Tuesday, March 1, 2016

01.03.2016 : அனுஷ தினம் : வேல் மாறல் சந்தப் பாமாலை

01.03.2016: அனுஷ தினம்:



இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளின் பத கமலங்களை, அருணகிரியாரின் "வேல் மாறல்" சந்தத்திலே துதிக்க வேண்டும் என்று தோன்றியது.

'வேல் மாறல்" எனும் அரிய ஸ்தோத்திரம், சகல வினைகளையும் போக்கக் கூடியது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

"தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தானம்"

என்ற அழகாக பெருகும் அதே சந்தத்திலே, பெரியவாளின் பத கமலங்களை, நமக்காக நடந்த அந்தத் திருப்பாதங்களைப் பற்றிப் பாடத் தோன்றியது.

இந்தத் திருப்பாதங்கள், அன்றொருநாள், அழுத ஞானசம்பந்தக் குழந்தைக்காக ஓடி வந்த பாதங்கள். பழம் கிடைக்கவில்லையென்றவுடன், நமக்காகப் பழனி மலை சென்று நின்ற பாதங்கள். சூரனைக் கொல்லவென்று, வேல் தொடுத்து நின்ற பாதங்கள். ப்ரஹலாதன் என்னும் அந்தப் பக்தக் குழந்தை எந்தத் தூணைச் சுட்டிக் காட்டுமோ என்று, காத்துக் கொண்டு, அத்தனைத் தூணிலும் துரும்பிலும் காத்து நின்ற பாதங்கள். உலகைக் காக்கவென, தன்னைத் தாழ்த்திக் கொண்டு, 'தா' என்று இரந்து ஏந்தி, இந்த மூவுலகும் அளந்த பாதங்கள். தந்தை சொல் காக்க, கைகேயி சொல் கேட்டு, பாரதம் முழுக்க நடந்த பாதங்கள். பாண்டவர்க்கு, அவரது அரசுரிமையைத் திரும்பிப் பெறவென, தூது நடந்த பாதங்கள். திருக்கையிலை விட்டு, அம்பலத்திலே, நமக்காக நடமாடி நின்ற பாதங்கள். தன்னைக் கட்டிக் கொண்ட அந்த மார்க்கண்டேயக் குழந்தைக்காக காலனையே கடிந்து உதைத்த திருப்பாதங்கள். முடியாமல் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டிக்காக, பிட்டுக்கு மண் சுமந்து அடி வாங்கி நடந்த பாதங்கள். பார்த்தனுக்காக, அவனுடன் மற்போர் செய்து விளையாடி அடிவாங்கிக் கொண்டு, பாசுபதம் தந்து அருள் செய்ய வந்த பாதங்கள். பிரசவ வேதனையில் ஒரு பக்தை துடித்தபோது, உடனே, தாயினும் பரிந்து தாயுமானவராய் ஓடோடி வந்த பாதங்கள்.

இவை எல்லாம் செய்தது போதாது என்று, நம்மைத் திருத்துவதற்காக, நமக்கு அருள் செய்வதற்காக, பாரத தேசமெங்கும் நடையாய் நடந்த பாதங்கள். நலிந்தவர்களை, தன்னைத் தேடி வர முடியாதவர்களையும் தேடித் தேடிச் சென்று அருள் செய்த பாதங்கள். அருள் ஒன்றே கொடுக்கவென நமக்கு அருள் செய்யும் பாதங்கள். அவரைத் துதித்து அழுது முறையிடுவோரின் மனதிலே, நித்தம் வந்து குடியிருக்கும் பாதங்கள்.

இந்தத் திருப்பாதங்களை நினைத்து, தொழுது, இந்தப் பாடலை, பெரியவாளின் பதகமலங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
**************************************************

பசித்தழுத திருக்குழவி புசிக்கவொரு பெருத்தமுலை எடுத்தமுது அளிக்கவென உதித்தபதம் போற்றி (1)

பழத்தையுடன் அடைந்துவிட நினைத்துமயில்  தரித்துலகை சுழன்றுமனம் வெதும்பிமலை நிலைத்தபதம் போற்றி (2)

பெருத்தஇடர்  வளர்க்குமொரு அரக்கருடல்முடிக்கவென எடுத்துவொரு படைக்கலமும் தொடுத்தபதம் போற்றி (3)

இருக்குமிடம் உரைத்திடென அரக்கனவன் சினக்கமகன் குறித்தவிடம் வெடித்தவனை கிழித்தபதம் போற்றி (4)

அரக்கனது மனத்திமிரை அடக்ககரம் தழைத்துடலை சிறுத்துஅடி பெருத்துலகை அளந்தபதம்  போற்றி (5)

கறுத்தமன மொருத்திசொல சிரித்துமனை விடுத்தவுணர் குலத்தையற முடிக்கவென கடிந்தபதம் போற்றி (6)

தனிப்பகடை உருட்டிமிக தொலைத்தமுடி கிடைக்கவென மறுத்தவரை திருத்தநடை  நடந்தபதம் போற்றி (7)

விரித்தசடை வெளுத்தமதி குளிர்த்தமலை கிடக்கநடம் நடிக்கவென எடுத்துஜதி பிடித்தபதம் போற்றி (8)

வெடித்துதடை கடித்துயமன் பிடித்தவனை அணைத்துஅருள் அளித்தவனை இழுத்தவனை உதைத்தபதம் போற்றி (9)

தளும்பியணை உடைத்துமடை பெருக்கியதை தடுக்கமணல் சுமந்துஅடி
பொறுத்துநடை நடந்தபதம் போற்றி (10)

தனஞ்சயனை எதிர்த்தவனை உடற்பொருது கொடுத்தஅடி பொறுத்துகணை
கொடுத்தருளு மளித்தபதம் போற்றி (11)

சுழித்துநதி மிகப்பெருக பெரும்வயிறு துடித்தழுத கணத்திலுடன் சுகப்ரசவ மளித்தபதம் போற்றி (12)

திருப்பரதம் எனத்திகழும் சிறந்தநிலம் திருத்தவென மெலிந்தவுடல் வருந்ததினம் நடந்தபதம் போற்றி (13)

பெருங்கருணை அருள்மழையை நலிந்தவரும் அடைந்துயர தினந்தினமும் நடந்துடலும் இளைத்தபதம் போற்றி (14)

சிறுத்தமதி கறுத்தமனம் மிகுத்தபகை அழித்தொளியை விரித்தருளை அளித்துலகை அணைத்தபதம் போற்றி (15)

நினைத்தவரை துதித்தழுது இளைத்தவரின் மனத்திலொரு தனித்தகமும் அமைத்தவரில் நிலைத்தபதம் போற்றி (16)


No comments:

Post a Comment