Sunday, December 27, 2015

ரமண குரு

இன்று, ரமண ஜயந்தி. ரமண பகவான் அடி பணிந்து அவர் பாதாரவிந்தங்களில், ஒரு பாமாலை சமர்ப்பிக்கிறேன்.

ரமண குருவை, மனப்பேய் அழித்திட்ட
நிமலரை, நித்தம் தன்னில் நிலைத்திட்ட
விமலரை,  இன்னாள் தொழுது மனக்
கமலம் ஏற்றிப் பணிந்தேன் தாளிணையே

Saturday, December 26, 2015

பெரியவாளை, "ன்" விகுதி போட்டுக் குறிப்பிடலாமா?

பெரியவாளைப் பற்றி, அந்த அன்பு மயமான கருணா மூர்த்தியைப் பற்றி எழுதும்போதோ, இல்லை பேசும்போதோ, "அவன்" என்று குறிப்பிடலாமா? "ன்" விகுதி போட்டுச் சொல்லலாமா?

இப்படி ஒரு கேள்வி கேட்பதற்காக, பெரியவாளையே தெய்வமாகக் கொண்டு போற்றும் இந்த group மட்டுமில்லை, பெரியவாளின் தாசானுதாசர்களாய் விளங்கும் அத்தனை பேரும் அடியேனை, "இது என்ன கேள்வி" என்று பார்த்து அடிக்கக் கூட வரலாம்!

ஆனாலும், இந்தக் கேள்வி அடி மனதில் எழும்பத்தான் செய்கிறது.

அடியேனின் நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும் அந்தக் கருணாமூர்த்தி பற்றி ஏதோ தெரிந்த அரைகுறைத் தமிழில் நானும் பெரியவாளைப் பாடினேனாக்கும் என்ற ரீதியில் அடியேன் கவனம் செய்த பாடல்கள் - at least most of them - அதிலெல்லாம், "அவன் பதம் சரணே" என்று "ன்" விகுதியோடோ, அல்லது அது போன்றே "கருணை மழை பொழிந்தானை" என்பது போல, மறுபடியும் "ன்" போட்டோதான் எழுதியிருக்கிறேன்.

இது தப்பு இல்லையோ?

குருவை மரியாதை இல்லாமல், இப்படி "ன்" போட்டுச் சொல்லலாமா?

பெரியவாளே, குரு பற்றிச் சொல்லும்போது, "தெய்வத்திடம் அத்வைத பாவம் இருக்கலாம். ஆனால், குருவிடம் மட்டும் த்வைத பாவம் மட்டுமே இருக்க வேண்டும்" என்றல்லவா சொல்லியிருக்கிறார்!!

அப்படி இருக்க, ஜகத் குருவான பெரியவாளிடமும் அதே பாவம் அல்லவா இருக்க வேண்டும்? மரியாதையாக அல்லவா விளிக்க வேண்டும்?

சென்னை கீதா கல்யாண் மாமி, ஒருநாள் மிகவும் இதமாக, "பெரியவாளை "ர்" போட்டு எழுதலாமே" என்று guide பண்ணிய போது, இந்தக் கேள்வி பெரிதாக எழுந்தது.

ஒரு முறை, அடியேன் எழுதிய சில பாடல்களை பெரியவாளின் பரம பக்தர் ஒருவர்
அத்தனை "ன்" விகுதியையும் சிரமப்பட்டு நீக்கிவிட்டு, "ர்" விகுதி போட்டு, மறுபதிவு செய்திருந்தார். "பெரியவா மேல், எத்தனை மரியாதை" என்று நினைத்தேன். மற்றபடி ஏதும் சிந்திக்கவில்லை.

ஆனால், இப்போது, கேள்வி எழுகிறது. இப்படி, "ன்" போட்டு, பெரியவா பற்றி எழுதுவது தவறோ?

பெரியவாளைப் பற்றி, மற்றவர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்த்தேன்.

ஸ்ரீ.சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், பெரியவாளின் சரிதத்தில், பெரியவாளை, "ர்" விகுதி போட்டே சரிதம் முழுதும் குறிப்பிடுகிறார். "குழந்தை ஸ்வாமிநாதர்" என்று, பெரியவாளின் குழந்தைப் பருவத்தைக் கூட, மரியாதையோடுதான் குறிக்கிறார்.

ஸ்ரீ.கணேச சர்மா மாமாவின் பெரியவா பற்றிய "கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" என்ற புத்தகத்தில், பெரியவாளைப் பற்றி, குழந்தைப் பருவம் பற்றிய செய்திகள் வரும் வரையில் "ன்" விகுதி வருகிறது. பிறகு, "ர்" தான்.

பெரியவா அந்தாதி பாடிய அகத்தியான்பள்ளி ஸ்ரீ.சுப்ரமணிய கிருட்டிணமூர்த்தி அவர்களின் பாடல்களிலும், "ர்" தான் எல்லா இடத்திலும்.

சங்கரானந்தம் தந்த ஸ்ரீ.தேனுபுரீஸ்வரதாசன் ஸ்ரீ.இல.சங்கர் அவர்களின் பாடல்களிலும், பெரியவாளை மரியாதையாகக் குறித்தல் மட்டுமே.

இப்படி எல்லாரும் பெரியவாளை மிக மரியாதையாய்க் குறிக்க, அடியேனின் பாடல்களில் எல்லாம், மிகத் தவறாய்க் குறித்திருக்கிறேனோ? ஒன்றும் தெரியாத அடியேனின் பாடல்களில் தப்பும் தவறும் நிறைந்திருப்பது இயற்கைதான். சந்தப் பிழையும், யாப்புப் பிழையும், பொருட்பிழைகளுமே கூட மலிந்திருக்கும்தான். ஆனால், பாடுபொருளையே தவறாய்க் குறித்தல் மிகப் பெரிய குற்றம் இல்லையா?

Saanu Puthiran அண்ணாவின் பாடல்கள் சிலவற்றில், அடியேன் குறிப்பிடுவது போலவே, "ன்" விகுதி பார்த்தேன். தப்பு செய்வதில், நான் மட்டுமல்ல, என் அண்ணாவும் கூட, இப்படியேதான் செய்திருக்கிறார் என்று மனதில் ஒரு ஓரத்தில் ஒரு சமாதானம்!

ஆனாலும் மனது முழுதாக சமாதானம் ஆகவில்லை!

அந்த முருகப் பெருமானே வந்து, காப்பாற்றி, "என் மேல் எழுது" என்று அடியெடுத்துக் கொடுத்தப் பாடச்சொன்ன அருணகிரியார் என்ன செய்தார் என்று பார்த்தேன். அருணகிரியாருக்கு, முருகப் பெருமானே அல்லவா குருவாய் வந்தான்! "குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே" அன்றல்லவோ பாடியிருக்கிறார் அருணகிரி!

ஆனால், அருணகிரியார், முருகனை, "ர்" போட்டுப் பாடுவதாகவே காணோம்! திருப்புகழாகட்டும், கந்தர் அலங்காரமாகட்டும், வேல் மாறலாகட்டும், ஒரே "ன்" மயம்தான்!

"அக்குற மகளுடன், அச்சிறு முருகனை, அக்கண மணமருள் பெருமாளே" யென்று, கணபதியைப் புகழும்போது, தனது குருவான அந்த முருகனை, "சிறுவனாக்கி" வேறு பாடுகிறார் அருணகிரி! என்ன ஒரு ஸ்வாதீனம்!

"கந்தர் அலங்காரம்" என்று பெயரில் "ர்" போட்டு மரியாதை தொனித்தாலும், உள்ளே எல்லாம் ஒரே "ன்" மயம்தான்!

"சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
   வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
      காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
         சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

என்று ஒரே "ன்" மயமாகப் போகிறது பாட்டு! 

 கந்தர் அனுபூதியும் இதே கதைதான்!   "கந்தர்"  என்பதிலே "ர்" வந்தாலும், உள்ளே எல்லாப் பாடலிலும் மஹா ஸ்வாதீனம்! 

"ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே"                  

என்பதிலிருந்து, "நீ" தான்; "ன்" தான்!

அந்த சிவபெருமானே குருவாய் வந்து தன் தாள் தந்து ஆட்கொண்ட மாணிக்கவாசகர் எப்படிப் பாடியிருகிறார்? 

திருவாசகத்திலே, உள்ளம் உருக்கும் சிவ புராணப் பாடலிலே, ஆரம்பமே ரொம்பவும் உரிமையோடுதான்!

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க; கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ; ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ; ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க"

என்று, ஒரே "ன்" மயம்தான்!  "குருமணிதன் தாள் வாழ்க" என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்! இருந்தாலும்கூட, "ன்" தான்!

ஒன்று தோன்றுகிறது. குரு என்பவர் மனிதராக வந்தால், மரியாதை கொடுத்து விளிக்கப் படுதலும், இறைவனே வந்து ஆட்கொண்டால், ரொம்பவும் ஸ்வாதீனம் எடுத்துக் கொள்வதுமாய் இருக்கிறதோ? 

அந்த மனித குருவும் இறைவன்தான் என்றாலும், அவருக்கு மரியாதை கொடுத்து, "த்வைதம்" பாராட்ட வேண்டும் என்று பொருளோ? ஆனால், வந்தது - வருவது - இறைவன் - அவனே குருவாயும் வந்திருக்கிறான் என்று தெரியும்போது, ஸ்வாதீனம் மிகுந்து விடுகிறதோ?

பெரியவாளின் அத்யந்த பக்தர்கள் பல பேர் பெரியவாளை படு ஸ்வாதீனத்துடன், "அது" "இது" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். "அந்தக் கிழம்" என்று பரம பக்தியுடன், உரிமையுடன் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். "பொல்லாத கிழவனார்" என்று அடைமொழி கொடுத்து கண்களில் நீர்மல்கச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். 

இவர், வெறும் மனித குரு இல்லை - மனித குருவையும் 'தெய்வமாகவே கொள்ளவேண்டும்' என்பதால் இந்த வடிவத்தை 'தெய்வம்' என்று சொல்வது இல்லை; இந்த வடிவம், நிஜமாகவே, தெய்வம்; நமக்கு அருள வேண்டி, மனித வடிவில், நம்முடன் கலந்து பழகியிருக்கிறது என்று கொண்டால், அந்த தெய்வத்தை மஹா ஸ்வாதீனத்துடன் கூப்பிடுவது போல் கூப்பிடலாம்தானோ?

திருப்பாவையிலே, ஆண்டாள், ஒரு இடத்திலே "அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உந்தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று சொல்லுகிறாள். அன்பு மிகும்போது, மரியாதை குறைந்து விடுகிறது என்பது உண்மைதானோ? சரிதானோ? "என் அப்பா, ஐயா, நீ வாயேன், வந்து எனக்கு அருள் பண்ணேன்; தரிசனம் கொடேன்" என்றுதான் சொல்லத் தோணுமோ?

சிறு வயதிலிருந்தே, மஹா பெரியவாளை, "காம கோடிப் பீடத்தின் பீடாதிபதி" என்றோ, "சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்' என்றோ, ஏன்? "பெரியவா" என்றோ, என் தாய் தந்தையர் எனக்கு அறிமுகப்படுத்தியது இல்லை. "உம்மாச்சித் தாத்தா பாரு" என்று அவர், எனது தாத்தாவாகவேதான் எனக்கு அறிமுகம் ஆனார். 

அடியேனுக்கு மாத்திரம் இல்லை, அவரது கோடானுகோடி பக்தர்களுக்கும் கூட, அவர் முதலில் "உம்மாச்சித் தாத்தா"தான். பிறகுதான் "பெரியவா" என்று தோன்றுகிறது. 

அப்படி, "தாத்தா"வாக, குடும்பத்தில் ஒருவராக, உற்ற உறவாக, கூடவே இருந்து குறை தீர்க்கும் குடும்பத்தின் உறு துணையாகவே தெரிந்த ஒருவரை, "ர்" போட்டு அழைப்பது - மரியாதை காட்டும் நிமித்தம் சற்றே 'தள்ளி" நின்று பேசுவது போல, "distance" வந்தாற்போலத் தோன்றுகிறது. 

எனது அகத்தில், அப்பாவையோ, அம்மாவையோ, தாத்தாவையோ, பாட்டியையோ, "நீங்கள்" என்று விளிக்கும் பழக்கம் இல்லை. "அப்பா, அம்மா, நீ, வா, போ" தான். "எப்ப தாத்தா வந்த நீ? எப்படி இருக்க? உடம்புக்கு ஒண்ணும் இல்லாம இருக்கியா" என ஒற்றை விளித்தல் தான். 

என் தாத்தா - பாட்டிக்கு வரும் அதே ஒற்றை விளித்தல்தான் எனது உம்மாச்சித் தாத்தாவிற்கும் வருகிறது! எனது தாத்தா - பாட்டியையும் விடவும் நெருங்கின சொந்தம் இல்லையோ என்னுடைய இந்த உம்மாச்சித் தாத்தா!

என் அப்பா! என் ஐயா! என் உம்மாச்சித் தாத்தாவே! அடியேன் உன்னை - உம்மை ஸ்வாதீனமாய் அழைத்ததை, இனிமேலும் அப்படியே அழைக்கவேண்டும் என்று நினைப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாயோ? சொல்லப்பா! 

இப்படிக் கேட்பதிலும் ஸ்வாதீனம் விட்டுப் போகவில்லையே - என்ன செய்வேன் நான்? 

அறியாப் பிள்ளையிவன், அன்பினால் உன் தன்னைச் 
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே! 
இறைவா நீ வாராய்! அருளாய், உன் சரண் புகுந்தேன்!!

Wednesday, December 23, 2015

சந்ததமும் உந்தன்பதம் தரவேணும்

சமீபத்தில் சென்னை சென்றபோது, பெரியவாளின் பரம பக்தரான கீதா கல்யாண் மாமி அகத்திலே, பத்மஸ்ரீ. திருமதி காயத்ரி சங்கரன் அவர்களது பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. "ஸ்ரீ காந்திமதீம்" மற்றும் "கஞ்சதளாயதாக்ஷீ" என்ற தீக்ஷிதர் க்ருதிகளை அவர் பாடக் கேட்டு மெய்மறந்திருந்தேன். (அடியேன் கேட்பதற்காக, telephoneலேயே, பாடல்! என்ன ஒரு எளிமை!)

தீக்ஷிதர், 'குருகுஹ' என்னும் முத்ரை பதித்துப் ஒவ்வொரு பாடலிலும் முருகனை நினத்தவர். முருகன் அருள் பெற்றுப் பாடியவர்.

என்ன ஒரு சந்தம், என்ன ஒரு வார்த்தை நயம், என்ன அழகான பாடல்கள்! 

கஞ்ச தளாயதாக்ஷியை எடுத்துக் கொண்டால், "குஞ்சர கமனே", "மஞ்சுள சரணே", "சசி வதனே", "சுர தனே", "ரக்ஷித மதனே", "ரத்ன சதனே", "ஸ்ரீ காஞ்சனிவசனே", "சுரசனே", "மந்த ஹசனே", என்று ஒரே "அனே" காரந்தமாக வார்த்தகள்! பின்னர், "அக்ஷரி", "புவனேஸ்வரி", "பாஸ்வரி", "ஸ்ரீகரி", "லயகரி", "க்ருஹேஷ்வரி", "சங்கரி" என்று ஒரே ஹ்ரீம்காரமாக வார்த்தைகள்!! 

முருகா! பாடினால், இப்படி இல்லையோ பாடவேண்டும், என்று நினைத்துக் கொண்டே பெங்களுரு திரும்பும்போது, தமிழ் கீர்த்தனைகளைப் பற்றியும் மனதில் அசை போட்டபடி வந்து கொண்டிருந்தேன். 

சந்தம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது, அருணகிரியார்தானே!  முருகன் அருள் பெற்று, அவனையே பாடு பொருளாய்க் கொண்டு, அத்தனைப் பாடல்களும் பாடியவர் அருணகிரிநாதர்

"முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்  முற்பட எழுதிய ...... முதல்வோனே"

"அக்குற மகளுட னச்சிறு முருகனை  அக்கண மணமருள் ...... பெருமாளே"

"முத்தைத்தரு பத்தித் திருநகை  அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்" 

என்று மனம் திருப்புகழை, அவன்புகழை அசை போட்டது. 

அவர் பாடல்களில் இருக்கும் அந்த சந்தத்தில் ஒரு லவலேசமேனும் வைத்து அந்த முருகப் பெம்மான் மேலே ஒரு பாடல் பாட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்ததில், வந்த பாடல் இது. 

பாடலில் இருக்கும் பிழையெலாம் கருதாது, அந்த செந்தில் வேலவன், தமிழ்க் கடவுளாம் கந்தன் தான் காத்தருள வேணும்.
********************************************


இந்திரனின்  நிந்தையற சுந்தரியை உந்தனது 
சொந்தமென பந்தமெனக் கொள்வேலா (1)

குந்தியவள் நந்தனவன் நொந்துமிக சிந்தைசெய
விந்தையுரை தந்ததிரு மால்மருகா (2)

சந்தியதை முந்தியொளிப் பந்தமிழத் தந்திரமாம்,
மந்திரமாம் சந்த்ரகுலத் தோன்மருகா (3)

கந்தனெனும் சுந்தரனை சந்தமொடு கந்தமிகு 
செந்தமிழில் சிந்தனையும் செய்வேனோ (4)

அந்திமமும் வந்துமிகத் தொந்தரவும் அந்தகனும் 
தந்துவிடும் அந்தகணம் வருவாயோ (5)

சந்ததமும் உந்தன்பதம் எந்தனது சிந்தையதில்
வந்தமரும் அந்தவரம் தரவேணும் (6)

இந்துதலை தந்தைகொடு செந்திலவன் வந்தெனிள 
புந்தியமர் நந்திமகற் பெருமாளே (7)

பொருள் : 

1. இந்திரனின் கவலையும் நிந்தையும் அகலுமாறு, 'தேவ சேனாபதியென' வந்து, சூரனை அழித்து, அவனது இந்திரப் பட்டத்தை மீட்டுத் தந்து, இந்திரனின் பெண்ணையும் மணந்த வேலா!

2.குந்தியின் புத்திரனாம், 'கௌந்தேயன்' என்றே பெயர் பெற்ற அந்த அர்ஜுனன் மனம் வாடி போரிலே சோர்வுற்ற போது, மிக விந்தையான பார் போற்றும் கீதையுரை தந்த அந்த திருமாலின் மருகா!

3. பாரதப் போரிலே, சந்தி காலத்தில் அந்த ஒளிப் பந்தாய் விளங்கும் சூரியனையே தனது சக்கரத்தால் மறைத்து ஜயத்ரதனை வெளிக் கொணரச் செய்து, தந்திரம் செய்து அர்ஜுனனைக் காத்த அந்த திருமால் என்னும் சந்திர குலத்தில் தோன்றிய மந்திரத்தின் மருகா!

4. இப்படி இந்தப் பெருமையெலாம் பெற்ற கந்தனெனும் அழகனை, சந்தத்துடன், மணம்வீசும் செந்தமிழில் என் மனதில் நினைப்பேனோ? நினைக்கும்படி கந்தா, நீ வருவாயோ?

5. இல்லை, இறுதி வந்தெய்தும்போது, அந்தகன் என்னும் அந்த காலனும் வந்து தொந்தரவே செய்யும்போது, அந்த இறுதியான கணத்திலாவது, கந்தா நீ வருவாயோ?

6. எப்பொழுதும், உனது பதமானது எனது சிந்தையிலே நிறைந்து இருக்கும் அந்த ஒரு வரத்தை, ஐயா, நீ எனக்கு அருள வேண்டும்

7. இந்து எனப்படும் அந்த சந்திரனைத் தலையிலே தரித்தவரான சிவ பெருமான்  முக்கண்ணிலிருந்து தோன்றிய செந்தில் வேலவனே! நந்தியம் பெருமானின் மகனே! நீ வந்து எனது இளைய, ஒரு அனுபவமும், முதிர்வும் இல்லாத எனது புத்தியிலே வந்து அமர்ந்து அருள வேணும்.



Monday, December 21, 2015

புண்ணியம் என்ன செய்தேனோ? 21.12.2015 : வைகுண்ட ஏகாதசி

21.12.2015 : வைகுண்ட ஏகாதசி

காலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனம். வெங்கடேசப் பெருமாள்.  நல்ல தரிசனம். அகத்திற்கு வந்ததும், ஏனோ, "குழலூதி மனமெல்லாம்" பாட்டே ஞாபகம். அதனால்தானோ என்னவோ, காம்போதியிலேயே உருவகம் ஆகி, கண்ணன் பாட்டாய் அமைந்திருக்கிறது!!


காம்போதி:

புண்ணியம் என்ன செய்தேனோ? நானும்
கண்ணனைக் கண்ணால் காண (புண்ணியம்)

வெண்ணெய் உண்டதெல்லாம் போதாதென்று அன்று
மண்ணும் உண்டவனைக் கண்ணால் காண (புண்ணியம்)

விண்ணவர் அமுதை, நீல வண்ணனை,
பண்வளர் குழலூதும் மாயனைக் காண (புண்ணியம்)


Wednesday, December 16, 2015

பெரியவா திருப்பாவை : 1 - 30

17.12.2015

இன்று மார்கழித் திங்கள் முதல் நாள். திருப்பாவையும் திருவெம்பாவையுமாய் அனைவரும் கூடி அந்தப் பெருமாளையும் சிவபெருமானையும் துதிக்கும் நாள்.

இந்த நாளிலே, திருப்பாவை மெட்டிலேயே, பெரியவாளையும் பாட ஆசை.

காலையில் எழுந்து, காஞ்சி நகர் சென்று, பெரியவாளின் பொன்னடி போற்றுவது போல் அமைந்திருப்பதும் பெரியவா கருணையே.

பெரியவா பாவை : 1

மார்கழித் திங்கள், அதிகாலை துயிலெழுந்து
நீராடி இங்குந்தன் நாமமதே செப்பிடுவோம்
சேர்ந்தே உன்னடியார் எல்லோரும் கூடிவந்து
சீர்மேவும் காஞ்சீபுரந்தனையே நாடிடுவோம்
பார்போற்றும் உந்தன் பொன்னடியே போற்றிடுவோம்
தேரேற்றி எம்பெருமான்  உந்தனையே எங்கணுமே
ஊரெல்லாம் கண்டிடவே புறப்பாடு செய்திடுவோம்
தேர்ந்தெம்மை அடியாராய்க் கொண்டிடுவாய் சரண்புகுந்தோம் (1)

18.12.2015
இன்று மார்கழித் திங்கள் இரண்டாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

வையத்து வாழ்வீர்காள், வாரீரோ காஞ்சிக்கு
ஐயன் அடிமலரை அனுதினமும் அர்ச்சிப்போம்
நெய்யாலும் பாலாலும் அபிஷேகம் செய்திடுவோம்
மையலே நீக்கிடும் அம்மன்னவனைப் பணிந்திடுவோம்
பொய்யுடல் அழிந்திங்கு உயிர் மெய்யை விட்டிடுமுன்
மெய்யுருக மனமுருக அவன் புகழே பாடிடுவோம்
செய்திடும் பணியெல்லாம் அவன் பணியாயாகிடவே
உய்யுமாறெண்ணி அவன்பதமே சரண்புகுவோம் (2)

19.12.2015
இன்று, மார்கழித் திங்கள் மூன்றாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

ஓங்கி உலகளந்து காத்தருளும் மாதவனும்
பாங்காய் மாதவளைத் தன்னுடலில் கொண்டவனும்
ஏங்கி அழுத நல்லடியவர்க்காய் விண்ணுலகை
நீங்கி மிகப்பரிந்து ஓருருவில் வந்தனரே
ஆங்கோர் காஞ்சி அருள்நிறைசீர்ப் பதிதன்னில்
நாங்களும் வந்தவன் பதமலர்கள் தாம்பற்றித்
தாங்கரும் துயரப் பிறவிப் பிணிக் கொடுமை
தீங்கெலாம் தீர, அவன்பதமே சரண்புகுந்தோம் (3)

20.12.2015
இன்று, மார்கழித் திங்கள் நான்காம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

ஆழி மழைக்கண்ணன் அருளுருவாய் வந்துதித்து
வாழ உலகெல்லாம் வழி செய்த மாமணியை
ஏழுலகும் போற்றும் அப்புண்ணியனை, சங்கரனை
தாழ்சடையும், நீள்முடியும், ஒண்மழுவும் நீக்கியிங்கு
சூழ்கலியை செற்றிடவே நடைநடந்த நாயகனை
தோழியென, மைத்ரியென, அன்புருவாய் நின்றோனை,
வாழியென்று வாழ்த்திடவே சீர்காஞ்சி நகர்செல்வோம்
பாழ்மனமுன் புகலென்று அவன்பதமே சரண்புகுவோம் (4)

21.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஐந்தாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

மாயனை, மனிதனாயிங்கே மாமாயம் செய்தானை,
தூயனை, பாலாற்றங்கரை வந்தமர்ந்தானை,
காயம் கடந்தெங்கும் வியாபித்து நின்றானை,
சேயன் எனையாண்டு மலர்ப்பதமே தந்துவினை
ஓய அருளாசி தந்தானை, காமாக்ஷி
சேயனை, சீர்காஞ்சி நகர் சென்றவன் பெருமை
வாயினால் பாடி, மலர்தூவிக் கைதொழுவோம்
ஆய பயனும் அவன் பதமே! சரண் புகுந்தோம்! (5)

22.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஆறாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

புள்ளும் சிலம்பினகாண்!  எழுந்திங்கே வாரீரோ
வெள்ளிக் கதிரோனும் சீர்காஞ்சி நகர்வந்தான்
அள்ளக் குறையாத அருளமுதம் தருமுனிவன்
வெள்ளமெனக் கருணை பொங்கிடவே வீற்றிருக்க
உள்ளம் எடுத்தவனின் பதமலரில் ஸமர்ப்பித்து
மெள்ள வரும் அழுகை கொண்டிங்குள்ளிருக்கும்
கள்ளம் கபடெல்லாம் நீங்கத் துடைத்தமைதி
கொள்ளச் சென்றிடுவோம், அவன்பதமே சரண்புகுந்தோம் (6)

23.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஏழாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கீசுகீசென்றிங்கே பறவைகள் எல்லாம் சேர்ந்து
பேசியே வந்தன காண், சீர்காஞ்சி நகர் வாயில்
ஆசுகவிப் புலவர், பேரறிஞர், பண்டிதரும்
வாசி வாசியென்று வாசித்த செந்தமிழும்
நேசித்தவன் புகழைப் பாடிடவே வந்தனர் காண்
மாசில் மனத்தவராய் அடியார் நாம் நல்வாசம்
வீசும் மலரெடுத்து அவன்மேனி அலங்கரிப்போம்
தேசுடைய பொற்கழல்கள் பணிந்திங்கு சரண்புகுந்தோம்  (7)


24.12.2015
இன்று, மார்கழித் திங்கள் எட்டாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கீழ்வானம் வெள்ளென்ன, கதிரோனும் எழுந்திங்கு
தாய்வீடாம் எழில்கொஞ்சும் சீர்காஞ்சி நகர் வந்தான்
தேவாரம் ஓதுமவன் அடியாரும் வந்திடுவார்
நாவார அவன் பெருமை நாளெல்லாம் பேசிடுவோம்!
சாவா வரந்தரும் அம்மூவா மருந்தாவான்
தேவாதி தேவனவன் பொற்கழலே பணிந்திடுவோம்!
பாவாலவன் புகழே பாடிடுவோம்! பவக்கடற்கு
நாவாயவனன்றே! அவன் பதமே சரண்புகுந்தோம் (8)


25.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஒன்பதாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

தூமணி மாடத்தில் நெய்விளக்கொளி வீச
சாமகானம் வந்தெங்கணும் செவிநிறைக்க
ஹோமப்புகை எழுந்தக் கதிரோனின் வழிமறைக்க
நேமம் மிக்கடியார் ஜய சங்கரவென்றே
நாமம் மிகச்சொல்லி நாவெலாம் இனித்திருக்க
தேமதுரத் தமிழில் சீர்காஞ்சி நகர்த்தேவை
மாமனித தெய்வத்தைப் பாடியவன் பதமலர்க்கே
சேமமிக மங்களமும் சொல்லியவன் சரண்புகுவோம் (9)

26.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பத்தாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

நோற்றுச் சுவர்க்கம் புகுமாசை கொண்டு பெரும்
ஏற்றம் மிகுந்ததாம் சீர்காஞ்சி நகர்வாழும்
ஊற்றாய்ப் பெரும்கருணை உலகத்திற்களித்துவரும்
கூற்றைக் கடிந்துதைத்து மாற்றும் விழுப்பொருளை,
பேற்றைப் பணிந்திடவே அடியவர்கள் அனைவருமே
நாற்றத் துழாயதுவும் மாலைகளும் கொண்டிங்கு
போற்றியே வந்தோமச் சன்னதி அடைந்து விட்டோம்
ஆற்றோம் இனியேதும்; அவர் தாளே சரண்புகுந்தோம்  (10)


27.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதினொன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கற்றுக் கறவைக் கணமும் வந்திங்கு
நிற்றலே கண்டோமச் சன்னதி வாசலிலே
கற்றார் போற்றிடும் கஜராஜன் மகிழ்ந்தேக
உற்றிங்கு கோபூஜை, கஜபூஜையும் கண்டோம்
சுற்றத்தாரெல்லாரும் கண்பனிக்க நின்றிட்டு
முற்றும் துறந்தாரின், முத்தேவருமாகி எமைப்
பெற்றாரின், சீர்காஞ்சி நகர்வாழ் பெருந்தேவின்
நற்றாள் தொழுதவரின் பதமலரே சரண்புகுந்தோம் (11)


28.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பன்னிரெண்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கனைத்திளம் கற்றெருமை சுரந்தருள் பால்போல் நாம்
நினையாமலிருந்தாலும் தாமே வந்தருள்தந்து
வினையாவும் தீர்த்தாளும் சீர்காஞ்சி நகர் வேந்தை,
தினையளவு வேதநெறி தழைத்திடத் துணைசெய்தால்
பனையளவு கொண்டிங்கு பார்போற்ற வைப்பாரை,
அனைவருமே அடிபணிவோம்; அபிஷேகம் கண்டருளில்
நனைந்திடுவோம், அடியாரின் நெஞ்சமாம் ராஜாங்கம்
தனையாட்சி புரிந்தருள்வார்,  பதமிங்கு சரண்புகுந்தோம் (12)


29.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதிமூன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

புள்ளுக்கும் அன்றுருகி கதிமோக்ஷம் தந்தானும்
கள்ளனாய் வெண்ணெயோடுள்ளம் கவர்ந்தானும்
வெள்ளமெனக் கருணை பொழித்தாயாய் சீர்காஞ்சிப்
பிள்ளையாய் வந்திங்கே அருளாட்சி புரிகின்றார்
துள்ளியே வந்திடுவோம்! கருணைமழை நனைந்திடுவோம்!
தெள்ளத் தேனமுதாய் தித்திக்கும் குரலோரை,
பள்ளித் துயின்றறியா வள்ளலவர் முகமலரை,
அள்ளிப் பருகிடுவோம், அவர் தாளே சரண் புகுவோம்! (13)


30.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதிநான்காம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

உங்கள் புழைக்கடை தோட்டத்து மலரெல்லாம்
திங்கள் திருமுகத்தார் திருப்பாதம் சேர்ந்திடவே
பொங்கும் பரவசத்தில் பூத்திங்கே குலுங்கினவே!
அங்கவரைக் கண்டிடவே, செங்கதிரோன் எழுந்தானே!
மங்காப் புகழுடை மந்தகாசர் தம்மை
சங்கத் தமிழினால் பாடியவர் கொலுவிருக்கும்
சிங்காதனமாம் இச்சீர்காஞ்சி நகரினிலே
பங்கய மலர்ப்பாதம் பணிந்தவரைச் சரண்புகுவோம்!  (14)


31.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதினைந்தாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

எல்லே இளங்கிளியே!  வாராய் எங்களுடன்!
தொல்லுலகமெல்லாம் படைத்தழித்து விளையாடும்
தில்லை அம்பலத்தான் சீர்காஞ்சி நகர் தன்னில்
செல்லக் குழந்தைகளாம் நமைக்காக்க வந்திங்கு
இல்லமே கொண்டிட்டான்! அவர் நாமம் உளமுருகிக்
கல்லாப் பிழைபொறுத்தார்! அவர் சொன்ன வழியிங்கே
நில்லாப் பிழைபொறுத்தார்! அவர்பாதம் பணிந்திடவே
எல்லோரும் வாருங்கள்! மலர்ப்பதமே சரண்புகுவோம்! (15)


01.01.2016
இன்று, ஆங்கிலப் புது வருஷம். மார்கழித் திங்கள் பதினாறாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

நாயகனை, அம்மாவெனக் கதறி ஓடிவரும்
சேயவரைக் காத்தருளி, சீர்காஞ்சி நகர்வாழும்
தாயவளை, பெரியவா என்னும் பெயர்கொண்ட
மாயவனை, வந்திங்கு நம்மிடை மனிதனாய்க்
காயமே கொண்ட நல்லமுதினை, கற்பகத்தை,
தூயவனை, கண்டோம் இச்சன்னதியில்! நம்வினைகள்
ஓய, ஜய சங்கரவென்போம்! பெரியவா சரணமென்போம்!
தீயவையெலாம் மாய, அவர்பதமே சரண்புகுந்தோம்! (16)


02.01.2016
இன்று மார்கழித் திங்கள் பதினேழாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

அம்பரமாய்த் திக்கணிந்து ஆனந்த நடமாடும்
எம்பிரான் நீயிங்கினிதே எழுந்திராய்!
கம்பனாய் எழுந்தருளி, காஞ்சிமாநகரமர்ந்த
உம்பர் கோமானே, உறங்காதெழுந்திராய்!
சம்புவாய், சங்கரனாய், காமாக்ஷித் தாயவளாய்
அம்புவியில் வந்துதித்த அருளே எழுந்திராய்!
நம்பிவந்துனைத்துதிக்கும் அடியவர்க்கரணாவாய்
செம்பொற்கழலிணையே துணையென்று சரண்புகுந்தோம்! (17)


03.01.2016
இன்று மார்கழித் திங்கள் பதினெட்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

"உந்து மத களிறு" என்று இன்றைய திருப்பாவைப் பாசுரம் ஆரம்பிக்கிறது. நந்தகோபனின் பெருமைகளை பேசும் ஆண்டாள், அவனிடம் இருந்த யானைப் படைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறாள்.

ஆனால், 'மத களிறு' என்று பெரியவா சம்பந்தமாகக் களிற்றைப் பற்றி - யானையைப் பற்றி நினக்கும்போது, அவர் அந்த மத களிற்றை விளையாட்டாய் அடக்கிய நிகழ்ச்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஒன்றல்ல - இரு நிகழ்ச்சிகள்!!

இரண்டும், பெரியவா பக்தர்கள் அனைவரும் மிக நன்றாக அறிந்தவையே. ஆனாலும் எத்தனை முறைதான் பெரியவா நடத்திய அற்புதங்களைப் பற்றிப் படித்தால் என்ன? அலுக்கவே போவதில்லை!  இந்த இரு நிகழ்ச்சிகளையும் பெரியவாளின் அத்யந்த பக்த கோடிகள் எழுதியது. அடியேன் internet / blog ல் பார்த்ததை, அப்படியே இங்கே தருகிறேன்.

Incident 1 : 

"செம்மங்குடியில் பட்டாமணியார் வீட்டில் பூஜை. மடத்தின் ஸ்ரீகார்யம்,ஸ்வாமி அபிஷேகத்துக்காக பட்டத்துயானை மேல் ஒரு வெள்ளிக்குடத்தில், செம்மங்குடி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார். பட்டாமணியார் வீட்டுவாசலுக்கு வந்ததோ இல்லையோ, யானைக்கு மதம் பிடித்துவிட்டது!

நல்லவேளை, ஸ்ரீகார்யம் வெள்ளிக்குடத்தோடு கீழே குதித்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். யானைப்பாகனோ, உயிர் பிழைத்தால் போதும் என்று எங்கேயோ ஓடிவிட்டான்! ஒரே அமளிதுமளி! தெருவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் கிடைத்த வீட்டுக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டு, ஜன்னல் வழியாக கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யானை, கிழக்குக்கோடியிலிருந்து மேற்குக் கோடிவரை கன்னாபின்னாவென்று ஓடி, அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்தது! ஒரே பிளிறல்! பெரியவாளை வரவேற்க போட்டிருந்த பந்தக்கால்கள், தூண்கள், திண்ணையில் போட்டிருந்த தட்டிகள் எல்லாவற்றையும் அடித்து இழுத்து த்வம்ஸம் பண்ணிக் கொண்டிருந்தது! உள்ளே ஓடிய ஸ்ரீகார்யம் பெரியவாளிடம் "யானைக்கு மதம் பிடிச்சுடுத்து!......பெரியவா" மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கூறினார். குடத்தோடு கீழே குதித்த பயம் இன்னும் போகவில்லை. தெருவில் ஈ காக்காய் இல்லை. யானை மட்டும் இங்கே அங்கே ஓடிக் கொண்டிருந்தது.

இதோ.........கஜேந்த்ரவரதனாகவீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் பெரியவா கையில் நம் எல்லாருடைய மதத்தையும் அடக்கவல்ல தண்டத்தோடு! தன்னந்தனியாக மதம் கொண்ட யானையின் எதிரே போய் நின்றார்!

"கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!" தெய்வத்தின் குரல்....... நம் போன்ற ஆறறிவு, பகுத்தறிவு என்று பீற்றிக்கொள்ளும் மானிட ஜாதியை விட, ஐந்தறிவு, ஏன்? அறிவேயில்லாத அசேதன வஸ்துக்களுக்கு கூட உள்ளே சென்று வேலை செய்யும் தெய்வத்தின் குரல்..ஓங்கி ஓலித்தது!

இதோ ஐந்தறிவு ஜீவனாக, ப்ரம்மாண்டமாக அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்த யானை, பூஞ்சை மேனியரைக் கண்டதும் கட்டிப்போட்ட பசு மாதிரி வடக்குப்பக்கம் தலையும், தெற்குப்பக்கம் வாலும் வைத்து, தெருவையே அடைத்துக் கொண்டு பெரிய மூட்டை போல் மஹா சாதுவாகப் படுத்துக் கொண்டது! ஜன்னல், மேல்மாடிகளில் இருந்து இந்த கண்கொள்ளாக் காட்சியை, அதிசயத்தை அன்று கண்டு களித்த பாக்யவான்கள் ஏராளம்!

வாசலில் இருந்து கஜேந்த்ரவரதனை பார்த்துக் கொடிருந்த ஸ்ரீகார்யத்தை அழைத்து, "கல்பூரம், சாம்ப்ராணி,வாழைப்பழம், பூ.....எல்லாம் ஒடனே கொண்டா"எட்ட இருந்தே பெரியவா சொன்னதை குறித்துக் கொண்ட ஸ்ரீகார்யம், அவர் கேட்டதை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, யானையின் மேல் உள்ள பயத்தால், திண்ணையிலேயே வைத்து விட்டுப் போய்விட்டார், உயிருக்கு பயந்து!

பெரியவா தானே அந்த மூங்கில் தட்டை கொண்டுவந்து, ஒருமணிநேரம் முன்பு தெருவையே பிய்த்துப் போட்டுவிட்டு, இப்போது சமத்து சக்கரைக்கட்டியாக வாலை சுருட்டி, உடலைக் குறுக்கி, காதைக் காதை ஆட்டிக் கொண்டிருந்த யானைக்கு கஜபூஜை பண்ணி, பூ சாத்தி, கல்பூரம் ஏற்றி சாம்ப்ராணி காட்டி விட்டு, வாழைப்பழத்தை தன் திருக்கரங்களால் அதன் வாய்க்குள் குடுத்தார். "எழுந்து போ! இனிமே விஷமம் கிஷமம் பண்ணாதே!" என்றதும், அந்த பெரிய சர்க்கரை மலை மெல்ல எழுந்து அடக்க ஒடுக்கமாக, அந்த இத்தனூண்டு தெருவில் கால்வாசி இடம் விட்டு ஒரு ஓரமாக நின்றது.





******************************

Incident 2 : 


தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது். பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.


‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்!

அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!


**************************


இந்த இரண்டு நிகழ்ச்சிகளும், இந்த முதல் வரியான 'உந்து மதகளிறு' என்று தொடங்கும் அந்த ஒரு வரிக்கு உண்டான நிகழ்ச்சிகள். அதிலும், யானையுடன் பெரியவா நடத்திய அத்தனை திருவிளையாடல்களும் இடம் பெறவில்லை! மாங்காடு கோவிலுக்கு பெரியவாளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் ஒரு களிறு என்று சொல்வார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ இருந்திருக்கலாம்...


பாடலின் மற்ற வரிகளுக்கும் பெரியவா சரிதத்திலிருந்து நிகழ்ச்சிகளை, அவர் நடத்திய அற்புதங்களைச் சொல்வதென்றால்...? இந்த ஜன்மமே போதாது என்றுதான் தோன்றுகிறது.


இன்றைய பெரியவா திருப்பாவை: 


உந்து மதகளிறும் அடிபணிந்தடங்கி நிற்கும்
சிந்துமிசைக் குரலோன் சன்னதி நின்றவன்தன்
கந்தம் கமழும் கழலே பணிந்தெழுவோம்!
அந்தமில் ஆதி ஸ்வரூபன் குணநலமே
சந்ததம் செந்தமிழ் சந்தத்தில் இசைத்திடுவோம்!
வெந்துயர் போக்கும் சந்திர ஒளிமுகத்தை
குந்தகம் நீக்கும் பங்கயக் கரமலரை
வந்து நாம் பாடி, அவன் பதமே சரண்புகுந்தோம்!  18


04.01.2016
இன்று மார்கழித் திங்கள் பத்தொன்பதாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

குத்து விளக்கெரிய, சன்னதியில் திருமுகமும்
முத்துச் சுடராக ஒளிதந்து பளபளக்கப் 
பித்தாக்கி இங்கெந்தன் உள்ளம் கவர்ந்தானை,
சித்தம் தனதாக்கி, எனையடிமை கொண்டானை,  
நித்தம் பாடிப் பரந்திங்கிருந்திடுவோம்!
வித்தக வேதவினோதனை, முக்தனை, 
அத்தனை, சுத்தனை, எங்கள் மா சொத்தினை, 
உத்தமனைத் தொழுது, அவன்பதமே சரண்புகுந்தோம்! 19



05.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபதாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


முப்பத்து மூவர் அமரர்களும் வந்தேத்தும்
அப்பனைக் கண்டோமிக் காஞ்சி நகரினிலே
கப்பிடும் கவலைக் காரிருள் போக்கிடும்
செப்பரும் ஒளியை, காணரும் ஜோதியை,
ஒப்பிலா மணியை, தித்திக்கும் தேனமுதை
தப்பெலாம் மன்னித்தருளொன்றே புரித்தாயை
எப்போதும் எல்லோர்க்கும் எளியவனாம் அன்புருவை
இப்போதே பணிந்தருள்செய் பதமலரே சரண்புகுந்தோம் 20



06.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஒன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


ஏற்ற கலமாக, உன்கருணை மழை தாங்க,
மாற்றுவாய் எங்களை, அருகதை ஏதுமில்லோம்,
ஆற்றுப் படுத்தி அருகழைத்தணைத்திடுவாய்,
போற்றியே நின்றோம், வேறேதும் செயலொழிந்தோம்
காற்றாய் எங்களுயிர் மூச்செலாம் நிறைந்தோய் நீ,
கூற்றும் கடிந்தெம்மைக் காப்போய் நீ உனைக்காண
ஆற்றாது சீர்காஞ்சி நகர்வந்துன் அடி பணிந்தோம்
தேற்றியே எங்களைக் கொள்வாயுன் சரண் புகுந்தோம்  (21)



07.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து இரண்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

அங்கண் மாஞாலத் தரசெலாம் அடிபணியும்
எங்கள் மா தவமே! உன்னடி பணிந்திடவே
மங்காப் புகழுடை சீர்காஞ்சி நகர் வந்தோம்!
பங்கயக் கண்ணாலே எங்களை நோக்கிடுவாய்
இங்கெந்தம் பாவங்கள் இழிந்திங்கெம் பிறவியெலாம்
தங்காதொழிந்திட, மனமென்னும் மேடையிலே
சிங்காதனமிட்டோம்! வந்தமர்ந்து மங்கலமே
பொங்கும் வரமளிப்பாய்! உன்பதமே சரண் புகுந்தோம்!  (22)



08.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து மூன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


மாரிபெய் கானகம்போல் இருளடைந்தழுக்கும் சேறும்
ஊறியே உழலும் எந்தன்  மனத்துளே வந்தமர்ந்து
வாரித்தந்தருளை நல்கி வளமெலாம் தந்த தாயை
கோரிய யாவும் தந்து கோராத பதமும் தந்து
சீரிய வாழ்வு தந்து, சிறப்பெலாம் தந்து பின்னும்
பாரித்துக் காத்தணைக்கும் கருணையின் கடலை இங்கே
ஓரிக்கை தன்னில் கண்டோம், காஞ்சி மா நகரும் கண்டோம்
சேரிடம் இதுவேயென்று, தாயவள் சரணே கொண்டோம்   (23)



09.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து நான்காம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

அன்று இப்பாரதம் நடந்தாய் அடி போற்றி
நின்றாய் அடியாரின் உள்ளமெலாம் குணம் போற்றி
நன்றாய் வரமதையே வழங்கிடுமுன் கரம் போற்றி
என்றும் கார்முகிலாய்க் கருணைபொழி கண் போற்றி
மன்றாய் சீர்காஞ்சி நகரமர்ந்தாய் பதம் போற்றி
வென்று மனமுருக்கும் உன்தெய்வக் குரல் போற்றி
கன்றாய் தாயுந்தன் இடம்தேடி ஓடிவந்தோம்
ஒன்றே அபயமென உன்பதமே சரண்புகுந்தோம்  (24)



10.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஐந்தாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து உலகன்னை 
ஒருத்தி மகனாய்ச் சிறந்த தயாபரனை,
திருத்தி எமையாண்டு, எப்போதும் எங்கள்பிழை
பொறுத்தானை, பிணியெலாம் அறுத்தானை, பவவினை
ஒறுத்தானை, ஐம்புலன் வெறுத்தானை, போகங்கள்
மறுத்தானை அடிபணிந்துய்யவே வேண்டிநாம்
அருத்தித்து வந்தோம் சீர்காஞ்சி நகருக்கு!
வருத்தமும் தீர்ந்தோம்; அவன்பதமே சரண் புகுந்தோம்!  (25)



11.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஆறாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

மாலே! மணிவண்ணாவுன் ஆருயிர் மைத்துனன்
மூலமா முதல்வன்,  சங்கரன், படையேயின்றி
ஜாலமாய் வந்திங்கு எங்களைக் காக்குமந்தக்
கோலமே கண்டாயோ?  எம்முடன் காஞ்சிவந்து
ஆலமே உண்டவாயன் காவியே பூண்டுவந்து
ஓலமிட்டழுது நின்ற மாந்தரை அணைத்துத் தாயைப்
போலக்காத்தன்பு ஊட்டி அருள்மழை பெய்யுமந்த
சீலமே காணவாராய்! அவன்பதம் சரண்புகுந்தோம்!  (26)




12.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஏழாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


கூடாரை வெல்லும் எம்பெரியவா உங்களைப்
பாடி மகிழுவதே வேலையாய் யாம் கொண்டோம்!
ஆடி அம்பலத்திருப்பானும் அரங்கத்தில் 
கூடித் திருவோடு சயனமே கொண்டானும்
நாடி நமக்காக ஓருருவாய் வந்தாரை
வாடிய அடியாரின் வாட்டம் களைந்தாரை
தேடி நாம் வந்திங்கு சீர்காஞ்சி நகர் கண்டோம்
கோடாதும்பதமே என்றென்றும் சரண் புகுந்தோம்! (27)



13.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து எட்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


கறவைகள், வேதியர், சதுர்வேதம் காப்போய் நீ!
அறவழிதனைக் காத்து, அறிஞரையும் காப்போய் நீ!
மறவாமல் அடியாரை அனுதினமும் காப்போய் நீ!
சிறியேன், கடையேன், எனையென்றும் காப்போய் நீ!
அறிவேதுமில்லாமல்,”நீவாபோ” என்றுன்னை
உறவாக நினைத்ததனால்,  உள்ளன்பின் மிகுதியினால்
சிறு பேரழைத்திட்டோம், கோபம் நீ கொள்ளாதே
இறைவா, என் ஐயா, உன் பதமே சரணடைந்தோம் (28)


14.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஒன்பதாம் நாள் முடிந்து முப்பதாம் நாளும் வந்துவிடுகிறது. அதனால், பெரியவா திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்களை இன்றே பார்ப்போம்.

சிற்றம் சிறுகாலே வந்துன் அடிபணிந்தே
பொற்றாமரை முகமே பார்த்து ரசித்திருப்போம்!
நற்றவ மாமுனி, நற்பதம் தருவாயென் (று)
உற்றுனை நாடி உன்னேவல் செய்திருப்போம்!
பெற்றவன் நீயென, உற்றவன் நீயென, 
முற்றுமே நீயென,   சீர்காஞ்சி வந்துன்னைப், 
பற்றியே உன்னடிமை எற்றைக்கும் பூண்டுவிட்டோம்!
குற்றமில் குணக்கடலே! உன்பதமே சரண்புகுந்தோம் !  (29)



வங்கக் கடல்துயின்ற மாதவனும் இமயத்து
நங்கையும், மணவாளன் தானுமே ஒருவராய்,
எங்களைக் காக்கவே சீர்காஞ்சி வந்ததை,
இங்கிப்பாமாலையால் செப்புவார் யாவர்க்கும்
எங்கணும் என்றென்றும் மங்கலம் தங்கிடும்!
பொங்கிடும் பொங்கலில் அவரருள் பொங்கிடும்!
மங்காத வாழ்வையும் இன்னருள் தந்திடும்!
பங்கயச் சீரடிக்கே, வந்திங்கே சரண்புகுந்தோம் !  (30)