Thursday, December 6, 2018

06.12.2018 : அனுஷ நன்னாள்

06.12.2018 : அனுஷ நன்னாள் : பெரியவா என்னும் பெரு நெருப்பு

இந்த அனுஷ நன்னாளிலே, பெரியவாளை வணங்கி, அந்தப் பெரியவாளின் நாமம் சொல்லப்போய் நான் பட்ட பாட்டை விளக்கி ஒரு பாடலாய் எழுதி, அந்தப் பாடலையும் பெரியவா பாதத்திற்கே அர்ப்பணிக்கிறேன்.

பெரியவா சரணம்.





அரனவன் நாமம் சொல்ல, அழுக்குகள் அழியும்; அந்தப்
பரனவன் பாதம் பற்ற நல்லவை சேரும் என்றெம் (1)

பெரியவர் சொன்னார்; அந்த அரனவன் வடிவேயான
பெரியவா நாமம் சொல்வாய்; நன்மையே விளையும் என்றார்! (2)

நல்லதே நடக்கும் இங்கென்றெண்ணியே நானும் காஞ்சிச்
செல்வனின் நாமம் சொன்னேன்! நடந்த அக்கதையைச் சொல்வேன்! (3)

"முக்கணா! புரமே செற்றோய்! பெரியவா!" என்று சொன்ன
அக்கணம் ஜ்வாலையொன்று நெஞ்சுளே புகுந்ததம்மா! (4)

கரும்பினை சுவைக்க நாவும் நெஞ்சுமே இனிக்கும்; ஜ்வாலை
நெருப்பினை சுவைத்து உண்டால் வாயொடு நெஞ்சும் வேகும் (5)

இரும்பினோர் இதயம் கொண்டேன்; பெரியவா நாமமென்னும் 
நெருப்பினை உண்டேன்; காமக் க்ரோதத்தாலான எந்தன் (6)

நெஞ்சமும் எரிந்ததம்மா! காமனன்றெரிந்தாற்போல
கொஞ்சமும் 'நான்' இல்லாமல் முற்றுமாய் எரிந்தேனம்மா! (7)

எரிவதைத் தடுக்க இங்கே செய்வதென்னென்று கேட்க
'அரியவன் நாமம் சொல்வாய்'! 'காப்பன்' என்றறிந்தோர் சொன்னார்! (8)

'அரியவன் வேறு - எங்கள் பெரியவா வேறு' - இல்லை!
"பெரியவா நாமம் சொல்ல, அரியவன் வருவான்" என்றார்! (9)

நீரினை உண்ட மேக வண்ணமே கொண்டான் நாமம்
வாரியே உண்டேன் - அந்தப் பெரியவா நாமம் சொல்லி! (10)

தீயினை அணைக்க நீரை ஊற்றுவார்; நாம நீரை
வாயினில் ஊற்றி நின்றேன்; நெருப்பினை வளர்க்கும் நீரை (11)

யாரிங்கே பார்த்ததுண்டு? இன்னாம நீரோ அந்தப்
பெரியவா நாமத்தீயை இன்னமும் வளர்த்த்தம்மா! (12)

வளர்ந்த அந்நெருப்பு எந்தன் முன்வினை எல்லாம் சுட்டுக்
கிளர்ந்திடக் கண்டேன்! பின்னர் வரும் ஜன்மம் எல்லாம் சுட்டு (13)

அமைந்திடக் கண்டேனிங்கே 'நான்' இல்லா என்னின் உள்ளே
அமைதியும் நிறைய எங்கும் பெரியவா நிறையக் கண்டேன்!! (14)

No comments:

Post a Comment