Monday, December 12, 2016

12.12.2016 : கார்த்திகைப் பண்டிகை. திருவண்ணாமலை தீபம்

12.12.2016 : கார்த்திகைப் பண்டிகை. திருவண்ணாமலை தீபம்
**************************************************************

இன்றுபெரிய கார்த்திகை. திருவண்ணாமலையிலே தீபத் திருவிழா.

ஒவ்வொரு கிருத்திகையிலும் அந்த நடமாடும் தெய்வத்தின்மேல், திருப்புகழ் மெட்டிலே ஒரு பாடல் பாடி, அவர் பாதத்திலே சமர்ப்பிப்பது, அவரருளாலே, இன்றும் தொடர்கிறது.

இன்றைய புயல் நாளிலே, சென்னையும் அதனைச் சுற்றிய இடங்களும் பெரும் சேதமுறாமல், பெரும் அழிவுகள் நிகழாமல் காக்கவேண்டுமெனப் ப்ரார்த்தனையோடு, பாடலை சமர்ப்பிக்கிறேன்.

*******************************************************************************

"பாதிமதி நதி" மெட்டு.

தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான



வேத முறைதிரு நாத னவனுரு
ஓத மகற்றிடு - சிவநேசா!

வாத மவைதனை வேத னையைமிக
ஓட அருள்திரு - சிவபாலா!

போக மதில்மன மூழ்கி அழுதிடு
சோக மயல்தனை - களைவோனே

வேக நடையுடன் நாடு முழுதிலும்
பாதம் பதிவிடு - குருநாதா!

நாம மொருமுறை ஓது மடியவர்
வாழ்வி லொளியருள் - பெரியோனே

காம னுயிர்தரு மாது உறைதிரு
காஞ்சி வளநகர் - உறைவோனே

நாளு முனைமற வாத நினைவொடு
நானு மவனியில் - உன்தாளே

பாடும் பணியதை நாளும் நடத்திட
தேடும் பதமதைத் - தருவாயே

ஓல மிகுந்திடு ஞால மிதை விட
சீலக் கனிமுகம் - தருவாயே

கால னெனைக்கொடு போகு நொடியெனை
வேக மணைத்தருள் - புரிவாயே!

Monday, November 28, 2016

29.11.2016: இன்று, அனுஷம். எங்கள் ஐயன் மேல், ஒரு பாடல் : ஐயன் புகழ் பாடுங்கள்

29.11.2016: இன்று, அனுஷம். எங்கள் ஐயன் மேல், ஒரு பாடல் :

ராகம் : ரீதிகௌளை

பல்லவி :

ஐயன் புகழ் பாடுங்கள் – எங்கள்
மெய்யன் புகழ் பாடுங்கள் – (ஐயன்)

அனுபல்லவி :

பாற்கடல் துயின்று அரவணி பூண்டு பார்
போற்றிட வந்த சங்கரன் இவனென்று (ஐயன்)

சரணம் :

தாயவள் மானுட உருக்கொண்டு பார்மிசை
சேயரைக் காத்திட வந்தனள் என்று எம் (ஐயன்)

ஐங்கரன் தம்பியாய்ப் பார்மிசை வந்தவர்
பங்கயப் பதமலர் வாழ்த்தியே பாடி (ஐயன்)

Monday, November 14, 2016

15.11.2016 : நேற்று கிருத்திகை நாள் : அண்டபகி ரண்டமும் கண்டுளம கிழ்ந்திடும்

15.11.2016 : நேற்று கிருத்திகை நாள்
************************************************************

கிருத்திகை தோறும், ஒரு திருப்புகழ் சந்தத்திலே அந்த ஸ்வாமிநாதனே வடிவாய் வந்த நம் அன்பு குருநாதனை, பெரியவாளைப் பாடும் பேற்றினை, இந்தக் கிருத்திகைக்கிம் கொடுத்த பதமலர்களைப் போற்றி, இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்.
***************************************************************************

"தண்டையணி வெண்டையும்" என்ற திருப்புகழ் சந்தம் :

தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
தந்ததன தந்தனம் – தந்ததான

*************************************************************************

அண்டபகி ரண்டமும் கண்டுளம கிழ்ந்திடும்
வந்தடிப ணிந்திடும் எங்கள் ஈசா!

தண்டமுடன் வந்திடும் செந்தமிழும் தந்திடும்
விந்தைபல செய்திடும் கஞ்சி நாதா!

இந்தபுவி எங்கணும் தன்பதமும் அன்பொடு
தந்தருளி நின்றஎம் செந்தில் நாதா!

அந்தமிலி உன்பதம் என்மனமுறைந்திடும்
அந்தவொரு இன்பமும் தந்திடாயோ

அந்தகனு மஞ்சிடும் முந்தைவினை துஞ்சிடும்
தண்ணருளும் உன்முகம் தந்திடாதோ

தஞ்சமென உன்பதம் சந்ததம் நினைந்திடும்
நெஞ்சமதும் தந்தருள் எம்பிரானே!

அஞ்சலென நின்றரும் செந்திரு கரம்தரும்
சுந்தரனை எந்தையை சிந்தைகூர

துன்பநிலை வெஞ்சமர் சஞ்சலம ழிந்திடும்
இன்பமிகும் எங்கிலும் உண்மைதானே!

Tuesday, November 1, 2016

02.11.2016 : அனுஷ உத்ஸவம் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

02.11.2016 : அனுஷ உத்ஸவம்
*********************************************************


இன்று, உலகெங்கும் அனுஷ வைபவம் கொண்டாடப்படுகிறது.


இந்த அனுஷ தினத்திலே, அந்த அனுஷ நாயகனுக்கு, கண்ணனுக்குப் பெரியாழ்வார் பாடியது போல் ஒரு பல்லாண்டு பாட வேண்டுமென்று தோன்றியது.


அவாவினைக் கொடுத்து, அந்த ஆசை நிறைவேற சந்தமும் வார்த்தையும் கொடுத்தருளிய பெரியவாளின் பதமலருக்கு இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.


****************************************************************************


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அடியாரெம் நெஞ்சம் என்னும்
இல்லத்தில்  இறை நீயும் சுகமாக வாழவே பல்லாண்டு சொல்லி நின்றேன் (1)

நினது சீரடியார்கள் குழுவதில் நின்னோடு பிரிவின்றி பல்லாண்டு
உனையிங்கு எமக்கென்று தருமுந்தன் நாமத்தோடாயிரம் பல்லாண்டு
தனையேதம் அடியார்கள் தமக்குடன் தரும்பாத மலரோடு பல்லாண்டு
வினையெலாம் தகர்க்குமத் தண்டமும் காவியும் உடன்வரப் பல்லாண்டு (2)

மனதிலே உனையன்றி வேறேதும் நினைவின்றி ஆயிரம் பல்லாண்டு
எனதென்று ஏதுமிங்கில்லாமல் உன்னோடு கலந்திங்கு பல்லாண்டு
நானென்ற எண்ணமிங்கற்றுவுன் அடியோடு ஆயிரம் பல்லாண்டு
வானுறு தேவர்கள் வண்ணமாய் ஈசனாம் உன்னோடு பல்லாண்டு (3)

காணுமவ்விடமெலாம் சங்கரன் தாளையே கண்டிங்கு வாழுமடியீர்!
வேணுவை இசைக்குமவ் வித்தகன் போற்றிடும் சங்கரன் அவதாரமாய்
தாணுமாலயனுமாய் நின்றவன் சேவடி துணையெனப் பல்லாண்டு
ஊணுடல் தேய நடந்த அத் தெய்வத்திற்கேயனப் பல்லாண்டு (4)

எந்தை தாயோடு அவர்தந்தை  தாயுமாய் தன்பாத சேவகமே
எந்தையே தந்திங்கு எனையாண்ட அன்பினைப் பாடியே பல்லாண்டு
பிந்தியும் மகன், மகள், அவர்குலச் சிறாரென என்றேன்றுமென்றென்றுமாய்
சிந்தையில் தேவனாம் அவனையே வைத்திந்தக் குலம்வாழப் பல்லாண்டு (5)

வேதம் நிலைபெறவென்றிங்கு வாழ்பவன் பேர் சொல்லிப் பல்லாண்டு
ஆதவனென்றிங்கு இருள் தகர்த்தாளுவான் புகழ்பாடிப் பல்லாண்டு
போதம் அருளிட வந்ததோர் ஞானச் சுடருக்குப் பல்லாண்டு
நாதன் அவன் நினைவாகவே வாழ்ந்திடும் தொண்டர்க்குப் பல்லாண்டு (6)

பக்தர்க்கதிபதி அவன் வாழும் காஞ்சியம்பதிக்கொரு பல்லாண்டு
திக்கெலாம் போற்றிடும் அண்டர்கோன் அவனுடை தண்டமும் பல்லாண்டு
சக்தியும் சிவமுமாய் நின்றிடும் அவன் ருத்திராக்ஷமும் பல்லாண்டு
துக்கமெலாமிங்கு நீக்கிடும் தெய்வமாக் குரலுக்குப் பல்லாண்டு (7)

ஜகத்குருவென்றிந்த உலகெலாம் போற்றிடும் திருவுக்குப் பல்லாண்டு
அகத்துளே வந்துனின்றருளாட்சி செய்திடும் குருவுக்குப் பல்லாண்டு
புகலென அவன் பாதம் பற்றினோர்க்குடனருள் சித்தர்க்குப் பல்லாண்டு
ககனமும் வானமும் புவனமும் வாழ்த்துமோர் முக்தர்க்குப் பல்லாண்டு       (8)

வெந்துயர் அறுத்திடும் சீலனை சுமந்திட்ட பல்லாக்கு பல்லாண்டு
அன்புரு வாழ்ந்த அம்மேனா அதற்குமோர் ஆயிரம் பல்லாண்டு
எந்தையும் தாங்கலாய்க் கைப்பிடித்தேகிய வண்டியும் பல்லாண்டு
சுந்தரன் பொற்பதம் அதனையே தாங்கிய இடமெலாம் பல்லாண்டு (9)

கண்ணெச்சில் நேராமல், எத்தீங்கும் வாராதென் ஐயர்க்குப் பல்லாண்டு
பண்ணெடுத்தாயிரம் பாடலால் காப்பிட்டு ஆயிரம் பல்லாண்டு
விண்ணவர் கோனுக்கு, எம்முடை அமுதத்திற்காயிரம் பல்லாண்டு
எண்ணிடும் எண்ணமெலாம் நிறைந்தானுக்கு நித்தியம் பல்லாண்டு (10)

நற்றுணை ஆகிடும் ரக்ஷையாம் குருபாத ரக்ஷைக்கோர் பல்லாண்டு
பற்றினை நீக்கியே பரமனைத் தரும்பாதக் குறடுக்கோர் பல்லாண்டு
உற்றெதிர் வரும்துன்பம் களைந்தருள் பாதுகை ஆயிரம் பல்லாண்டு
கற்றிலா மூடர்க்கும் அருள்ஞானப் பாதுகை புகழ்பாடிப் பல்லாண்டு (11)


பல்லாண்டு பாடியே பரவுவோர் அவரொடும் ஆயிரம் பல்லாண்டு
நல்லறம் ஆகுமாம் ஐயனைத் தொழுதிடல்; அவருக்கே பல்லாண்டு
சொல்லறம் ஆகிடும் “பெரியவா” என்றவோர் சொல்லுக்கே பல்லாண்டு

எல்லோரும் குருபதம் உற்றிங்கு வாழவே ஆயிரம் பல்லாண்டு (12)

Friday, October 28, 2016

29.10.2016 : தீபாவளி நன்னாள்

29.10.2016 : தீபாவளி நன்னாள்

பெரியவா சரணம். அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்றைய நாளில், "ஜனனி நினுவினா" என்று சுப்பராய ஸாஸ்த்திரிகளின், ரீதிகௌளையில் அமைந்த பாடலின் வரிகள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

"ஈ ஜகமுலோ திக்கெவரம்மா" என்று மனமும் உயிரும் உருகிக் கரையும் அற்புதமான பாடல்.......

அந்த ஜகஜனனியேதானே இங்கே நமது பெரியவாளாய் வந்திருக்கிறாள்....

பெரியவாளின் பதம் பணிந்து, ரீதி கௌளையில் ஒரு பாடல்....

********************************************************************


ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….
இன்முகம் காட்டி எந்தன் (ஐயா)

பொன்மலர்ப் பாதம் நோக
உலகெல்லாம் நடந்தீரே
சின்னஞ்சிறுவன் இவன்
குரலை கேட்டிங்கு
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

உமையே நினைத்திருந்தேன்
உயிரும் தரித்திருந்தேன்
இமையும் மூடாது விழியில் ஆறோட
வினையின் வேர்மூலம் விலக்கும் பதம் சேர
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

Tuesday, October 18, 2016

18.10.2016 : கிருத்திகை : பத்தர்க்கென நச்சை அமுதென

18.10.2016 : இன்று, கிருத்திகை.


இந்த கிருத்திகை நாட்கள் தோறும், கையில் வேலில்லாமல், தண்டத்துடன் வந்து நம்மிடம் நடமாடிய ஸ்வாமிநாதனேயாகிய பெரியவாளின் மேல், திருப்புகழ் பாடலின் சந்தத்தில், ஒரு பாடலைப் பாடுவது என்று ஆவல்.


இன்றைய கிரித்திகையிலும் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொடுத்த பெரியவாளின் பதகமலங்களுக்கு இந்தப் பாடலை காணிக்கையாக்குகிறேன்.
************************************************************


"முத்தைத் திரு பத்தித் திருநகை" என்ற திருப்புகழ் சந்தத்திலே இந்த்ப் பாடலை அமைந்திருக்கிறது....


******************************************************************************


பத்தர்க்கென நச்சை அமுதென
இச்சையொடு முற்றும் பருகிய
உள்ளம்கவர் கள்வன் அவனது - வடிவான


அத்தன்பெரு வித்தன் மனதினில்
நித்தம்உறை சித்தன் கரமது
நித்தம்தரு பக்திக் கனியது - வரமாக


புத்தன்மத மித்யைச் சிதறிட
புத்தம்புது வித்தைக் கொடுதரு
சுத்தன்உரு சித்தன் அருளொடு - இனிதேகி


இக்கட்டுக ளைப்பற் பொடிதரு
திக்கட்ரவர் கட்குத் துணைவரு
ரக்ஷித்தருள் நின்பொற் பதமது - தருவாயே!