Saturday, April 7, 2018

Anusham Day :5.4.2018

5.4.2018 : அனுஷ தினம்
இன்றைய அனுஷத்தில், பெரியவாளை ஸ்மரிக்கும்போது, தன்னை முற்றும் மூடி மறைத்துக்கொண்டல்லவ அந்த “மறை” நாயகன் இங்கே வந்திருக்கிறான் என்று தோன்றியது. 
 சிரசிலே சந்திரகலை மறைத்து, கங்கையை மறைத்து, சூலப்படையை தண்டமாக ஏந்தி, ஜடாபாரத்தை நீக்கி, நாக அணிகலங்களை நீக்கி, நெற்றிக் கண்ணை ஒளித்து, தன்னொரு பாதியாம் உமை – அவளையும் ஒளித்து, கையில் சுடரும் நெருப்பினை ஒளித்து, அம்பலத்தில் ஆடிய பாதங்களை,, இந்த பாரதம் முழுக்க நடக்கச் செய்து…என்று, எத்தனை எத்தனை ஒளித்து, மூடி மறைத்து அந்த ஈசன் நம்மிடையே மானிடனாய்த் தோன்றி நடமாடி இருக்கிறான்!
 எத்தனை மறைத்தாலும், ஒளித்தாலும், ஈசா, உம்மை நாங்கள் கண்டுகொண்டுவிட்டோம் அப்பா!!



பாதி மதியது தானும் மறைத்தருள்
சோதி முகம்தனை கண்டு கொண்டேன்
சோதி முகத்தவர் நாமத்தை நித்தமும்
திடல் நிம்மதி என்றும் கண்டேன் (1)

வானின் பெரு நதி தாங்கி மறைத்தருள்
கோனினை நானிங்கு கண்டு கொண்டேன்
கோனினிரு பதம் எண்ணுகையில் கண்ணில்
வானதி பொங்கி வழியக் கண்டேன் (2)

சூலப் படையதை தண்டமாய் ஏந்திடும்
கோல அழகனைக் கண்டுகொண்டேன்
மாலவன் போற்ற்டும் சீலநின் நாமமே
காலனைக்கொல் சூலம் என்றும் கண்டேன் (3)

பாரமுடியதும் நீக்கி ஒளிர்ந்தருள்
தாரணி மார்பனைக் கண்டு கொண்டேன்
ஆரமுதன்னவன் பாதம் பணிய நம்
பாரமும் நீங்கிடும் என்றும் கண்டேன் (4)

நாக அணியதும் நீக்கித் திகழ்ந்தருள்
ஏகம்பனையிங்கு கண்டு கொண்டேன்
ஏகன் அனேகந்தன் நாமமே சொல்கையில்
சோகமாம் நஞ்சுமழியக் கண்டேன் (5)

நெற்றியில் கண்ணதை மூடி மறைத்தருள்
குற்றமில் சீலனைக் கண்டு கொண்டேன்
உற்றவன் பாதம் பணிந்திடப் பாவத்தைச்
செற்றிடும் நெற்றிக்கண் என்றும் கண்டேன் (6)

மாதொரு பாகத்தை மூடி மறைத்தருள்
வேதத்தலைவனைக் கண்டு கொண்டேன்
வேதமுழுப்பொருள் தானிங்கு வந்தது
மாதவளாகவே என்றும் கண்டேன்(7)

கையில் நெருப்பதை மூடி மறைத்தருள்
ஐயனிவனென்று கண்டு கொண்டேன்
வையமளந்த அம்மாலயன் போற்றியே
உய்யும் நெருப்பிவன் என்றும் கண்டேன் (8)

ஆடிய பாதமொளித்து அடியரை
நாடிய பாதனைக் கண்டு கொண்டேன்
வாடிடும் பக்தரைக் காக்கவென்றே விரைன்
தோடிடும் பாதமாம் என்றும் கண்டேன் (9)

எத்தனை எத்தனை மூடி மறைத்திங்கு
சித்தனும் வந்தனன் கண்டு கொண்டேன்
அத்தனையும் இங்கு தானருள் செய்யவே
அத்தனும் வந்தனன் என்றும் கண்டேன் (10)

No comments:

Post a Comment