Sunday, November 29, 2015

பெரியவா பாடல் - சிவரஞ்சனி ராகம் - "குறை ஒன்றும் இல்லை" பாடல் மெட்டு


பெரியவா பாடல் - சிவரஞ்சனி ராகம் - "குறை ஒன்றும் இல்லை" பாடல் மெட்டு

உனைக் காண அருள்வாய், உன் பாதம் தருவாய்
உனை நெஞ்சில் கொண்டேன் ஐயா,
உனைத் தேடி வந்தேன் என்னையா

உன் சன்னதி இருக்க, அருட்கரம் தந்திருக்க,
குறை ஏதும் இல்லை ஐயா,
குறை ஏதும் இல்லை என்னையா

உன் முகம் என் நெஞ்சில், உன் நாமம் என் நாவில்,
வேறென்ன வேண்டும் ஐயா?
வேறென்ன வேண்டும் பொன்னையா



Monday, November 23, 2015

என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ?

23.11.15

நேற்றும், முந்தின தினமும் ஸ்ரீ.கணேச சர்மா மாமாவின் "தெய்வத்தின் குரல்" உபன்யாசம்  இங்கே பெங்களூரில். போக முடியாமல் அலுவலக வேலை.

"பிறர்க்கே உழைத்து ஏழையானேன்' ன்னு ஆழ்வார் பாடறது ரொம்ப சரி. போன மாசமும் போக முடியலை.

ஸ்ரத்தை இல்லைன்னுதான் தோணறது. வேற என்ன? office வேலையை ஒரு ஓரமா வைச்சுட்டுப் போக மனசு இல்லை. சத்சங்கம் அவ்வளவு முக்யமா இன்னும் ஆகலை.

நான் மனசு ஒப்பி, உடம்பு ஒப்பி, நேரம் ஒப்பி, சத்சங்கம் போய்க் கலந்துக்கறது என்னிக்கோ? பெரியவாளே மனசு கனிஞ்சு, என்கிட்ட வந்தாத்தான் உண்டு போல்ருக்கு....



என்ன சொல்லி அழைத்தால் வருவீரோ?
அடியேன் என்றனை, அடிமையாய்க் கொள்ள (என்ன சொல்லி)

சங்கரா எனவோ? பெரியவா எனவோ?
சங்கடம் தீர்த்திடும் சம்பு நீ எனவோ? (என்ன சொல்லி)

சரணம் என்றவுடன் காத்திடும் நாமமாம்
நினைத்ததும் வந்திடர் நீக்கிடும் நாமமாம்

அன்பர்கள் மனம்தன்னில் வசித்திடும் நாமமாம்
அருள்மழை தருமுந்தன் ஆயிரம் நாமத்தில், (என்ன சொல்லி)









Monday, November 16, 2015

கண்ணா, வா. வந்து எங்களைக் காப்பாற்று

எவ்வளவு மழை, வெள்ளம், துயரம்? இன்னும் மழை என்றால், சென்னையோ கடலூரோ, தாங்குமா? இந்தத் துன்பம் எப்போது விலகும்? இந்தப் பேய்மழை எப்போது நிற்கும்?

அன்று அந்த ஆயர்களுக்காகக் குன்றைக் குடையாய் ஏந்தியவனைத்தான் கூப்பிட வேண்டும்....

கண்ணா, வா. வந்து எங்களைக் காப்பாற்று.



ஆழி மழைக்கண்ணா! கார்மேக வண்ணனே!
ஊழி முதல்வன் உருவமே கொண்டாயோ?

புயல்மழை பெருவெள்ளம், எல்லாமுன் விளையாட்டோ?
அயர்ந்தலுத்தழுதிருக்கும் நாங்களுமுன் பொம்மைகளோ?

கள்ளச் சகடம் கலங்கிடச் செய்தவா,
வெள்ளக் கொடுமை நீக்கவே இங்குவா

குன்றம் அன்றேந்திக் குளிர்மழை காத்தவா,
இன்று இப் பேய்மழை துயரது களைய வா

Thursday, November 12, 2015

அனுஷப் பாடல் : 13.11.2015 : அக்ஷரப் பாமாலை

இன்று, அனுஷம். பெரியவாளின் பக்தர்களுக்கெல்லம், கோலாகலமான நாள். அந்தத் தவவேந்தரையே நினைத்துருகி இருக்கும் நாள். பெரியவா மீது, அக்ஷரங்களைக் கோர்த்து, அழகான பாமாலைகள் இருக்கின்றன. நாமும் பெரியவா மீது, அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அந்த சிவரூபனை நினைத்து, முடிந்தவரை, ஒவ்வொரு அக்ஷரத்திலும் ஒரு நாமப் பூவைக் கோர்த்திருக்கிறேன். சில அக்ஷரங்களுக்கு, நாமப் பூவேதும் கிடைக்கவில்லை....சில அக்ஷரங்களுக்கான நாமப்பூ, அவ்வளவு ஜோராக இல்லையோ என்றும் தோன்றுகிறது..

ஆயினும், எல்லாப் பூக்களும், அவன் படைப்பு. எல்லா அக்ஷரங்களும், நாமங்களும், அவன் பெயர் சொல்பவையே என்று மனம் தேற்றிக் கொள்ளுகிறேன்... பெரியவா சரணம்.



அகத்துளானை, ஆலங்குடியானை, இன்னமுதானை, ஈச்சங்குடியானை, 
உகந்தேறிங்கு ஊர்ந்தானை, என்னுயிரைக்கச்சி ஏகம்பனை, 

ஐயனையப்பனை,  ஒப்பாரில்லானை, ஓங்குபெருஞ்சுடரை, ஔவ்வியம் தீர்த்தானை
கயமுகனப்பனை, காசினி புறந்தானை,கிருபாகரனை , கீர்த்தியோனை,

குலாலனை,  கூடல் நாயகனை, கெழுதகை நண்பனை, கேசவனன்பனை
கைலாசனை, கொன்றைசூடியை, கோமகனை, கௌரீநாயகனை,

சந்திரசேகரனை, சாமவேதனை, சிவஸ்வரூபனை, சீலனை, 
சுந்தரனை, சூலங்கொண்டோனை, செஞ்சடைத் தேவனை, சேவடிதந்தோனை,

சைவப் பெருந்தேவை, சொக்கனை, சோதிவானவனை, சௌம்யனை
தவப்பெருமானை, தாயுமானவனை, திகம்பரனை, தீரனை,

துயரம் களைவோனை,   தூயவனை, தென்னாடுடையோனை, தேவர்கோனை,
தையல்நாயகனை, தொண்டர்பிரானை,  தோடுடை செவியனை, தௌரீதகமாடுவோனை

நண்ணமுதினை, நால்மறை வேதியனை, நிமலனை,  நீர்மலிவேணியனை
நுண்ணியனையென்றும், நூதனனை, நெஞ்சுறைந்தானை, நேரிழை நேசனை,

நைவேத்யப்ரியனை, நொந்தோர்க்கிறையை, நோவிலானை, நோற்றோர்க்கருள்வானை, 
பவனை, பாவனனை, பித்தனை, பீதாம்பரனை,

புரமூன்றெரித்தோனை, பூதநாதனை, பெம்மானை, பேருயிரை,
பைரவனை, பொன்னம்பலத்தானை, போகசிவனைசார்வ  பௌமனை, 

மகாதேவனை, மாசிலாமணியை, மிருத்தியுஞ்சயனை, மீனாள் மணாளனை
முகாரவிந்தனை, மூர்த்தியை, மெய்யன்பனை, மேலோனை,

மையல் களைவோனை, மொய்ம்பினானை, மோகனனை, மௌனியை,
லயவின்யாசனை, லாவண்யனை, லிங்கோத்பவனை, லீலாவிநோதனை,


வஞ்சம்கெடுத்தானை,   வாகீசனை, விமலனை, வீணாகானனை,
வெஞ்சினம் களைவோனை, வேதவேத்யனை, வைத்தீஸ்வரனை, வௌவுவார் தலைவனை                      


அடிபணிந்து, பதமலர் தூவித்தொழுது, பாடிப் பரவுவோமே!


* சில வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்குப் பொருள் : 

ஔவ்வியம் தீர்த்தானை : பொறாமையை நீக்குபவன்
குலாலன் : குயவன் ("குலாலேப்யோ" என்ற் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது)
தௌரீதகம் : துரித நடை
போகசிவன் : சதாசிவன்
சார்வ பௌமன் : சக்ரவர்த்தி
மொய்ம்பினானை : வலிமையுடையவனை
லயவின்யாசன் : நல்ல கற்பனையுடன், ராகத்தையும், லயக் கணக்குகளையும் வெளிப்படுத்துபவன்
வௌவுவார் தலைவன்: திருடுபவர்களின் தலைவன் ("தஸ்கராணாம் பதயே" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது)
              
            
            


           

Monday, November 9, 2015

தீபாவளிப் பாமாலை : 09.11.2015

நாளை, தீபாவளி.

காலை எழுந்து, கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பெலாம் உண்டு, மத்தாப்பு கொளுத்தி,  பட்டாசு வெடித்து,  உறவினர் எல்லாருடனும் கலந்து பேசி மகிழ்ந்து, கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு வந்து, விருந்துண்டு மகிழ்ந்து....எத்தனை மகிழ்ச்சியான நாள்!

அத்தனை மகிழ்ச்சியும், உலகம் முழுக்க இருக்கும் அத்தனை பேருக்கும் கிடைக்க, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்து கொள்கிறேன்.

நாளை, நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பெரியவாளின் நினைவு நீங்காமல் இருக்க, அவரிடமே வேண்டிக் கொள்கிறேன். அவர் அருள் இருந்தால்தானே அவர் தாள் பற்ற முடியும்!

நாளை மட்டுமல்ல, எந்த நாளும், எந்த நேரமும், நான் செய்யும் செயலெல்லாம், சொல்லும் சொல்லெல்லாம், நினைக்கும் நினைவெல்லாம், நீங்காமல் பெரியவாளே இருக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனையையும் அவரே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றும் அவரையே கேட்டுக் கொண்டு, இந்தப் பாமாலையை, பெரியவா சரணங்களுக்கு, சமர்ப்பிக்கிறேன்.

தீபாவளிப் பாமாலை:

அதிகாலை எழுந்து கங்கா ஸ்னானமே செய்யும்போது,
நதியினை சடையில் கொண்டோய்!  உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (1)
கதியிங்கு நீயே, பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
விதியிங்கு மாற்றிக் காப்பாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

புத்தாடை புனைந்து சிற்றார் அவரோடு மகிழும்போது,
பித்தனாய்ப் பிறையைச் சூடும் உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (2)
வித்தகா, பெரியோய், ஐயா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
சித்தனே, வேதா, இங்கு, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

தீபத்தில் ஒளியை ஏற்றி, இருளெல்லாம் விலகும்போது,
பாபத்தை விலக்கும்  ஈசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (3)
ஆபத்தை அழிக்கும் பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தாபத்தை அணைத்துக் காப்பாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

இனிப்பெலாம் உண்டு எங்கள், மனமெலாம் இனிக்கும்போது,
இனிமையே வடிவாய் வந்தாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (4)
பனிமலைப் புதல்வி நேசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
மனிதனாய் நடித்தோய் நீயே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

மத்தாப்பு கொளுத்தி வண்ண ஒளியெலாம் விரியும்போது,
அத்தனே, ஜோதி வடிவே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (5)
நித்தமும் எம்மைக் காக்கும், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
உத்தமா! சத்ய சீலா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

பட்டாசு வெடித்துச் சத்தம் உடலெலாம்  அதிரும்போது,
எட்டாமல் நிற்கும் தேவே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (6)
மட்டுவார்குழலி பாகா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
மட்டிலா இன்பப் பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

உறவினர் எல்லாம் வந்து வாழ்த்தெலாம் சொல்லும்போது,
உறவென்று வந்தோய் நீயே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (7)
பிறப்பில்லாய், இறப்புமில்லாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
சிறப்பொன்று மிச்சம் இல்லாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

குடும்பத்தில் எல்லாம் சேர்ந்து, கோவிலே செல்லும்போது,
இடுகாட்டில் வாழும் ஈசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (8)
படுதுன்பம் யாவும் போக்கும், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தடுத்தெமை ஆளும் பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

விருந்துண்டு, பசியே ஆறி, நல்விருந்தென்னும்போது
மருந்தென்று வந்த ஈசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (9)
கரும்பினுள் இனிப்பாய் நின்றாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
பெருந்தவப் பெரியோய், குருவே! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

உண்ட அம்மயக்கம் தன்னில், கண் கொஞ்சம் அயரும்போது,
கண்கண்ட தெய்வம் நீயே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (10)
பண்வளர்ப் பதிகம் கொண்டோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தண்துழாய் தலையில் கொண்டோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

மாலையில் நண்பர் எல்லாம், மகிழ்ச்சியாய்ப் பேசும்போது,
சூலைநோய் தந்து ஆண்டாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (11)
மாலைபாமாலை கொண்டோய்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
வேலை இங்குன்னைப் பாடல்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

இரவிலே படுக்கும் போது, உறக்கமே தழுவும்போது,
அரனே, சங்கரனே என்று, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (12)
பரனே, எம் சிவனே என்று, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
நரனாக நடித்துப் போந்தாய்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!

நெஞ்சிலே கொண்டோம் உன்னை! எங்கிலும் கண்டோம் உன்னை!
கஞ்சியின் தேவன் நீயே! காத்திடும் தேவன் நீயே!
அஞ்சுதல் அகற்றிக் காத்து, ஆறுதல் தருவோய் நீயே!
தஞ்சமாய் வந்தோம் இங்கே, சரணமே தருவாய் ஐயா!