

மன்றினில் ஆடிடும் வார்சடையன் நட
ராஜனெனும் தலைவன் - அவன்
சிந்தையில் ஆடிடும் சீர் மகனாம்
நடை ராஜன் அவன் நீயே! (2)

பாற்கடலிற் துயில் மாபொருளாம்
பரந்தாமனெனும் இறையோன் - அவன்
கூறும் உரைப் பொருள் தானது வாய்
திகழ்ந்திட்டவனும் நீயே! (3)

அண்டமனைத்தருள் நாயகியாம் பரா
சக்தி எனும் அன்னை - அவள்
விண்டமுதாமந்த வேதமதன் பொருள்
முற்றதுதுமாம் நீயே! (4)

வேலது கொண்டசுரர் குலம் மாய்த்திடும்
சூரனவன் முருகன் - எழில்
கோலமதே உரு கொண்டருள் செய்திடும்
சித்தனவன் நீயே! (5)

அத்தனை தெய்வமும் ஆனவுரு குரு
முத்தனவன் நீயே - எங்கள்
சித்தம் உறைந்தென்றும் இன்னருள் செய்திடும்
வித்தகனும் நீயே! (6)