Monday, July 23, 2018

23.07.2018 : அனுஷ நாள்


23.07.2018 : அனுஷ நன்னாள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. இந்த அனுஷ நாளிலே அடியார்களுக்கெல்லாம் என்னவெல்லாம் ஆசைகள் இருக்கும்? பெரியவா அதிஷ்டானம் செல்லவும், காஞ்சிவாழ் முனியின் அபிஷேகம் காணவும், அவருக்கு பூஜைகள் செய்யவும் என்று நிச்சயம் ஆசைகள் இருக்கும்.

அடியேனுக்கும் அவ்விதமே.

ஆனால், இந்த அனுஷ நாளிலே, வேறு வேறு விதமான ஆசைகள் மனதிலே தோன்றுகின்றன. ஒரு “time machine” ல் ஏறி, அந்த உம்மாச்சித் தாத்தாவின் குழந்தைப் பருவத்திலிருந்து, அந்தத் தெய்வக் குழந்தையின் பக்கத்திலேயே இருந்து பார்த்துப் பார்த்துக் களிக்க வேண்டுமென்று தோன்றியது.

மனதிலே கண்டு களித்த அந்த ஆசைகளையெல்லாம், இங்கே பட்டியலிடுகிறேன்.

பெரியவா சரணம்.



*************************************************************************************************************************

குழந்தையாய்த் தவழும் உன்னை அள்ளியே அணைக்க  ஆசை
பொழுதெலாம் உன்னை மார்பில் தூக்கியே சுமக்க ஆசை

சதுர்வேதம் மணக்கும் வாயில் வந்திடும் மழலை எல்லாம்
நிதமுமே கேட்க ஆசை; மறையதால் நிறைய ஆசை

ஓடியே ஆடும் தெய்வச் சிறுவனாம் உந்தன் பக்கம்
நாடியே நித்தம் நானும் இருந்துளம் களிக்க ஆசை

விளையாட்டுப் பிள்ளை நீயும் அலுத்தகம் திரும்பும்போது
களைப்பெலாம் போக்கி உண்டி கொடுத்துனைப் பார்க்க ஆசை

பள்ளிக்குப் பாடம் நீயும் படிக்கவே செல்லும்போது
துள்ளி நீ செல்லும் அழகை பார்த்து நான் ரசிக்க ஆசை

உலகுக்கே குருவாம் நீயும் வகுப்பிலே இருக்கும்போது
பல கற்கும் குழந்தை உன்னைப் பார்த்துளம் களிக்க ஆசை

கேட்டிடும் கேள்விக்கெல்லாம் விடைகளைச் சொல்லும் செல்லச்
சூட்டிகைக் கன்றைக் கண்டு வியக்கவே நெஞ்சில் ஆசை

உன்பாத ரேகை கண்டு, உருகியே நின்றாரந்த
நன்மகனாரைக் கண்டு வணங்கியே நிற்க ஆசை

குருவினைக் கண்டு நெஞ்சம் சிலிர்த்தவர் அண்மை தேடிக்
கருக்கலில் ஓடிச்சென்ற குழந்தையைக் கொஞ்ச ஆசை

வந்த அச்சிறுவன் பின்னாள் "பெரியவாள்" ஆகப் போகும்
விந்தையை அறிந்த பரம குருவையும் பார்க்க ஆசை

உலகுக்கே குருவாம் உன்னைத் தரணிக்குத் தந்த பெற்றோர்
தலம் நாடி நமஸ்கரித்துப் போற்றியே நிற்க ஆசை

குருமார்கள் இறையைச் சேர, மடமுன்னை அழைக்க நீயும்
அருந்தவ வாழ்வை நாடிச் சென்றதைப் பார்க்க ஆசை

எதற்கிந்த அழைப்பு என்று அறியாமல் வண்டி ஏறிப்
பதறிய குழந்தை தன்னை அணைத்தங்கு நிற்க ஆசை

எதற்கிந்த அழைப்பு என்று அறிந்தபின் ராம நாமம்
அதனையே சொல்லிச் சென்ற குழந்தையோடிருக்க ஆசை

சிறுவனாய்ச் சென்று லோக குருவாக உயர்ந்த நாதன்
திருமலர்ப் பாதம் தன்னை வணங்கியே நிற்க ஆசை

குருகுல வாசம் செய்யும் பரமனைத் தொழுது நாளும்
அருகினில் இருந்து சேவை செய்யவே மனதில் ஆசை

பாடமே சொல்ல வந்த குரு அவர் உன்னிடத்தில்
பாடமே கேட்ட அந்த நாளுன்கூடிருக்க ஆசை

காவிரியாற்றில் நீந்தி அக்கரை சேரும் நாதன்
சேவடி சென்னி வைத்து வாழ்வினைக் கடக்க ஆசை

காசியாத் திரையாய்ச் செல்லும் பால சன்யாசியோடு
பேசியே ஊரூராக யாத்திரை செல்ல ஆசை

பால சன்யாசி காஞ்சி ஸ்வாமியாய் உயர்ந்திருக்கும்
கோலமே கண்டு நித்தம் கூடவே இருக்க ஆசை

பாத யாத்திரையாய் எங்கும் பெரியவா செல்லும் நேரம்
பாதைசீர் திருத்தி வைத்துப் பாதமே தாங்க ஆசை

பள்ளிக் கல்லூரி பாடம் சந்தேகமெல்லாம் கூட,
மெள்ள உம்மாச்சித் தாத்தா அவரிடம் கேட்க ஆசை

உம்மாச்சித் தாத்தா உண்ட உச்சிஷ்டம் உண்டு நானும்
சும்மாவே இருந்து சொல்லும் அற்றுப் போய்விடவே ஆசை

மானுடப் போர்வை போர்த்து நாடெலாம் நடந்த தெய்வக்
கோனினை நாளும் போதும் நெஞ்சிலே சுமக்க ஆசை

No comments:

Post a Comment