Sunday, August 23, 2015

ருசியிலாப் பாடலை ரசிக்காதிருப்பையோ??

22.08.2015 அன்று எழுதியது

நாளை, அனுஷம். பெரியவா வைபவம்.
நேற்று, ப்ரதோஷ மாமாவின் தகப்பனார், "கவிச்சக்கரவர்த்தி" - அகத்தியான்பள்ளி இராம வைத்தியநாத சர்மா மற்றும் அகத்தியான்பள்ளி சுப்ரமணிய கிருட்டிணமூர்த்தி அவர்களது "அருட்பாமாலை பொக்கிஷங்கள்" எனும் புத்தகம், திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களது தம்பி, திரு.கார்த்திகேயன் அவர்களது ஆசீர்வாதத்துடன் கிடைக்கப் பெற்றேன்.
என்னவென்று சொல்வது? எத்தனை அழகான பாடல்கள்? பெரியவா முன்னிலையிலேயே பாடப்பெறும் பாக்கியம் பெற்றவை. பெரியவாளால் பாராட்டப் பெற்றவை.
அந்தாதின்னா, இவா பாடினதுதான் அந்தாதி! பெரியவா, பெரியவான்னு, எத்தனை உருக்கம்! இது இல்லையோ பக்தி!
பாடல்கள்னா, இவை இல்லையோ பாடல்கள்!
இந்த பாடல்களில் இருக்கும் பக்தி எனக்கும் வரட்டும். இந்தப் பாடல்களில் இருக்கும் இனிமை, எனக்குள்ளும் தோயட்டும்.
ஆனாலும், எல்லாப் பாடல்களுமே இனிமையாய் இருந்துவிட்டால், பெரியவாளுக்கு, ரொம்ப 'bore' அடித்து விடும் இல்லையா! கொஞ்சம் கசப்பாகவும், புளிப்பாகவும்கூட, பாடல்கள் இருந்தால்தானே சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றியது...அதனால்தானே, வருஷப் பிறப்பன்று, பாயசத்துடன், வேப்பம்பூப் பச்சடியையும் சாப்பிடுகிறோம்!
என் பாடல்களும், இந்த வகை தானே!
ஆனால், இனிமையான பாடல்களை மட்டுமே பெரியவா ரசித்தால், ருசித்தால்...? 'நானும் பாடினேன்' என்று பேர் பண்ணிக் கொண்டிருக்கும் என் பாடல்களுக்கு என்ன கதி?
கொஞ்சம் பெரியவாளிடம் சண்டை போட வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவாகத் தோன்றிய, இந்தப் பாடல்களை, அந்தப் பெரியவா சரணத்திற்கே காணிக்கையாக்குகிறேன்.
ருசியிலாப் பாடலை ரசிக்காதிருப்பையோ??
அந்தமும் ஆதியும் இல்லாத உனக்கிங்கு
அந்தாதி பாடுவார் அன்பரெல்லாம் வந்து
சந்ததம் நீயுமப் பாடலைக் கேட்டிருப்பாய்
அந்தவோர் இன்சுவை திகட்டாதிருக்கவே
வந்துநான் பாடினேன், சுவையிலாப் பாடலே (1)
உன்னிரு பதமலர் கதியெனத் துணையென,
நன்னலம் மிக்கவுன் அன்பர்கள் பாடுமவ்
வின்னரும் பாடல்கள் கேட்டருள் முனிவனே!
தன்னலம் அன்றி ஒன்றறிந்திலா நானுமுன்
கன்னலாம் பெயரிலோர் பாடலே சூட்டினேன் (2)
அழகுடை நறுமலர் அணிசெயும் மாலைபோல்
கழல்பணிந்தன்பர்கள் பாக்களும் பாடிட,
பழகிடும் தமிழையே பருகுவாய் அருளுவாய்!
அழகனே! மணமிலா வனமலர் மாலையாய்
தொழவறும் பாதமே சூடினேன் பாடலே! (3)
நான்மறைப் பாலையும், நாலாயிரம் பாகையும்
தேனென இனித்திடும் பன்னிரு முறையையும்
வானுறை அமுதே நீ அருந்துவாய் நித்தமும்
கோனுனக்குச் சுவை மாற்றித் தருவதற்காகவே
நானிங்கு படித்தேன் புளித்திடும் இப்பாடல் (4)
திருவாசகச் சுவையும், திருப்புகழ் தனிச் சுவையும்
திருஅருட்பாச் சுவையும், பாகவதப் பெரும்சுவையும்
விருப்பொடு கொள்ளுவாய் தேவே நீ நித்தமும்
இருப்பினும் உனக்குமே சுவை மாற்றித் தரவென்றே
சிறுவன் நான் படித்திட்டேன் கசந்திடும் இப்பாடல் (5)
அருளது தரவரும் தருவென உன்னையே
முருகொடு சுவையொடு அடியவர் பாடிட
விருப்பொடு கேட்டுக் களித்திடுவாய் நீயே
அருந்திய அத்தீந்சுவையெலாம் மாறவே
மருந்தெனப் பாடினேன், உன்மேலே பலபாடல் (6)
இனித்திடும் பாடல்கள் அடியவர் பாடினும்,
கனியுடைத் தேனென அவை சுவை தருகினும்,
பனிச்சடை வள்ளல்நீ விரும்பியே பருகினும்,
இனிப்பது அளவுக்கதிகமாய்ப் போய்விடின்,
தனிச்சுவை எதுமதில் தெரிந்திடாதென்பதால், (7)
விருந்தென அருந்திய பாடல்கள் செரித்திட,
மருந்தென கசந்திடும் பாடல்கள் தொடுத்தனன்!
அருந்தவமுடையோய்! உன் அருளெலாம் இங்கு அவ்
வருட்சுவைப் பாடகர் அவர்கட்கு மட்டுமோ?
மருட்சுவை பாடகன் எனக்கிங்கில்லையோ? (8)
குழந்தையும் தெய்வமும், குணத்திலே ஒன்றுதான்!
பழகிடும் மேன்மையில், பெரியவா குழந்தைதான்!
குழந்தைகள் இனிப்பையே ருசிப்பதும் உண்மைதான்!
கழறிய பாடல்கள் கசப்பதும் உண்மைதான்!
அழஅழ, அதற்கென, எனையும் நீ விடுவையோ? (9)
பாடினேன் உன்னையே, நாடினேன் உன்னையே
வாடினேன் இங்குநான், உன்னருள் இன்றியே
மூடியே வைப்பையோ, உன்னருள் விழியையே?
தேடினும் கிடைக்கிலாய்! ஊடினும் கிடைக்கிலாய்!
ஓடிவந்தருளிடாய்! நன்றாய் இரும் நீரே! (10)
பெரியவா சரணம். பெரியவா சரணம். பெரியவா சரணம்.

No comments:

Post a Comment