Wednesday, June 7, 2017

08.06.2017: பெரியவா ஜயந்தி

08.06.2017: பெரியவா ஜயந்தி
**********************************************
இன்று, பெரியவா ஜயந்தி. அனுஷத் திருநக்ஷத்ரம். இந்த நாளிலே, பெரியவா அன்று முதல் இன்று வரை செய்த பலப்பல அவதாரங்களை நினைவு கூர்ந்து, பெரியவா என்று வந்த இந்தத் திரு அவதாரத்திலே அவர் நமக்குக் காட்டிய கருணையை நினைவு கூர்ந்து, அவர் பதமலருக்கு, இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்.
**************************************************************


முன்னாளோர் மலையை முதுகில் தாங்கியே தேவருக்காய்
என்னாளும் வாழவைக்கும் அமுதத்தை தேடித்தந்தாய்! (1)
அமுதுண்ணும் நேரம் வந்த விஷத்தையும் நீயே உண்டு
இமையோரைக் காத்து நின்றாய்! திருநீல கண்டனானாய்! (2)
பக்தனைக் காக்கவென்று தூணிலே காத்திருந்தாய்!
யுக்தமாய் நேரம் பார்த்து அரக்கனை அழிக்க வந்தாய்! (3)
வாமன உருவம் பூண்டு அரக்கனை அடக்கி நின்றாய்!
சேமமே நல்கும் விஸ்வரூபமும் காட்டி நின்றாய்! (4)
அரசையே துறந்து காட்டில் அலைந்துமே திரிந்து சீதை
அவளையும் இழந்து துன்பம் அடைந்துழந்திளைத்துப் பின்னர் (5)
குரங்கினத்தரசன் உதவி கொண்டவன் மூலம் லங்கை
அரக்கனைக் கொன்றாய் நங்கை அவளையும் மீட்டுச் சென்றாய்! (6)
ஒன்றன்பின் ஒருவராக அரக்கரை மாய்த்து ஆயர்
நன்றங்கு வாழவென்று அத்தனை பாடு பட்டாய்! (7)
கிரிதனைத் தூக்கி நின்றாய்! கோகுலம் காத்து நின்றாய்
விரியுலகெல்லாம் போற்றக் கம்சனை அழித்து நின்றாய் (8)
பாண்டவர்க்காகத் தூது நடந்துடல் நொந்து நின்றாய்
வேண்டியே பார்த்தன் கேட்க, கீதையே சொல்லி நின்றாய் (9)
திரிபுரம் அமர்ந்து ஓடி, திசையெலாம் அழித்தோர் தம்மை
சிரிப்பினால் அழித்து அன்பர் சிறக்கவே செய்து நின்றாய்! (10)
பாதமே பிடித்த பாலன் வாழவே காலன் தன்னை
நாதனே உதைத்துக் கால காலனாய் அன்று நின்றாய்! (11)
பிட்டுக்கு மண் சுமந்தாய்! பிரம்படி அதுவும் பட்டாய்!
இட்டமாய் தருமி வாழக் கவிதையும் தந்து நின்றாய்! (12)
பித்தனென்றன்பர் ஏச, இன்பமாய் ஏற்று நின்றாய்!
அத்தனே அம்மையாகப் ப்ரசவமும் பார்த்து நின்றாய்! (13)
மூகனுக்காக வந்து கவிமழை பெய்ய வைத்தாய்!
ஏகம்பன் பாகமானாய்! காஞ்சித் தாயெனவே நின்றாய்! (14)
எத்தனை விதமாயெல்லாம் இப்புவி வந்துதித்தாய்!
பக்தரைக் காக்கவென்று, எத்தனைப் பாடுபட்டாய்!! (15)
இத்தனை அவதாரங்கள் எடுத்து நீ பட்ட கஷ்டம்
மொத்தமாய் ஒன்றுமில்லை என்றிங்கு சொல்லுமாறு (16)
முற்றுமே துறந்து நிற்கும் முனிவனாய்க் கோலம் பூண்டு
நற்றவக் காஞ்சியென்னும் நகர்செய்மா புண்ணியத்தால் (17)
சங்கரன் மகிழ மண்ணில், “பெரியவா” என்னும் திவ்ய
மங்கல நாமம் கொண்டு இவ்வுலகெல்லாம் வாழ (18)
நல்லவர் மற்றும் இன்றி, அல்லோரும் வாழ, நன்கு
பல்கலை வாழ, என்றும் நான்மறை வாழ நீயும் (19)
எத்தனை பாடுபட்டாய்! எத்தனை நடை நடந்தாய்!
சித்தனே நூறு ஆண்டு வித்தகம் செய்து நின்றாய்! (20)
தெய்வத்தின் குரலைத் தந்தாய்! நான்மறை சாரம் தந்தாய்
செய்வது அறியா நின்றக் கடையரும் வாழச் செய்தாய்! (21)
ஒவ்வொரு அடியாருக்கும் “உம்மாச்சித் தாத்தா”வானாய்!
ஒவ்வொரு அடியாரகமும் உன்னகம் ஆக்கி நின்றாய்! (22)
இன்று உன் பிறந்த நாளில் உன்னையே நினைத்திருக்கும்
அன்பரைக் காக்க நீயும் அருள்மழை பொழிய வேண்டும்! (23)
உன்பெயர் சொல்லும் யாரும் உயரவே அருளல் வேண்டும்!
உன்னையே நினக்கும் நெஞ்சம் சிறக்கவே அருளல் வேண்டும்! (24)
அடியவர் தம்மைக் காக்கும் விரதமே பூண்ட தேவே!
கொடியவர் தமையும் காத்துன் அடியாராய்க் கொள்ளல் வேண்டும்! (25)
அன்பர்கள் நெஞ்சில் நின்று அல்லகள் போக்கும் தேவே!
துன்பமே உழலும் எனையும் கொஞ்சம் நீ பார்க்க வேண்டும்! (26)
உன்பக்தன் போல இங்கு வேஷமே போட்டு வாழும்
என்மேலும் கொஞ்சம் கருணை நீயுமே காட்ட வேண்டும்! (27)

No comments:

Post a Comment