Tuesday, January 8, 2019

08.01.2019 : பெரியவா மறைந்த (english) தினம்


08.01.2019 : பெரியவா மறைந்த (english) தினம்

இன்று, பெரியவா மறைந்த - English Date. இன்றும் என்றும், பெரியவா நம்முடனேதான் இருக்கிறார்கள். ஆனாலும், பூத உடலுடன் பெரியவா நம்முடனே, நம்மருகே இருந்த அந்த நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் எல்லா பக்தர்கள் மனதிலும் இருப்பது இயற்கைதான்.

என் மனதின் அந்த ஏக்கத்தினை, இந்தப் பாடலாக வடித்து, பெரியவாளின் பதமலர்களில் சமர்ப்பிக்கிறேன்.




உன்னருகில் நானிருந்து, உன்வதனம் பார்த்திருந்து
உன்மொழியே கேட்டு நிதம் உருகுவதும் எக்காலம்? (1)
கண்ணாலே காண்பதுவும் வாயாலே பேசுவதும்
எண்ணத்தில் எண்ணுவதும் நீயாவதெக்காலம்? (2)
சிந்தையெலாம் நீயாக, எந்தையுனையே நினைத்து
விந்தையுலகை விலக்கி வாழ்வதுமே எக்காலம்? (3)
எந்தனிரு விழிகளிலே உன்னுருவையே எழுதி
சுந்தரனே உனையென்றும் காணுவதும் எக்காலம்? (4)
உன்னருளால் உனையெண்ணி, உன்பதமே நான் பணிந்து
உன்னுருவை என்னுயிரில் எழுதுவதும் எக்காலம்? (5)
உனைப்பாடும் வேலையதே வேலையதாய் இருக்க மறு
நினைவெதுவும் இன்றி இனி இருப்பதுவும் எக்காலம்? (6)
உன் கோடி வார்த்தையிலே ஒன்றினையாயினும் நானிங்கு
என் வாழ்வின் வேதமெனக் கொள்வதுவும் எக்காலம்? (7)
உன் நாமம் மொழியாக, உன்னருளே வழியாக
உனபதமே கதியாக வாழுவதும் எக்காலம்? (8)

No comments:

Post a Comment