Sunday, March 27, 2016

28. 03. 2016 : அனுஷம் : வந்துடன் காப்பாய் ஐயா!

28.03.2016 : அனுஷம்

நாளை, அனுஷம். பெரியவா பதம் பணிந்து, ஔவையும், மாணிக்க வாசகரும், அருணகிரிநாதரும், சம்பந்த மூர்த்தியும், வள்ளலாரும் அந்த இறைவனைப் பாடிப் பரவிய பாங்கிலே, என் மனதுறை மூர்த்தியை, அந்த ஸ்ரீசரணாளைப் பாடிட முயன்றிருக்கிறேன்.

பெரியவா சரணம்.
**************************************************************



வந்துடன் காப்பாய் ஐயா!

ஐங்கரனுக்கென்று ஔவை அன்று நான்கினையே தந்தாள்
பைங்கனித் தேனும் பாலும் பாகுமோர் பருப்பும் தந்தாள்
பைந்தமிழ் மூன்று மட்டும் தாவென்று கேட்டுப் பெற்றாள்
ஐங்கரன் மகிழ்ந்தான் நான்கைப் பெற்றுடன் மூன்றே தந்தான்

அறுமுகன் வடிவாய் வந்தீர்! குரு உமக்கென்று நானும்
அறுபொருள் தந்தேன், பதிலாய் ஒருபொருள் மட்டும் கேட்டேன்
உறுபதம் ஒன்றை, எல்லாம் தரும்பதம் ஒன்றை, உங்கள்
அரும்பதம் அதனைக் கேட்டேன், பரிந்துடன் தருவீர் ஐயா!

அகத்துளே உம்மை வைத்து, இதுவரை என்னுள் சேர்த்த
அகங்காரம், காமம் கோபம், மதமோக லோபம் என்னும்
மிகச் சிறும் கீழ்மை ஆறும் உமக்கென்று தந்து விட்டேன்
உகந்தெனை ஏற்பீரய்யா!, பதம் மட்டும் தருவீரய்யா!

இன்சுவை பாடல் தந்த மாணிக்க வாசகனார் அன்று,
தந்தது தன்னையென்றார்; கொண்டது உன்னையென்றார்
தன்னையே சிவனுக்கீந்து, சிவனையே தனக்காய்க் கொண்டார்
உன்னால் நான் இன்பம் பெற்றேன்; என்னால் நீ பெற்றதென்னே?

உன்னின்பம் எனதே ஆக, என்துன்பம் உனதே ஆக,
என்னை நீ ஏற்று இங்கே என்னதான் சாதித்தாயோ?
உன்னையே பெற்று நானே பெற்ற சீர் பெரிதேயன்றோ?
உன்னிலும் நானே அன்றோ சதுரனிங்கென்று சொன்னார்!

மாணிக்க வாசகனார் சொன்ன வழியிலே நானும் செல்வேன்!
வாணியாம், காஞ்சித் தாயாம், உம்மையே என்னில் கொண்டு,
நாணிலேன், குற்றம் அன்றி ஏதிலேன் என்னைத் தந்து,
வாணிபம் செய்யும் என்னை, ஏற்றும்மைத் தருவீரய்யா!

ஆடிடும் மயிலை, கந்தன் அழகையே பாடவென்று,
பாடிடும் பணியே இங்குப் பணியாய் நீயருள்வாயென்று,
நாடியே கந்தன் பாதம் பற்றி அருணகிரியார் சொல்ல
தேடிய பாதம் தந்தான்! பாடிடத் தமிழும் தந்தான்!

அன்னையாய் அருகில் நீயும் இருந்திட வேண்டும் எந்தன்
முன்னர் நீ அமர்ந்திருக்க, உன்பதம் பற்றி நானும்
உன்னையே பாடும் வேலை தாவென்று உன்னைக் கேட்டேன்,
அன்னிய வேலையேதும் இல்லாமல் அருள்வாய் ஐயா!

அஞ்சுதல் நீக்கி என்னுள் ஆறுதல் அளிக்கும் கோவே!
கஞ்சிமா முனியே! உன்னைப் பாடிடும் பணியே அன்றி
கொஞ்சியே உன்னைப் பாடி பணிந்திடும் வேலை அன்றி
எஞ்சிய ஏதும் செய்யாப் பணியையே அருள்வாயப்பா!

உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய் கள்வனாய் நீயே என்று
துள்ளிடும் தமிழில் அன்று சம்பந்தர் சொன்னார் இங்கோ,
தெள்ளிய உள்ளம் இல்லை; தெளிந்ததோர் மதியும் இல்லை
கள்ளமும் கபடும் சூதும் வாதுமே நிறைந்த உள்ளம்

அதனையும் உனதாய்க் கொள்வாய், வந்துடன் கொள்ளை கொள்வாய்
சதமுனை என்னுள் வைத்து உன்னுளே என்னைக் கொள்வாய்
பதமதை நெஞ்சில் வைத்து, நானென்பதிறக்கச் செய்வாய்
நிதமுனை அன்றி ஏதும் நினைவிலாதென்னைச் செய்வாய்!


தடித்தவோர் மகனைத் தந்தை அடித்திடில் தாயணைப்பள்
பிடித்தொரு தாயும் வைதால், தந்தையே அணைப்பானங்கே
பொடித்திரு மேனி கொண்டோய்! தாய்தந்தை நீயே இங்கே !
அடித்தது போதும் என்றார், வள்ளலார், அணைக்கச் சொன்னார்!

தாயவள் போல இங்கு கருணையே செய்வோய் நீயே !
தூயவோர் தந்தை போல அணைத்துடன் நிற்போய் நீயே!
மாயமே காட்டும் வாழ்வில் உழன்றிங்கு அடியே பட்டு
காயமே நொந்து வந்தேன், வந்துடன் காப்பாய் ஐயா!
















No comments:

Post a Comment