Thursday, August 25, 2016

25.08.2016 : கண்ணன் மீண்டும் வந்தனன்!

25.08.2016 : கண்ணன் மீண்டும் வந்தனன்
********************************************************************


இன்று, கிருஷ்ண ஜயந்தி. எல்லார் இல்லங்களிலும் குழந்தைக் கண்ணன் தன் குஞ்சுக் கால்கள் வைத்து வரும் நாள்.

எங்கள் இல்லத்திலும் இன்று கண்ணன் வந்தான். வெண்ணெய் உண்டு மகிழ்ந்தான்.

கண்ணன் வரும் இந்த நாளில், கீதை சொல்லி ஜகத்குருவாய் நின்ற அந்த மாயன், தனது ஸ்வரூபம் ஒளித்து, அப்படியே opposite ஆக வந்து, தான் சொன்ன கீதை வழியே தானே வாழ்ந்து காட்டியதைப் பாட வேண்டும்போல் தோன்றியது.

வெண்ணெய் திருடி உண்டவன், உணவும் உட்கொள்ளாது பட்டினி கிடந்து, விரதம் இருந்து இந்த உலகு இன்புறச் செய்ததைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது.

பார்த்தனுக்குத் தேரோட்டியவன் கால் கடுக்க நடந்ததையும் சொல்ல வேண்டாமா?

கோபிகைகள் சூழ நின்றவன், பதினாறாயிரம் மனைவியர் கொண்டவன், துறவு பூண்டு வந்ததைச் சொல்ல வேண்டாமா?

"பொய்யன்" என்றே பெயர் பெற்றோன், மெய்யொன்றே புகலும் ஞானியாய் வந்ததைச் சொல்லவேண்டாமா?

தீயவர்களைக் குழந்தையாயிருக்கும்போதே மாய்த்தவன், இந்த ஓர் ஜகத்குரு அவதாரத்தில், தீயவர்கள் மனதையும் தனது அன்பு வெள்ளத்தால் மாற்றி அந்தத் தீமையை மட்டும் அழித்ததைப் பேச வேண்டாமா?

இதையெல்லாம் சொல்லும் விதத்தில் ஒரு சிறிய பாடல்.

அந்தக் கிருஷ்ண ஜகத்குருவுக்கும், அந்த கோவிந்தனின் நாமத்தைப் போற்றிய சங்கர குருவெனவே வந்த எங்கள் சங்கரனாம் பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கும், இப்பாடல், சமர்ப்பணம்.

*************

கீதை சொன்னக் கண்ணன் தானும் வாழ்ந்து காட்ட வந்தனன்
பாதை காட்ட காவி பூண்டு தானும் பூமி வந்தனன்
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் உணவொழித்து நின்றனன்
வண்ணத் தேரை ஓட்டி வந்தோன், கால் கடுக்க வந்தனன்
பெண்கள் சூழ நின்ற கண்ணன் துறவு பூண்டு வந்தனன்
எண்ணிலாத பொய்யன் மெய்யை மட்டும் சொல்லி நின்றனன்!
தீயர் மாயச் செய்த மாயன் கருணை ரூபம் கொண்டனன்
தீயர் மனமும் மாறும் அன்பு காட்டித் தீமை கொன்றனன்

***********************

பெரியவா சரணம், சரணம்

Wednesday, August 24, 2016

24.08.2016 : கிருத்திகை நாள்: வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ

24.08.2016 : கிருத்திகை நாள்

இன்று, கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்த அறுமுகன் மேலே ஒரு ஆறு பதங்கள், பாமாலையாய்த் தொடுத்து சாற்றுவது வழக்கம்.

அந்தப் பாமாலைகள் 108 நிறைவடைந்து விட்டன.

என்றாலும், கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழில் ஒரு திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது,  சென்ற கிருத்திகையிலிருந்து தொடங்கி இருக்கிறது.

இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.

இன்றைய பாடல் : "நாத விந்து கலாதீ நமோ நமோ" மெட்டில்.

வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ


வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ
வேத ரூபனாய் நின்றாய் நமோ நமோ
வேதியர் தொழும் பாதா நமோ நமோ  - காஞ்சிவாழ்

காமகோடிப் ரஸாதா நமோ நமோ
நாமகோடிப் ரகாஸா நமோ நமோ
சேமகோடி பொற்பாதா நமோ நமோ - குருநாதா!

ஆதி சங்கரி பாலா நமோ நமோ
ஜோதி மங்கல ரூபா நமோ நமோ
பூதி கமலசெம் பாதா நமோ நமோ – வருவாயே!

யோகமந்த்ரஸ்வ ரூபா நமோ நமோ
ஆகமம் உரை தேவா நமோ நமோ

சோகம் தீர்க்கும்நற் பாதா நமோ – அருள்தாராய்!

பாடலின் இறுதிப் பதங்கள் "காஞ்சிவாழ் குருநாதா! வருவாயே! அருள்தாராய்" என்று அமைந்திருப்பதும் பெரியவா கருணையே. 

Thursday, August 11, 2016

12.08.2016 : அனுஷ தினம் : பெரியவா பாத தசகம்:

12.08.2016 : அனுஷ தினம்

இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளை, அகில லோக ரக்ஷகனை, தீன சரண்யனை, ஜகத் குருவை, அவரது கருணையை, அருளை, சிந்திக்கும்போது, திருமூலரின் இந்தப் பாடல்தான் நினவுக்கு வருகிறது :

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே   (திருமந்திரம் 139)

அப்படி சிந்திக்கும்போது, பெரியவாளின் பாதாரவிந்தமும், அந்தப் பாதமலர்களின் வழியே பெருகி ஓடும் அருட்தேனும் கண்முன் வருகிறது. 

திருமூலரின் மற்றொரு பாடலும் நினைவுக்கு வருகிறது : 

திருவடியே சிவமாவது தேறில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே  (திருமந்திரம் 138)


அனுஷத்தன்று, அகத்தில் இல்லாமல் அலுவலக வேலையாய் டெல்லியில் இன்றைய தினம் இருக்கும்போது, என்ன செய்வது? அனுஷ பூஜை எப்படிச் செய்வது?

அந்தத் திருவடி மலர்களை சிந்திப்பதே இன்றைய அனுஷ பூஜை என்றும் தோன்றியது.

அந்தப் பதமலர்களுக்கு, திருவடிகளுக்கு, இந்தப் பாடல் அர்ப்பணம். 

பெரியவா பாத தசகம்: 

எங்குலம் வாழ வந்த, பங்கயப் பாதம் போற்றி!
மங்கலம் சேர்க்கும் பைம்பூண் பதமலர்க் கமலம் போற்றி
பொங்குமாக் கடலாய்க் கருணை பொழிமலர்ப் பதமே போற்றி
சங்கர மூர்த்தி பாதம் பணிந்தனம் போற்றி போற்றி! (1)

மும்மலம் நீக்க வந்த முகிழ்மலர்ப் பதமே போற்றி
இம்மையும் மறுமை நோயும் தீர்த்திடும் மருந்தே போற்றி
அம்மையாய் அப்பனாய் வந்தருள்தரும் சரணம் போற்றி!
எம்மையே காக்கவந்த சேவடி போற்றி! போற்றி (2)

நாடெலாம் நடந்து எங்கள் குறை களை கழலே போற்றி
காடெலாம் திரிந்து எம்மைக் காத்திடும் நிழலே போற்றி
வீடுபேறதற்கும் மேலாம் பதம் தரும் பதமே போற்றி
தேடிவந்தபயம் நல்கும் தீம்பதம் போற்றி போற்றி! (3)

அன்று இவ்வுலகம் மூன்றும் அளந்த இவ்வடிகள் போற்றி
கன்றையும் சகடம் தானும் உதைத்த அக்கழல்கள் போற்றி
ஒன்றதாம் பொருளைச் சொல்ல உலவிய பதங்கள் போற்றி
நின்றெமதிதயம் வாழும் சீரடி போற்றி போற்றி! (4)

கல்லையும் பெண்ணாய்ப் பாவம் தீர்த்த சேவடிகள் போற்றி
தில்லையில் நித்தம் நடனம் ஆடும் நல்லடிகள் போற்றி
ஒல்லை வந்தடியார் துன்பம் நீக்கும் சீரடிகள் போற்றி
நல்லவர் நெஞ்சில் வாழும் பொற்பதம் போற்றி போற்றி (5)

பாண்டவர்க்காகத் தூது நடந்த சேவடிகள்  போற்றி
தாண்டவம் ஆடிக் காளி செறுக்கழி பதமே போற்றி
ஆண்டவன் அவனாய் வந்து ஆண்டருள் பதமே போற்றி
வேண்டினோர்க்கருளும் நாதன் குரைகழல் போற்றி போற்றி! (6)

பஞ்சினும் மென்மையாமச் செம்மலர்ப் பதங்கள் போற்றி
அஞ்சிடும் அடியார்க்கெல்லாம் அடைக்கலம் ஆனாய் போற்றி
தஞ்சமென்றலருவோர்க்கு அபயமாம் அடிகள் போற்றி
நஞ்சுடைக் கண்டன் ரூபன் பொற்பதம் போற்றி போற்றி (7)

அரியாசனத்திருந்து அகிலமே ஆண்டாய் போற்றி!
அரி அயன் தேடிக் காணா திருவடி மலர்கள் போற்றி
பரிந்தெனக்கபயம் நல்கும் பங்கய மலர்கள் போற்றி
திரிபுரம் செற்ற தேவே நின்னடி போற்றி போற்றி! (8)

வேதமே வாழவென்று திரிந்த அவ்வடிகள் போற்றி
ஆதவன் இயக்கம் போன்று ஓய்விலாப் பதங்கள் போற்றி
மாதவம் செய்வோருக்கும் கிட்டறும் பதமே போற்றி
நாதனே தானாயான நற்பதம் போற்றி போற்றி! (9)

குலம், கல்வி செல்வம் யாவும் அருளும் சீரடிகள் போற்றி
புலருமோர்க் காலைப் போதில் தொழுதனன் அடிகள் போற்றி
அலர்கதிர் ஞாயிறென்ன ஒளிரும் சேவடிகள் போற்றி
மலருமே தோற்கும் நாதன் மெல்லடி போற்றி! போற்றி! (10)