Sunday, March 6, 2016

07.03.2016 : சிவராத்திரி : சாமகான வினோதா நமோ நம!

07.03.2016 : சிவராத்திரி :

இன்று, சிவராத்திரி. அந்த சாமகான லோலனான சிவபெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில், பெரியவாளை, அருணகிரியாரின், "நாத விந்து கலாதீ நமோ நம" என்னும் பாடல் சந்தத்திலே பாடிப் பரவ வேண்டும் என்று தோன்றியது.

இன்றைய புண்ய தினத்திலே, எல்லோரும் குருவருள் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொண்டு, இந்தப் பாமாலையை, பெரியவா பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
**************************************************************************

சாமகான வினோதா நமோ நம!
வாமபாகமும் ஆனாய் நமோ நம!
வேதம் தேடிடும் பாதா நமோ நம! குருநாதா! (1)

ஆதியந்த மிலாதோய் நமோ நம!
வேதியர்தொழும் தேவா நமோ நம!
ஸ்வாமியாம் எங்கள் நாதா நமோ நம!  குருநாதா! (2)

காஞ்சியில் உறைக் கோவே நமோ நம!
தீஞ்சுவை ஸ்வர கீதா நமோ நம!
ஞான பங்கயப் பாதா நமோ நம! குருநாதா! (3)

மாய இருள் எரி ஈசா நமோ நம!
தூய ஹ்ருதயநி வாசா நமோ நம!
சந்த்ர சேகர வாணீ நமோ நம! குருநாதா! (4)

நீல கண்டவி நோதா நமோ நம!
பாலஸ் கந்தனும் நீயே நமோ நம!
ஆதி குஞ்சரி ஆனாய் நமோ நம! குருநாதா! (5)

ஆலம் உண்டயென் ஸ்வாமீ நமோ நம!
ஞாலம் உண்டபெம்மானே நமோ நம!
சோகம் நீக்கும் ப்ரகாசா நமோ நம! குருநாதா! (6)

தேச சஞ்சர பாதா நமோ நம!
வாச குஞ்சித க்ரீடா நமோ நம!
கால கால மகேசா நமோ நம! குருநாதா! (7)

தேசுலாவிடும் ஜோதீ நமோ நம!
மாசு ஏதிலா ஞானீ நமோ நம!
ஓரிக்கை உறை தேவே நமோ நம! குருநாதா! (8)

காமகோடிப் ப்ரதீபா நமோ நம!
நாம அமிர்த விலாஸா நமோ நம!
கருணை பொங்கு த்ரிநேத்ரா நமோ நம! குருநாதா! (9)

கோடி சூர்ய ப்ரகாசா நமோ நம!
ஆடிடும் நட ராஜா நமோ நம!
வந்தருள் திவ்ய ரூபா நமோ நம! குருநாதா! (10)













No comments:

Post a Comment