Wednesday, January 20, 2016

பெரியவா படப் பாமாலை

பெரியவாளின் ஒவ்வொரு photoவும் ஒவ்வொரு கருணைப் பார்வை பார்த்து, நமக்கு அருள் வழங்குகிறது. "பெரியவாளோட photo"என்று சொல்வது கூட தப்புதான். ப்ரதோஷம் மாமா போன்ற பெரியவர்கள் சொல்வதுபோல் சொல்வதானால், "படப் பெரியவா, photo பெரியவா" என்றுதான் சொல்ல வேண்டும். அது வெறும் படமோ photoவோ இல்லை. பெரியவா குடிகொண்டிருக்கும் இன்னொரு மூர்த்தம்.

இன்றைய குருவாரத்தில், இந்த 'photo பெரியவாளை' நமஸ்காரம் செய்து ஒரு பாமாலை சார்த்த வேண்டும் என்று தோன்றியது.  பெரியவா தாள் பணிந்து, அவர் மேல் பாட விழைகிறேன்.


21.01.2016 :   பெரியவா, சிறு வயதில், பாலனாய்...

வேலனாம் ஸ்வாமினாதன் பெயரதே தாங்கிவந்து
பாலனாய்க்  காட்சிதந்து, கால்மேல் காலிட்டமர்ந்து
காலமா மருந்தாய் நீயும் எங்களைப் பார்க்கும் அழகுக்
கோலமே காணப் பெற்றோம்; உன்பதம் சரணம் உற்றோம் (1)


28.01.2016 :   பெரியவா, இளம் சூரியனாய்..



மோனமாய் தண்டம் தாங்கி, நெற்றியில் நீறு பூசி,
ஞானமாம் ஒளியை வீசிக், கண்களால் ஆசி நல்கி,
வானதி தலையில் சூடி, வானதாய்ப் பரந்த ஈசன்
தானதாய் அமர்ந்த தேவே! உன்பதம் சரண் எமக்கே! (2)

04.02.2016 :   பெரியவா, யுவ சிவனாய்...


சித்திரத் தேவே எம்மை நோக்கி உன் கண்கள் மின்ன,
ருத்திராக்ஷ மாலை மின்ன, கையிலே தண்டம் மின்ன,
அத்தனுன் பாதம் மின்ன, குறடுமே அழகாய் மின்ன,
நித்தமெம் நெஞ்சில் மின்னும் உன்பதம் சரணடைந்தோம்  (3)

11.02.2016 :   யுவப் பெரியவா, சிவப் பழமாய்...


அங்கமர்ந்திருக்கும் தேவே! இங்கு சற்றே திரும்பி,
எங்களைப் பார்த்திடாயோ? கண்களால் காத்திடாயோ?
மங்கல வாழ்த்துச் சொல்லி, நன்மையே சேர்த்திடாயோ?
பங்கயப் பாதம் தாராய், உன் பதம் சரண் அடைந்தோம் (4)

18.02.2016 :   யுவப் பெரியவா கருணைப் பார்வை...
கண்ணருட் பார்வை எங்கள் பழவினை நீக்க உந்தன்
தண்ணருட் கோலம் எங்கள் நெஞ்சின் மாசெல்லாம் நீக்க
விண்ணருள் பாதபத்மம் பிறப்பெனும் பிணியை நீக்க
எண்ணரும் நலமே நல்கும் உன்பதம் சரண் அடைந்தோம் (5)

25.02.2016 :   மஹேந்திர மங்கலம் அருளும் மங்கலம்





தண்டத்தைத் தாங்கும் கைகள் வரமொன்று தந்திடாதோ?
அண்டத்தைக் காக்கும் கண்கள் அருள்மழை பொழிந்திடாதோ?
அண்ணலே உந்தன் பார்வை நெஞ்செலாம் நிறைத்திடாதோ?
தண்மலர் பாதபத்மம் நித்தமும் சரண் அடைந்தோம் (6)

03.03.2016 :   என்ன யோசனையோ அப்பா?


கன்னத்தில் கையை வைத்து என்ன யோசனையோ அப்பா?
இன்னல்கள் தீர்க்க இந்த சமயமே சரியா என்றோ?
அன்னையாய் அருளைப் பெய்ய,  தருணமே சரியா என்றோ?
நின்பதம் சரண் அடைந்தோம்! வந்துடன் காப்பாய் ஐயா! (7)

10.03.2016 :   நின்றிடும் கோலம் கண்டேன்


உலகாளும் பரமன் இங்கே நின்றிடும் கோலம் கண்டேன்
மலர்ப் பதம் ரட்சையின்றி, நின்றிடும் அழகைக் கண்டேன்
நிலமகள் தாங்கும் பாதம் என் நெஞ்சில் தங்க உன்னை,
வலம்வந்து வேண்டிக் கேட்டேன், உன்னையே சரண் அடைந்தேன்! (8)

17.03.2016 :   சிங்காதனம் அமர்ந்த கோலம்


இன்று, குருவாரம். இந்த photoவில் இருந்து கொண்டு அருள்பாலிக்கும் பெரியவாளைப் பற்றி இன்று சிந்தனை செய்வோம்.

பெரியவாளாய், குருவாய் மட்டும் இல்லாமல், அந்த குருகோவிந்த ரூபிணியாய், அம்பிகையாய், காமாக்ஷியாகவே அமர்ந்து அருள்பாலிக்கும் இந்தப் பெரியவாளைத் துதிக்கும் இன்றைய பொழுதும், மற்ற எல்லாப் பொழுதுகளும், நல்ல பொழுதுகளாய் எல்லாருக்கும் மலரட்டும்.


வலதுகால் மடித்தமர்ந்து, இடப்பதம் பூமி தாங்க,
நலமெலாம் அருளவென்று, மருளெலாம் விலக்கவென்று,
துலங்கும் ருத்ராக்ஷம் மார்பில் அணிசெய்து ஒளியே வீச,
அலர்கதிர் ஞாயிறேபோல், அழகாக வந்து இங்கு,

சிம்மா சனத்தில் நீயும், தேவியாய் அமர்ந்து விட்டாய்!
எம்மா தவமு மில்லா எங்களுக்காக இங்கே
அம்மையாய் காட்சி தந்தாய், உன்னையே நினைத்து நெஞ்சம்
விம்மியே அழுது உந்தன் பாதமே தொழுது நின்றோம்

புவனங்கள் காக்கும் அந்த ஈசனும் நீயே பாதி
அவனுடல் கொண்ட தேவி அன்னையும் நீயே வந்து
தவமுறை தியானம் நெஞ்சில் துளிர்த்திடச் செய்வாய் நீயே
பவப் பிணி அறுப்போய் நீயே, உன்பதம் சரணம் ஐயா!  (9)

24.03.2016  வெண்கொற்றக் குடை நிழலில்


வெண்கொற்றக் குடையின் கீழே உலகாளும் வேந்தே உன்னை
கண்கொண்டு பார்ப்பதற்குப் புண்ணியம் என்செய்தோமோ?
எண்ணுதற்கறியோய் உன்னை நண்ணியுன் பதமே நாங்கள்
திண்ணமாய்ப் பற்றி நின்றோம், நின்பதம் சரணம் ஐயா! (10)

31.03.2016  விழிகளாம் ஆழி நல்கும் கருணை 



விழிகளாம் ஆழி மூலம் கருணையாம் வெள்ளம் நல்கி
உழியதாய்ப் பாதம் தந்து இன்னருள் தானும் தந்து
பழியுறும் பாவம் அன்றி வேறொன்று அறியா என்னை
வழிநடத்தியாளும் தேவே! நின்பதம் சரணம் ஐயா!  (11)

07.04.2016  போர்வையால் உடம்பை மூடி


கடுங்குளிர்ப் பொழுதில் காவிப் போர்வையோடிருக்கும் தேவே!
நடுங்கிடும் குளிரைப் போக்க நல்வழி சொல்வேன் நானும் !
அடும்கனல் என்னக் கோபம், காமமே கனன்று இங்கே,
சுடுநெருப்பாகத் தாபம் தகிக்குமென் நெஞ்சுள் வாரும்!


இன்பனி வெளியிருக்க உள்ளே கனன்றிடும் வெம்மை எனவே,
என்நெஞ்சுள் வந்துவிட்டால், போர்வையே உமக்கு வேண்டாம்!
தண்பனிக் கயிலை வாசா! அன்பர்கள் வாழ்த்தும் நேசா!
நின்பதம் சரண் அடைந்தேன், என்மனம் உறைவாய் ஐயா!  (12)


14.04.2016  பூஜை




ஈசனும் வந்து இங்கே, மனையிட்டமர்ந்திருந்து,
வாசநல் மலரெடுத்து, தன்னுளே தானின்றொளிரும்
தேசுடை சிவத்திற்கென்றும் அருச்சனை செய்யும் காட்சி
பேசவும் வல்லனோ யான்? நின்பதம் சரணம் ஐயா!  (13)


21.04.2016  நாவாய்



இன்று, குருவாரம். இன்றைய குருவாரத்தில், இந்த பவசாகரத்தினின்றும் நம்மைக் கரையேற்றுகையே ஒரே குறிக்கோளாய், வேலையாய்க் கொண்ட அந்த ஜகத்குருவை, பெரியவாளை, அந்த நாவாயாய் இருந்துகொண்டு, இந்த நாவாய் மேல் அமர்ந்தவாறு, இந்த நிழற்படத்தில் காட்சி கொடுக்கும் அந்த வள்ளலைப் பாடிப் பணிவோம்.

நாவாயாய் வந்து எம்மை பவக்கடல் தாண்டச் செய்யும்,
நாவாயிலமர்ந்து காட்சி நல்கிடும் தேவே உன்னை
நாவாலே பாடி நித்தம் மனதாலே சிந்தித்தென்றும்
பாவாலே துதித்துப் பாதம் பணிந்திட அருள்வீரய்யா!  (14)

28.04.2016  வரத ஹஸ்தம் உயர்த்தி



இன்றைய குருவார பெரியவா படப் பாமாலையில், இந்த photoவிலிருந்து கொண்டு, நமக்கெல்லாம் அபயம் அருளும் பெரியவாளைப் பணிந்து, உலகெலாம் நலம் வாழப் ப்ரார்த்தனை செய்து கொள்வோம்.



வரதஹஸ்தம் உயர்த்தி வாழ்த்தியே அஞ்சல் என்பாய்
கரதலமருள் மழையால் தவித்திடும் உலகைக்காக்கும்
விரதமதொன்றே நோக்காய் அவதாரக் குறியாய் வந்தாய்
சரணமென்றடைந்தோம் ஐயா பதமலர் அளித்துக் காப்பாய் (15)


05.05.2016 : ஒளியுமிழ் கண்கள் கண்டேன்



ஒளியுமிழ் கண்கள் கண்டேன்; இருளது விலகக் கண்டேன்
களிதரும் வதனம் கண்டேன்; கவலையும் மாறக் கண்டேன்
விளிக்கும் உன் நாமம் ஒன்றே விதியதை மாற்றக் கண்டேன்
அளித்திடும் கைகள் இங்கென் ஆவியை அணைத்தல் கண்டேன் (16)

12.05.2016 : திருவடி தருவாயப்பா!


திருவவள் தாயாய் வந்து தந்ததோர் வரமே நீயும்
அருளதே உருவாய்ப் பொங்கும் கருணையே வடிவாய் வந்தாய்!
பெருவரமொன்றாய், நாங்கள் பெறும்வரம் ஒன்றாய்வந்தாய்,
குருவடிவே நீ இங்குன் திருவடி தருவாயப்பா!  (17)

19.05.2016 : புன்னகை ஒன்று இதழ்க்கடை அரும்பி நிற்க..



இதழ்க்கடை அரும்பி நிற்கும் புன்னகை சொல்வதேதோ?
இதம்தரும் பார்வை நல்கும் வதனமிங்குரைப்பதேதோ?
நிதமருள் கரமும் மடியில் இருந்தருள் சேதியேதோ?
பதம் மறைத்தமரும் கோலம் சொல்லுமச் சேதியேதோ?

நீயிங்கிருக்க உன்னைப் பாரெங்கும் தேடும் எந்தன்
பேயிருள் மனதை எண்ணி வந்ததோர் சிரிப்போ அப்பா?
சேயிவன் மதிமூடத்தை மாற்றவே கரமும் தூக்கித்
தாயென அணைத்துன் பதமும் தந்தெனக் கருள்வாயப்பா!  (18)



26.05.2016 : சிம்மாசனத்தமர்ந்து....



சிம்மாசனத்தமர்ந்து எங்களைக் காக்கும் தேவே!
பெம்மானே இங்கு உந்தன் ஆட்சியில் வாழ நாங்கள்
எம்மாதவம்தான் செய்தோம்? உனக்கென்றும் ஆட்பட்டுந்தன்
செம்மாதவப்பதங்கள் சரணடைந்தோம், அருள்வாயப்பா!  (19)


02.06.2016 : .தவக்கோல வாழ்வை நச்சி


தவக்கோல வாழ்வை நச்சி, கயிலையை விட்டு இங்கு
பவக்கோலம் நீக்க வந்த பிக்ஷாடன மூர்த்தியோ நீ?
அவக்கோலம் போலிருக்கும் இடமெலாம் உன்னிருப்பால்
நவக்கோலம் பூண்டதென்னே? உன் பதம் சரணமப்பா!  (20)


09.06.2016 : .பவரோகம் தீர்க்கும் நாதா....



பவரோகம் தீர்க்கும் நாதா! எங்கள் பெம்மானே நீயும்,
சுவரோரம் சாய்ந்துகொண்டு, குத்துக்காலிட்டமர்ந்து, 
தவக்கோலம் சொல்லும் தண்டம் செங்கோலாய் மிளிர இங்கு
உவந்தாட்சி புரிய வந்தாய், நின் பதம் சரணம் ஐயா! (21)

16.06.2016 : .மலரதே மலரைத் தாங்கும் அதிசயம்





மலர்க்கொடி கொம்பைப் பற்றிப் படருமோர் காட்சி போன்று
மலர்க்கரம் தண்டம் தாங்க, மலரமர்ந்திருக்குதப்பா!
மலரினால் மகுடம் செய்தம்மலருக்குச் சூட்டினாரோ?
மலர்மாலை தொடுத்து அந்த மலருக்குச் சாற்றினாரோ?

மலரதே மலரைத் தாங்கும் அதிசயம் இங்கு கண்டேன்!
மலரதில் வண்டு போலும் விழிகளில் கருணை கண்டேன்!
அலர்கதிர் ஞாயிரென்ன பொலியுமுன் காந்தி கண்டேன்!
புலர்ந்திடும் பொழுது எல்லாம் நலமுடன் இருக்கக் கண்டேன்! (22)



23.06.2016 : கதிரவன் வந்திட்டானோ?

மதிகுளிர் முகமே காண, கதிதரும் பாதம் பற்ற,
கதிரவன் காலை இங்கே ஓடியே வந்திட்டானோ?
விதியையும் மாற்றும் உந்தன்,இதம்தரு கடைக்கண் பார்வை
அதிவிரைவாக என்மேல் காட்டிடாய், சரணமப்பா! (23)

30.06.2016 : .

இன்றைய குருவாரத்தில், வெறும் தரையில், ஒரு போர்வையைச் சுற்றிக் கொண்டு, 'கீக்கிடமான' ஓரிடத்திலே, கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஒரு மூலையில் படுத்து ஓய்வெடுக்கும் இந்த photo பெரியவாளின் சரணாரவிந்தங்களைப் பற்றி, பாடி, அவரது பதகமலங்களுக்கு, இந்தப் பாடல்களை அர்ப்பணிக்கிறேன்.


வெண்பஞ்சு மெத்தையிட்டு, மெந்துகில் போர்வை போர்த்தி,
தண்மலரொத்த பாதம் அடியவர் பிடிக்கப்,  பாடல்
பண்ணுடன் தேவர்கானம் இசைத்திடத் தூங்குமந்த
விண்ணவர் அரசே! நீயும், தரையிலே தூங்கினாயோ?

பார்தனைக் காக்கும் வேலை, பரிவுடன் செய்து சோர்ந்து, 
பாற்கடல் தொட்டில் மேலே,   நாகமாம் மெத்தை மேலே,  
நீர்மகள் சேவை செய்ய, நிலமகள் வாழ்த்தத் தூங்கும்
கார்முகில் வண்ணா ! நீயும், தரையிலே தூங்கினாயோ?

கயிலையாம் மலையில் மேகப் பஞ்சணை விரித்துப் பக்கம்
மயிலவள் இருக்க, சாம கானமே தேவர் பாட
உயிரதாம் பாலன் குஹனும், மார்பினில் தூங்க இன்பத் 
துயிலதே கொள்ளும் ஈசா! தரையிலே தூங்கினாயோ? (24)


7.7.2016 : சிரசிலே வில்வம் தாங்கி


சிரசிலே வில்வம் தாங்கி சிவமதாய் இருக்கும் உன்னை
கரமதை உயர்த்தி இந்த உலகெலாம் வாழ்கவென்று 
வரமதை அருளும் வேலை ஒன்றையே கொண்டோய் உன்னை
பரமென அறிந்தேன் உந்தன் சரணமே அடைந்தேன் ஐயா! (25)


14.07.2016 : பெரியவா சொல்லும் வார்த்தை




பெரியவா சொல்லும் வார்த்தை கேட்டிடும் நெஞ்சுக்குள்ளே
அரியன தோன்றும் அறிவால் அறிவொண்ணா அவையும் தோன்றும்
பரிவுடன் கருணை வெள்ளம் தெய்வமாக் குரலில் தோன்றும்
பரிபக்குவமும் தோன்றும் நின்பதம் தொழவே ஐயா! (26)

21.07.2016 : ஓய்வதும் அறியாத ஓர் மந்திரம்





தாய் எனத் தான் வந்து தரணியெல்லாம் நடந்து
சேய் எமை எந்நாளும் காத்தருள் புரிந்து நிற்கும்
ஓய்வெதும் அறியாத ஓர் மந்திரம் சற்றே
சாய்ந்துடல் களைப்பாறும் கோலம் கண்டுருகி நின்றேன்! (27)



28.7.2016   கணநாதன் உள்ளம் மகிழும் சங்கரன்


கணநாதனாம் கஜராஜன் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அதிவேகமாக விரைந்து, கையில் தண்டமேந்தி, கழுத்தில் பூ மாலை சூடி, பாத கமலங்களில் குறடுமின்றி நடந்து வரும் எங்கள் சங்கரனை, இந்த குருவாரத்தில் பணிகிறேன் (28)

கணநாதன் உள்ளம்மகிழ சங்கரன் தண்டம் ஏந்தி
மணம் வீசும் மலர்மாலை சூடிப்பங்கயப் பாதம்
மணல் தோய நமைக்காக்க  நடந்து வந்திடும் கோலம் 
கண நேரம் நினைப்போர்க்கும் அருள்கூட்டும், நலம் சேர்க்கும்!  (29)

04.08.2016  புன்னகை ஒன்று கண்டேன்!

இன்றைய குருவாரத்திலே, மலர்ந்த புன்னகையுடன் காட்சி தரும் இந்த photo  பெரியவாளின் பதம் பணிந்து, இப்பாடலை சமர்ப்பிக்கிறேன். 



இன்னமுதம் பொழியும் சந்திர முகமலர் விரிப்பில்
புன்னகை ஒன்று கண்டேன்! நெஞ்செலாம் நிறைந்து நின்றேன்!
உன்முகக் கோலம் நித்தம் என்னுளே காணும் அந்த
இன்வரம் ஒன்றே தருவாய்! வேறெதும் வேண்டாதருள்வாய்! (29)


11.08.2016 : சிவச் சந்த்ர சேகர குரு

இன்றைய குருவாரத்திலே, மலர்ந்த புன்னகையுடன் காட்சி தரும் இந்த photo  பெரியவாளையும், அவரது அருகிலே நின்று கொண்டிருக்கும் ஐயனே ரூபமான sivan sar ஐயும் பணிந்து, இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.




சிவச் சந்த்ர சேகர குரு எனவந்து தம்
தவப் பயனாயிங்கெம் குறைகளைக் களைந்தயர்
பவப் பிணி நீக்கிவன் துறுதுயர் போக்கிடும்
இவர் பதம் சரணமென்றன நிதம் போற்றினேன் (30)





18.08.2016 : சிவச் சந்த்ர சேகர குரு

இன்றைய குருவாரத்தில், இந்த photo விலிருந்து கொண்டு,  முகத் தாமரை மலர்ந்து ஸ்ரீசரணர் எங்கோ நோக்கிக் கொண்டிருக்க, என்றும் யாருக்கும் ஆசி நல்கி வாழவைக்கும் அந்தக்  கரமலர்கள் மட்டும் மலராமல் வாளாவிருந்து, அருள்பாலிக்கும் பெரியவாளை நமஸ்கரித்து, இந்தப் பாடலை அவரது பொற்கமலங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.  




அகமலர் அதிலே அன்னை அவள் கொலு வீற்றிருக்க
முகமலர் மீது கண்கள் வண்டென மொய்த்திருக்க
இகபரமனைத்தும் நல்கும் கரமலர் மட்டும் மொட்டாய்த்

திகழுவதேனோ ஐயா? விரித்தருள் செய்திடப்பா! (31)

25.08.2016 : அன்பே சிவமாய்

இன்றைய குருவாரத்தில், பின்புலத்தில், ஆதி சங்கரரும், "அன்பே சிவம்" என்னும் வாசகமும் தான் யாரென்று உலகிற்கு அறிவிக்க, கருணையே வடிவாய் அமர்ந்திருக்கும் இந்த photo பெரியவாளைப் பணிந்து இந்தப் பாமாலையை பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 




அன்பெனும் சிவமும் இங்கு, பெரியவா என்னும் பேரில்
மன்னுலகெல்லாம் வாழ, வந்தமர்ந்திருக்கும் கோலம்
தன்னிகரில்லாக் கருணை கொண்டந்தக் கஞ்சித் தாயாம்
அன்னை வந்தமர்ந்த கோலம் கண்டனம், உய்தோமய்யா! (32)



01.09.2016 : ஒரு பதம் ஊன்றி

இன்றைய குருவாரத்திலே, ஒரு பதம் ஊன்றி, ஒரு பதம் மடித்தமர்ந்து, நம்மை நேர்விழிப் பார்வை பார்த்து அருளும் இந்த photo பெரியவாளைப் பணிந்து, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.






ஒரு பதம் ஊன்றி மற்றோர் பதமெடுத்தாடும் இறைபோல்,
ஒரு பதம் ஊன்றி ஆங்கோர் ஒரு பதம் மடித்தமர்ந்தாய்!
அருட்பொழி வதனம் எந்தன் நெஞ்சிலே நிலைக்குமந்த
ஒருவரம் தாராய்,  உந்தன் திருவடி எனையும் சேராய்! (33)

8.9.16 நிழற்படம் நின்று இன்பப் புன்னகை செய்யும் தேவே!

இன்றைய குருவாரத்தில், இந்த நிழற்படத்தில் இருந்துகொண்டு, இன்பப் புன்னகை வீசி, நமையெல்லாம் மயக்கும் உம்மாச்சித் தாத்தாவின் அடிபணிந்து, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன். 




நிழற்படம் நின்று இன்பப் புன்னகை செய்யும் தேவே!
அழற்கைக் கொண்டு ஆடும் அமரர்கள் போற்றும் தேவே!
சுழலதாம் மாய வாழ்வில் சுற்றிடும் எனையும் உந்தன்
கழல்தந்து காவாயென்றும் மலர்ப்பாதம் சரணமப்பா! (34)


15.09.2016 : அரன்மனையாக உள்ளம்...


அரன்மனையாக உள்ளம் இருந்துவிட்டாலே இங்கு
அரண்மனை ஏதும் வேண்டாம் என்று காட்டிடவோ இங்கு
"தரமில்லை" என்று நாங்கள் சொல்லுமவ்விடத்திலெல்லாம்
பரமனே வந்து நீயும் கொலுவிருந்தீரோ ஐயா? (35)

22.09.2016  : தவம் செய்யும் தவமே!


தவம் என்னும் நல்லாள் செய்த மா தவப்பயனாய் வந்து 
தவம் செய்யும் தவமே! உம்மைப் பெற்றிடத் தவமென் செய்தோம்?
சிவபரம் பொருளே உந்தன் மலரடி பணிந்து நின்றோம்
பவபயம் போக்கி எம்மை அடிமை கொண்டருள்வீரய்யா! (36)


29.09.2016 : எமக்கொரு குறையுமுண்டோ? 






பவளவாய் புன்சிரிப்போடிறையருள் சிந்த மேனி
தவழ்ந்திடும் ருத்திராக்ஷம், கழுத்தினில் அரவு கொண்ட
சிவனையே நினைவுறுத்த, கமலப் பொற்பாதம் எங்கள்

கவலைகள் தீர்க்க, இங்கே எமக்கொரு குறையுமுண்டோ?  (37)

06.10.2016 : மேனாவினுள்ளிருந்தோர் அருளாட்சி 



வானாளும் தேவர்களும் முனிவர்களும் யோகிகளும்
ஆனானப்பட்டவரும் அடைக்கலமென்றோடிவரும்
வானாளில் கிட்டாத அற்புதனிங்கெழுந்தருள, 
மேனாவினுள்ளிருந்தோர் அருளாட்சி நடக்குதிங்கே! (38)

13.10.2016 :  ஒரு பூவாய் மாறிடேனோ



உந்தன் பொன்மேனி தாங்கும் பல்லாக்காயாகிடேனோ?
உந்தன் பூப்பல்லாக்கதிலே ஒரு பூவாய் மாறிடேனோ?
செந்தளிர் பாதம் தாங்கும்  பூச்சரமாயாகிடேனோ?
செந்தமிழ் உன்னைப் பாடும் ஒரு பாட்டாயாகிடேனோ?

முந்தையோர் தவமுமில்லேன்; உன்னையே நினைந்திருக்கும்
சிந்தையும் ஏதுமில்லேன்; முன்னோர்செய் தவத்தால் உன்னை
வந்தனை செய்ய வந்தேன்; கன்றினக்கருளும் ஆவாய்,
எந்தையே! அம்மையப்பா!  என்னை, நீ  ஆண்டருள்வாய்! (39)


20.10.2016 : மரணமும் அழியும் அம்மா! 








தகைசால் பெரியோன் எங்கள் பெரியவா சொல்லில் மிக்க
நகைச்சுவை இழையும்; கேட்கும் நெஞ்சத்தில் தேங்கும் வஞ்சப்
பகையெலாம் மறையும்; அன்பும் கருணையும் ஊறும்; மனமாம்
குகையிலே நிறையும் அந்தப் பெருமகன் பாத பத்மம்

சரணமாய்க் கொள்ள  ஏழேழ் பிறவியும் அகலும் நித்தம்
பரனவன் நாமம் சொல்லப் பெருவினை அழியும் எந்தைக்
கரமதன் ஆசி ஒன்றால் நமனவன் வாதை நீங்கும்!
அரனவன் பார்வை ஒன்றால் மரணமும் அழியும் அம்மா!  (40)


27.10.16 : புனித நீராட வந்தாய்


இன்றைய குருவாரத்தில், நீராடிக் கொண்டிருக்கும் இந்த photo பெரியவாளைப் பார்க்கும் போது, மனதில் ஒரு கேள்வி.
நாமெல்லம் நீராடுவது, நம்முடலில், மனதில் உள்ள மாசெலாம் நீங்குவதற்காக.
பெரியவாளுக்கு ஏது மாசும் மறுவும்? அவர் நீராடுவதால் அவருக்கு என்ன ஆகப் போகிறது?
பிறகு ஏன் அவர் நீராட வேண்டும்?
நாமெலாம் நீராடுவதால் மாசடைந்த அந்தப் புனித நீரின் மாசெலாம் போக்கவென்றோ அவர் நீராடுகிறார்?
அந்தக் கேள்வியை அவரிடமே கேட்டு, இந்தப் பாடலை பெரியவாளின் பதகமலங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.






















மாசெலாம் நீக்கும் புனித நீரெலாம் நீயும் ஆட
மாசெலாம் நீங்கிப் புனிதம் உற்றிடும் என்றோ எங்கள்
மாசெலாம் நீக்க வந்த எங்கள்மாத் தேவே! ஞான
தேசுடைத் தேவே,  நீயும் புனித நீராட வந்தாய்? (41)

3.11.2016 : ஈசனே இறங்கி வந்தான்
***********************************************************


இன்றைய குருவாரத்தில், ஈசனே ஈசனாம் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் இந்த photo பெரியவாளைப் பணிந்து இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.
******************************************************************
வேஷமே போட்டு நம்மை ஏமாற்ற நினைத்து எங்கள்
தேசுடை முனிவன் தோற்றம் எடுத்திங்கு கருணையோடு
ஈசனே இறங்கி வந்தான்! லிங்கமாம் பிம்பம் தன்மேல்
நேசமாய் புனித நீரும் ஊற்றி நீராடி நின்றான்! (42)



10.11.2016 : நெருப்புனைக் கண்டேன்


இன்றைய குருவாரத்தில், இந்த photoவில், ஞான நெருப்பாய் அமர்ந்துகொண்டு நமது உள்ளத்தின் தாபத்தைப் போக்கும் குளிர்தென்றலாம் இந்தப் பெரியவாளின் தாள் பணிந்து, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.


விருப்பதும் வெறுப்புமில்லா ப்ரம்மத்தின் உருவாம் ஞான
நெருப்புனைக் கண்டேன் - உள்ளம் குளிர்ந்திடக் கண்டேன்; உன்னை
குருவென இல்லை - அன்புத் தாயெனக் கொண்டேன்; உந்தன்
திருப்பதம் தருவாயப்பா! உன்பதம் சரணடைந்தேன்! (43)



17.11.2016 : குருபதம்
********************************
இன்றைய குருவாரத்தில், ஒருகால் மேல் ஒரு கால் மடித்தமர்ந்து அருள்பொழியும் இந்த photo பெரியவாளைப் பணிந்து, அந்த அருட்பதங்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்.



குருபதம் கலியதைப் பொடிப்பொடியாக்கிடும்
குருபதம் வலிமிகு வினையதைப் போக்கிடும்
குருபதம் நலிவறு மேன்மையை ஆக்கிடும்
குருபதம் பொலிவுறும் உள்ளமே அருள்வையே (44)



24.11.2016 : தாயேயிச் சேயழுதும் வாளாவிங்கிருப்பாயோ?





மாயாத வல்வினையாம் கயிர்தன்னைக் கரம்கொண்டு
ஓயாத அழுகையுடை ஓரங்க நாடகத்தை
நீயாடிப் பார்க்கவென எனையாட்டி வைத்தாயோ?

தாயேயிச் சேயழுதும் வாளாவிங்கிருப்பாயோ? (45)



01/12/2016  : வண்டியின் பின்னே நடக்கும் தெய்வம்



பண்டைய தென்றும் மூடத்தனமென்றும் தள்ளிவைத்த
பண்பாட்டை, வழியை, வேத வளத்தை,  சன் மார்க்க நெறியை
கண்ணென்றுப் போற்றிக் காத்து, நமக்கென்று அளித்த தெய்வம்
வண்டியின் பின்னே இங்கே  மெதுவாக நடப்பதென்னே! (46)

8.12.2016  நரனென வந்த தேவே




சிரசிலே க்ரீடம் போலே எலுமிச்சை மாலை சூடி
வரமதே தருமாமந்தக் கரமதில் ஜபமும் தாங்கி
நரனென வந்த தேவே! அரனென அறிந்தேனுன்னை!
பரமனே காப்பாயப்பா! உன்னடி பணிந்து நின்றேன்!

15.12.2016 : ஞானப் பெருமானே! நீ இங்கு வாராயோ?




மோனத் தவம் தன்னில் மூழ்கியிருக்கும் மெய்
ஞானப் பெருமானே! நீ இங்கு வாராயோ?
வானம் பிளந்தாற்போல் உந்தன்பொற் பாதத்தில்
நானும் அழுதிருக்க, என்னை நீ பாராயோ? (48)

22.12.2016 : நாயகமாய் வீற்றிருக்கும் நாயகனே!




நாயகமாய் வீற்றிருக்கும் நாயகனே! நான்மறையின்
தாயகமே! துறவு எனும் அறத்தின் ஓர் ஒளிவிளக்கே!
மாயவலை சிக்கி மனம் மாசடைந்து அழுதுழலும்
சேயிவனைக் காவாயோ? பாதமலர் தாராயோ? (49)

29.12.2016 : அரைக்கிசையும் புலித்தோலில் அமர்ந்தருளும் சிவரூபா!


அரைக்கிசையும் புலித்தோலில் அமர்ந்தருளும் சிவரூபா!
நரையதனைப் பிறைமதியாய் சூடியருள் உமைநேசா!
கறைக்கண்டம் நீறதனால் மறைத்தாயோ? நான்மறைசொல்
இறைநீயே! கரை சேர்ப்பாய், எங்களையே, குருநாதா! (50)

05.01.2017 : உறவென வருவாயோ நீ?



தாய் மடியில் தலைவைத்து உறங்க வேண்டுமென நினைக்காத குழந்தைகள் ஏதும் உண்டோ?

தாயும் தந்தையுமாயிருக்கும் இந்தத் தயாபரன், துறவரசனாகவுமல்லாவா இருக்கிறான்?

பெரும் துறவிகளும்கூடத் தீண்டிவிட முடியாத நெருப்புப் பிழம்பாகவல்லவோ இருக்கிறான்?

அப்படி இருந்தால், "என் தாய்" என்று சொல்லிக்கொண்டு, தீண்டுவது எப்படி சாத்தியம்? மடிமீது தலைவைத்து உறங்குவது எப்படி சாத்தியம்?

என் ஐயா, நீ இந்தத் துறவுக்கோலத்தைத் துறந்துவிட்டு, என் உறாவாய் இங்கே வாயேன்!!


பெரியவா சரணம்.






இறையென இன்றி எந்தன் குருவென இன்றி இங்குன்
துறவினைத் துறந்து எந்தன் அன்னையாய் வருவாயோ நீ?
உறவென உந்தன் மடியில் நானுமே தலையை வைத்து

உறங்கவே வருவாயோ நீ? இரங்கியே வருவாயோ நீ? (51)

12.01.2017 கருணையாம் ஊற்றினோர் துளிதரும் சுவையேசுவை!

ஒவ்வொரு குருவாரத்திலும், பெரியவாளின் ஒரு photoவை எடுத்துக் கொண்டு, அந்த photo பெரியவாளைப் பார்த்து மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை, "கவிதை" என்று பேர் பண்ணி எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைய தினம், 52ஆவது வாரம். ஒரு வருடம் - பெரியவாளின் அனுக்ரஹத்தில், வாரத்திற்கு ஒரு முறையாவது, அவரை சில நிமிடங்களாவது நினைத்து வர முடிந்திருக்கிறது. 

இந்த அனுக்ரஹம் இன்னமும் தொடர வேண்டும் என்று ப்ரார்த்திதுக் கொள்கிறேன். 

இன்றைய தினத்திலோ, சற்றே வேறு விதமாகத்தான் அமைந்து விட்டது. காலையிலேயே, பாடல் வரிகள் தோன்றிவிட்டன. பெரியவாளின் photoவைப் பார்த்துவிட்டு, மனதில் தோன்றும் வரிகளை எழுதுவது என்பது மாறி, முதலில் பாடல் வரிகள் தோன்றிவிட்டன. 

அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல், எந்த photo பெரியவாளை select செய்வது? 

பாடல் வரிகளோ, பெரியவாளின் கருணை பற்றியதாக அமைந்து விட்டது. எந்த photo என்று, அடியேன் select செய்வது? எந்த photo விலாவது "இதில்தான் பெரியவா கருணையே உருவாக இருக்கிறார்" என்று சொல்ல முடிந்தால், அந்த photo வை, தேர்ந்து எடுக்கலாம். எதைச் சொல்வது? 

இல்லை, "இந்த photo விலெல்லாம், கருணை சற்றே குறைவாக இருக்கிறது" என்று சொல்ல முடிந்தால், அந்த photos எல்லாவற்றையும், விட்டு விடலாம். எதை விடுவது? 

எதில்தான் அந்தக் கருணாமூர்த்தி, "கருணை சற்றே குறைவாக" காட்சி தருகிறார்? 

திணறல்தான். பிறகு, select ஆன இந்த photo, இந்தப் பாடலுக்குப் பொருத்தம்தானாவென்று, பெரியவாள் தான் சொல்ல வேண்டும். 

பெரியவா சரணம். 


நறுந்தேன் சுவையிலை; அமரர்கள் விரும்பியே
அருந்திடும் அரியதோர் அமுததும் சுவையிலை
குருமா முனியவன் திருமுகம் மலர்ந்தருள்
கருணையாம் ஊற்றினோர் துளிதரும் சுவையேசுவை! (52)

19.01.2017 பார்வை ஒன்றிலே பாவம் தீருமே!



பார்புகழ் பரன் பாதம் தூளியெத்
தீர்வெதும் இலா துன்பம் யாவையும்
தீர்த்து வைக்குமே! எந்தை பார்த்திடும்
பார்வை ஒன்றிலே பாவம் தீருமே! (53)

26.01.2017   அன்றொருநாள் ஆலடியில் அமர்ந்த இறை




அன்றொருநாள் ஆலடியில் அமர்ந்த இறை எமக்காக
அன்புருவாய் நடைநடந்து, இங்குவந்து இதமாக 
இன்றொருநாள் இம்மரத்து அடியமர்ந்து அருள் செய்ய
என்றொருநாள் ஏதுதவம் யாம் செய்ததறியனமே! (54)

2.2.2017 : கரம் சுட்டி நிற்கும் கோலம்



பரம்பொருள் இங்கு வந்து, பரனவன் ஒன்று என்று
கரம்சுட்டிச் சொல்லி நிற்கும் கோலமிக் கோலம்தானோ?
அரனிவன் இடது காலைத் தூக்கியே அபினயித்து
அரனவன் தில்லையாடும் காட்சிதான் அருளிட்டானோ? (55)

09.02.2017  தாயாகத் தானெழுந்து அருளிடவே வந்தானோ?



மாயப் பிறப்பறுக்கும் மன்னனிவன் தரணியிலே
தாயாகத் தானெழுந்து அருளிடவே வந்தானோ?
ஆயர் குலக்கொழுந்தாய் வந்தவனும் நீறணிந்து
சேயரெமைக் காக்கநீடு துயில் நீத்து வந்தானோ? (56)



16.02.2017  அபிஷேகப் பிரியன்



அபிஷேகப் பிரியன்   அந்த அரனவன் வடிவாய் வந்தோன்
அபிஷேகம் காணும் காட்சி  அருள்நிறை காட்சியம்மா!
அபஜயம் எல்லாம் போக்கி, நல்வினை நெஞ்சில் தேக்கி
சுபமதே அருளும் அம்மா; அவனருள் துணை உண்டம்மா! (57)


23.02.2017 : பாவங்கள் போக்கும்  தேவே!




கூரிய பார்வையாலே பாவங்கள் போக்கும்  தேவே!
பாரிலே உயிர்கள் யாவும் நல்வண்ணம் வாழவென்றுக்
கோரிடும் வரமாயொன்று, உன்னையே கேட்டேன்; வேறு
சேரிடம் ஏதுமில்லேன்; பதமலர் அருள்வாய் ஐயா! (58)

02.03.2017 :  சொற்பதம் கடந்த ஞான அற்புத உருவே!






சொற்பதம் கடந்த ஞான அற்புத உருவே! தில்லை
சிற்சபை அதனில் ஆடும் ஆனந்த வடிவே! எங்கள்
நற்றவம் பலிக்க வந்த வித்தக முனியே! உந்தன்
பொற்பதம் வணங்கி நின்றோம்; ஆதரித்தருள்வாய் ஐயா! (59)


9.03.2017 : குருவாரம்
*****************************
இந்த குருவாரம் மிக இனிதான ஒன்றாக அமைந்தது.

கார்த்தி அண்ணாவுடன் சேர்ந்து, பெரியவா ஸ்மரணை.

பின்னர், இருவருமாகச் சேர்ந்து கணேசன் அண்ணா அவர்கள் அகத்திற்குச் சென்று, அங்கே, பெரியவா க்ருஹத்திலே, பெரியவா தரிசனம். பெரியவா பற்றி ஓசூர் கணேசண் அண்ணா சொல்ல, பெரியவா ஸ்மரணையில் மாலைப் பொழுது சென்றது. பிறகு, அவர்கள் இல்லத்திலேயே உணவும் உண்டுவிட்டுக் கிளம்பினோம்.








உனையன்றி வேறேதும் நினைவின்றி எனையாள்வாய்
வினையாவும் களைந்துந்தன் மனையாமென் மனமாள்வாய்
பனையாக வரும் துன்பம் தினையாக்கும் அருள்மழையில்
நனைத்தென்னை உன்பாதம் அதில் சேர்த்து உயிராள்வாய் (60)


16.03.2017 : நிழலிலே ஞான சூரியன் இளைப்பாறும் வண்ணம் கண்டேன்
**********************************


இன்றைய குருவாரத்திலே இந்த photo பெரியவாளைப் பற்றிப் பாடத் தோன்றியது.

வெயிலும் நிழலுமான ஓரிடத்தில் சற்றே இளப்பாறும் பெரியவா.

ஒரு ஞானப் பழம், தன் மேல் வில்வ மாலையைச் சூட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றம்...

அருள் அத்தனையும் ஒன்று திரண்டு, அழகாக ஓருருக்கொண்டு வந்து அமர்ந்திருப்பது போல் ஒரு வடிவம்...


பெரியவா சரணம்...



நிழலிலே ஞான சூரியன் இளைப்பாறும் வண்ணம் கண்டேன்
பழமொன்று வில்வ மாலை சூடிடும் அழகைக்  கண்டேன்
அழகாக அருளும் வந்துன் வடிவிலே அமரக் கண்டேன்
பழகிடும் அடியார் துன்பம் விலகியே ஓடக் கண்டேன்! (61)

23.03.2017 : அமுத வெள்ளக் கோலமே 

இன்றைய குருவாரத்திலே,  இந்த photoவிலிருந்து அருள்பாலிக்கும் உம்மாச்சித் தாத்தாவின் பதம் பணிந்து, இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்.




அருள் என்பதொன்றும், தூய அன்பென்பதொன்றும், மாறா
   சத்தியம் என்பதொன்றும், கருணையாம் கடலும், மனதின்
இருளதை நீக்கும் ஞான ஒளியதும் ஒன்றாய்ச் சேர்ந்து,
   பரிவுடன் வந்த கோலம், குவலயம் இனிது வாழ,
குருவென வந்த கோலம், அம்மையாம் உமையாள் பங்கன்
   அத்தனாய் வந்த கோலம், அறுமுகன் வடிவாமவனும்
திருமகள் மகனாய் வந்து தோன்றிய அமுத வெள்ளக்
   கோலமே கண்டோமய்யா! உன்பதம் சரணடைந்தோம்! (62)

31.03.2017  ஒருகதி தந்தருள்வாய்

நேற்று, குருவாரம். இந்த photoவிலிருந்து கொண்டு அருள்பாலிக்கும் சங்கரன் தாள் பணிந்து, இந்தப் பாமாலையைச் சூட்டுகிறேன்.

கருணையாம் ஆழி பொங்கும் முகமலர் தன்னில் அமுதம்
பருகவா என்றழைக்கும் இருவிழி நோக்கில் நானும்
உருகியே போனேனய்யா! திருமலர்த் தாளே பற்றும்
ஒருகதி தந்தருள்வாய் கதி வேறும் அறியேனய்யா! (63)


06.04.2017  : மனித்தயிப் பிறவி நோய்க்கு மருந்ததாம்

இன்றைய குருவாரம். இந்த photoவிலிருந்து கொண்டு அருள்பாலிக்கும் சங்கரன் தாள் பணிந்து, இந்தப் பாமாலையைச் சூட்டுகிறேன்.




இனிக்குமோர் பழமாம் வயதில் முதிர்ந்தவோர் பழமாம் கருணை
கனிந்தவோர் பழமாம் ஞானத் தேனூறும் பழமாமென்றும்
மனித்தயிப் பிறவி நோய்க்கு மருந்ததாம் பழமாமிங்கே
தனக்கொரு உவமையில்லாப் பழமிங்கே கண்டோமம்மா! (64)

13.4.2017  உலகத்தை எல்லாம் நித்தம் இயக்குமென் அரசே!




மயக்குமிப் புன்னகை ஒன்றால் உலகத்தை எல்லாம் நித்தம்
இயக்குமென் அரசே! இங்குன் அடியவன்  எனக்கு வந்த
அயனவன் எழுத்தை மாற்றி பயமதை நீக்கி என்றும்
ஜயமொன்றே தருவாயப்பா! உன்பதம் பணிந்து நின்றேன்! (65)

20.4.2017 : ஏந்தினேன் உந்தன் பாதம், திருவருள் தருவாய் ஐயா!




சாந்தமே வடிவாய் வந்தாய்! அருட்கடல் ஆகி நின்றாய்!
காந்தமாம் கண்ணால் எந்தன் மனமெனும் இரும்பும் கொண்டாய்!
தீந்தமிழ்ச் சொல்லால் உன்னைப் பாடிடும் வரமும் தந்தாய்!
ஏந்தினேன் உந்தன் பாதம், திருவருள் தருவாய் ஐயா! (66)

27.04.2017  பாடும்வரம் தந்து, பதமலரும் தந்தருள்வாய்!



வாடுமென் உளந்தனில் கருணைமழை பெய்தெனைக் காத்தருளவேண்டி வரும்
பீடுடைய நடையன் துவராடை பூண்டுவோர் செங்கோலதுவேந்திய தென்
நாடுடைய பெம்மான் உனையென்றும் அடியேன் நினைந்துருகி நித்தம்

பாடும்வரம் தந்து, பதமலரும் தந்தருள்வாய்! எந்தாய்! பராபரனே! (67)

04.05.2017  : உளமெலாம் திருடிநின்ற மாயனும் நீயோ?




துளபமே அணிந்திருக்கும் பெரியவா! வெண்ணெயோடு
உளமெலாம் திருடிநின்ற மாயனும் நீயோ? உள்ளம்
இளகியே உலகம் வாழ நஞ்சுண்ட சிவனோ?  அடியார்
வளமுடன் வாழ உந்தன் பதமென்றும் பணிந்தோமப்பா! (68)


11.05.2017 : அன்னையும் நீயே எந்தன் தந்தையும் நீயே



அன்னையும் நீயே எந்தன் தந்தையும் நீயே வாழ்வில்
சொந்தமும் நீயே எந்தன் பந்தமும் நீயே காணும்
இன்பமும் நீயே ஏகும் துன்பங்களெல்லாம் போக்கும்
சிந்தையையைக் கொள்ளை கொண்ட கள்வனும் நீயே அப்பா! (69)

19.05.2017 : நேற்றைய குருவாரம் :

முன்வினையோடு வருமப் பிறவியும் மறையக்கண்டேன்


நேற்று, குருவாரம். பெரியவாளின் photo வெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்த photo பெரியவாளையும் பார்த்தேன். அது என்ன புன்னகை? என்ன ஒரு கம்பீரமான posture! என்ன அழகு!

அப்படியே பார்த்துக்கொண்டிருந்தால் போதுமே....வேறு என்ன வேண்டும் நமக்கு?





இன்முகம் கண்டேன் அதிலே விரிந்தொளி பரப்பி நிற்கும்
புன்னகை கண்டேன் மற்ற பொருளெலாம் மறைய, நான்செய்
முன்வினையோடு வருமப் பிறவியும் மறையக்கண்டேன்
என்னையும் இழந்தேன் வந்து ஏற்றருள்புரிவீரய்யா!! (70)


25.05.2017 : இறையது இறையை வேண்டி இறைஞ்சிடும் கோலம் கண்டேன்

இன்றைய குருவாரத்திலே இந்த photo பெரியவாளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். இறைவனே இறைவனை வேண்டும் அதிசயமல்லவா இங்கே நடக்கிறது!!


அந்தப் பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம் சொல்லி இப்பாடலை அவரது பாதகமலங்களில் அர்ப்பணிக்கிறேன். 




இறையது இறையை நோக்கி இறைஞ்சிடும் கோலம் கண்டேன்
மறையதும் தேடும் பாதம் மறைந்து இங்கிருத்தல் கண்டேன்
பிறையதே சூடும் அந்தக் கறைக் கண்டப் பெம்மான் இங்கே
தரை மீதிருக்கக் கண்டேன்; உயிர் உள்ளே உருகக் கண்டேன் (71)

01.06.2017  குழலூதும் கண்ணன் போலக் கைவைத்து நிற்கும் தேவே!



நேற்றைய குருவாரத்தில், இந்த photo பெரியவாளைப் பார்த்தபோது, கண்ணன் குழலூதும்போது கைவைத்துக் கொண்டு நிற்கும் pose போலத் தோன்றியது.

அதனால் விளைந்த பாடலை, அவரது திருவடிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

குழலூதும் கண்ணன் போலக் கைவைத்து நிற்கும் தேவே!
தழல் ஒக்கும் இந்த வாழ்வில் பொசுங்கியே அழிந்திடாமல்
அழகான உந்தன் பாதபத்மமே பற்றி நானும்
நிழல்போல உந்தன் வழியே செல்லவே அருள்வாயப்பா! (72)



8.7.17 : அனுக்ரஹம் செய்யவென்றே அவதாரமெடுத்து வந்த
அனுஷத்து தேவே!




அனுக்ரஹம் செய்யவென்றே அவதாரமெடுத்து வந்த
அனுஷத்து தேவே! உந்தன் முகமலர் கண்டேன்; வேறு
நினைவெதும் இன்றி எந்தன் மனமெனும் மேடைநின்று,
எனையாண்டு கொள்வாயப்பா! உன்பதம் சரணமப்பா! (73)


15.06.2017 : குருவாரம்
**********************************

இன்றைய குருவாரத்தில், இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, இந்த எண்ணம்தான் தோன்றியது….

கோவிலுக்கு எதற்காக ஒருவர் போக வேண்டும்? தெய்வத்தை தரிசிக்கத்தானே? அந்த தெய்வமே வீதியில் நடந்து நம்மைக் காண, நம்மைப் பாவனம் செய்ய ஓடி வந்தால்? அதைவிட பாக்கியம், ஒரு பக்தனுக்கு வேறென்ன வேண்டும்?






பெரியவா சரணம்.


கோவிலில் தெய்வம் தன்னைக் கும்பிட வந்தோர்தம்மை
ஆவலாய் சென்று பார்க்கும் தெய்வம்தான் நீயோ ஐயா?
சேவடி தேடி வந்த பக்தரைத் தேடிச் சென்று
பாவனம் செய்து நிற்கும் தேவன்தான் நீயோ ஐயா? (74)

75. இன்னருள் சுரந்திருக்கும் காட்சியே கண்டேனம்மா

இன்றைய குருவாரத்தில், ருத்திராக்ஷ மாலைகள் அணிந்து அந்த சிவஸ்வரூபனாகவே கொலுவீற்றிருக்கும் இந்த photo பெரியவாளை நமஸ்கரித்து, இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்.






பொன்னார் மேனியனிங்கு ருத்திராக்ஷ மாலையணிந்து
இன்னல்கள் போக்கும் தண்டம் கையினில் ஏந்தி வந்து
நன்னலம் செய்யவென்று அடியவர் சூழ இங்கு
இன்னருள் சுரந்திருக்கும் காட்சியே கண்டேனம்மா! (75)

76. 29.6.17 குருவாரம் : 
குரு நீ; விரிஞானம் விளையுமொரு திரு நீ


குரு நீ; விரிஞானம்  விளையுமொரு 
திரு நீ; வாழ்வினோர் வெம்மை போக்கும்
தரு நீ; ஞானியர் தம்முள் காணும்
உரு நீ; மாபொருள் நீ; வந்தருள் நீ ஐயா!  (76)

06.07.2017 : ஒருவரை ஒருவர் நோக்கிப் உருகிடும் அழகும் கண்டேன்!





“ஓய்வென்று” ஒன்றும் அறியா பதமலர் கொண்டு ஒடி
தாய்முகம் பார்க்கவென்று கனிந்த சேய் வருகை கண்டு
தாயவள் பார்க்கத் தானும், விரைந்திங்கு வந்திட்டாளோ?
சேயுனைப் பார்க்கவென்று பரியிலே வந்திட்டாளோ? (77-1)


இருவரில், தாய் யார்? சேய் யார்? இருவரும் ஒருவர்தாமே!
ஒருவரே இருவராக மாறி வந்திருக்கக் கண்டேன்!
திருமுகம் காணவென்று ஏங்கியே வந்து இங்கு
ஒருவரை ஒருவர் நோக்கி உருகிடும் அழகும் கண்டேன்! (77-2)


13.07.2017 குருவாரம் :

தாமரை மலர் குளத்தில் தான் இருக்கும். அந்த மலர், கரையிலே நிற்பதை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?  ஆதவன் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் அந்தத் தாமரை மலர், அந்த ஆதவனையே தாங்கி வருவதை யாரேனும் கண்டிருக்கிறீர்களா? இதோ, இங்கே வந்து பாருங்கள்!! உலகெலாம் போற்றும் அந்தப் பாதத் தாமரைமலர்கள் குளக் கரையிலே நிற்கும் காட்சியைக் காணுங்கள்! அந்த ஆதவனாம் பெரியவாளைத் தாங்கிக்கொண்டு, அந்த பாதாரவிந்தம் பொலிவதைப் பாருங்கள்!

பெரியவா சரணம்!!



தாமரை குளத்தில் தோன்றும் அழகை நான் கண்டதுண்டு - அம்
மாமலர் கரையில் நிற்கும் காட்சியை இங்கு கண்டேன்!
மாமறை தேடிக் காணா மூவுலகேத்தும் பாதத்
தாமரை குளக்கரையில் பொலிவுடன் நிற்கக் கண்டேன்! (78-1)

ஆதவன் வருகை கண்டு தாமரை மலரும்; ஆனால்
ஆதவன் தன்னைத் தாங்கித் தாமரை நிற்பதுண்டோ?
மாதவன் உன்னைத் தாங்கி தேவரும் போற்றி நிற்கும்
பாதத்தாமரைகள் கண்டேன்! பதமலர் சரணமப்பா! (78-2)


20.07.2017 : குருவாரம்:

இன்றைய குருவாரத்தில், ஞான மலராய்ச் சுடர்விட்டு இங்கு அமர்ந்திருக்கும் அந்த பிறைசூடிப் பெருமானை வண்ங்குகிறேன்.



உலகெலாம் பணிந்து பாதம் வணங்கியே போற்றும் ஞான
மலரொன்று இங்கு மாலை சூடியே இருக்கக் கண்டேன்
மலமெலாம் அறுத்து என்னை ஆட்கொண்டு ஆளும் அந்த

நிலவினைச் சூடும் பெம்மான் அழகுடன் அமரக் கண்டேன் (79)

27.07.2017  குருவாரம் : 

அன்பர்கள் மத்தியில் அமர்ந்திடக் கண்டேனே




என்பும் நமக்கீயும் அன்பால், கருணையுடன்
தென்னாடுடையானச் சிவனும் நரவடிவில்
இன்முகம் காட்டி அன்பே வடிவாக
அன்பர்கள் மத்தியில் அமர்ந்திடக் கண்டேனே!(80)


3.8.17 : நேற்றைய குருவாரம்:


நேற்று, குருவாரத்திலே இந்த photo பெரியவா மேல் மனது லயித்தது. பெரும் பெரும் அறிக்னர்களும், அரசியல்வாதிகளும் குழுமி வாழ்த்துப் பத்திரங்களையும், வரவேற்புரைகளையும் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பெரியவா எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? எதையும் லக்ஷியம் செய்யாமல் தான்பாட்டுக்கு எதிலோ லயித்து இருக்கிறாரோ என்று தோன்றியது. ஆத்ம ஞானிக்கு எதிலும் குறிப்பாக லக்ஷியம் ஏதும் இருக்குமா என்ன?

பெரியவா சரணம்.





யார் வணங்கி நின்றாலென்ன? யார் வாழ்த்து சொன்னாலென்ன?
பார் போற்றும் கரும யோகிக்கு ஆவது ஒன்றும் இல்லை!
போர்க்களம் அதுவும் ஒன்று; பூக்களம் அதுவும் ஒன்று!
தீர்க்கமாம் ஞானிப் பார்வைக்ககிலமே ஒன்றுதானே! (81)

10.8.2017 : குருவாரம்: மெள்ளப் பருகிவிட்டேன்! உள்ளம் நிறைத்துவிட்டேன்!

இன்றைய குருவாரத்தில், என்னுடைய “favorite”  photo பெரியவாளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன அழகு! குழந்தையாய் ஒரு சிரிப்பு! செங்கோல் ஏந்தும் மன்னன் போல் ஒரு கம்பீரம்! காணக்காணத் திகட்டாத ஒரு “pose”… 
இந்தப் பெரியவாளைப் பார்த்ததில், மனமெலாம் நிறைந்து போக, வேறென்ன வேண்டும்?
பெரியவா சரணம்.


கொள்ளைச் சிரிப்பழகை, குறுந்தாடி முகத்தழகை
வெள்ளை அகத்தழகை, செங்காவி உடையழகை
அள்ளக் குறையாத அருள்தருமப் பதத்தழகை
மெள்ளப் பருகிவிட்டேன்! உள்ளம் நிறைத்துவிட்டேன்! (82)

17.08.2017 : குருவாரம் : அருள்தரும் காட்சி கண்டேன்! அதிசயம் கண்டேனப்பா!
இன்றைய குருவாரத்தில் இந்த photo பெரியவாளைப் பார்த்து லயித்திருந்தேன். எத்தனைக் குழந்தைகள் ஐயனைச் சுற்றி. குழந்தைகளோடு குழந்தையாய் இந்த முதிர்ந்த, தாடி வைத்த குழந்தை! திருப்பாவை, திருவெம்பாவை சொல்லச் சொல்லி மாநாடுகள் நடத்தினது மட்டுமல்லாமல், வருங்கால சந்ததி சிறக்க, குழந்தைகள் மனதில் இத்திருப்பதிகங்கள் ஏற வேண்டுமென்ற அனுக்ரஹத்தில், குழந்தைகளைச் சொல்லச் சொல்லி அருள் புரிந்தமரும் பெரியவாளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
உன்னருள் பெற்று, உன் முன்னர் நின்று பாவை பாடி, உன்னைச் சுற்றி நின்றுகொண்டிருக்கும் இந்தச் சின்னஞ்சிறார்களில் ஒருவனாய் நானும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அப்பனே, உனக்கேஇந்தப் பாடல் அர்ப்பணம். பெரியவா சரணம்.



திருப்பாவை, திருவெம்பாவை துதித்தடி பணியும் தூய
பெருமகன், மறையும் தேடும் நாயகன் சிறார்களோடு
ஒருவனாய் அமர்ந்து மண்ணில் தமிழ்வேதம் செழித்து வாழ
அருள்தரும் காட்சி கண்டேன்! அதிசயம் கண்டேனப்பா! (83)


24.08.2017 : குருவாரம் : பிறைசூடி வடிவே நின், பதம் போற்றி! நிதம் போற்றி

இன்று குருவாரம். ஒவ்வொரு குருவாரத்திலும், பெரியவாளின் ஒரு photoவை எடுத்து வைத்துக்கொண்டு, அந்த photo பெரியவாளிலே மனம் லயித்து, மனதில் தோன்றுவதை எழுதுவது பெரியவாளின் அனுக்ரஹத்தாலே நடந்து வருகிறது. அவர் அருளில், இன்றும் நடந்திருக்கிறது.

இந்த photo, ஒரு printing press ல் எடுத்தது. அங்கே பணி புரிபவர்கள், அந்த அச்சகம் எப்படி இயங்குகிறது என்று எடுத்துச்சொல்ல, அந்த விஞ்க்னானத்தையெல்லாம், இந்த மெய்ஞானம் செவிமடுக்கும் காட்சியே இந்த photo வில் காண்கிறோம்.


பெரியவா, ஸ்வாமி, பூஜை என்று மட்டும் இருந்துவிடவில்லை. விஞ்ஞானத்திலும், தொழிற்துறையிலும் கூட ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அனைத்திலும் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு ஈடுபாடு காட்டியவர். Photography யிலிருந்து, rocket technology வரை, அனைத்தையும் அறிந்து கொண்டு, அவை யாவற்றிற்கும் மேலான ஈஸ்வர தத்வத்தையும் நமக்கும் புரியும்படி எளிதாக உபதேசித்தவர்.

பெரியவா சரணம்.



இறைவழியில் நாம் செல்ல வழிகாட்டும் மெய்ஞானம்!
குறையின்றி நாம்வாழ வழிசொல்லும் விஞ்ஞானம்!
நிறைவாக இருஞானம் ஒருசேர வந்தாய் நீ!
பிறைசூடி வடிவே நின், பதம் போற்றி! நிதம் போற்றி! (84)



31.08.2017 : குருவாரம்: கடைத்தேறும் வழியைக் கண்டேன்!

பெரியவாளின் ஒவ்வொரு photoவும் ஒவ்வொரு கருணைப் பார்வை பார்த்து, நமக்கு அருள் வழங்குகிறது. "பெரியவாளோட photo"என்று சொல்வது கூட தப்புதான். ப்ரதோஷம் மாமா போன்ற பெரியவர்கள் சொல்வதுபோல் சொல்வதானால், "படப் பெரியவா, photo பெரியவா" என்றுதான் சொல்ல வேண்டும். அது வெறும் படமோ photoவோ இல்லை. பெரியவா குடிகொண்டிருக்கும் இன்னொரு மூர்த்தம்.

இன்றைய குருவாரத்தில், இந்த 'photo பெரியவாளை' நமஸ்காரம் செய்து ஒரு பாமாலை சார்த்த வேண்டும் என்று தோன்றியது. பெரியவா தாள் பணிந்து, அவர் மேல் பாட விழைகிறேன்.



ஜடையிலே தங்கும் கங்கை உனையிங்கு தாங்கி நிற்க,
படையாமச் சூலம் போலே தண்டம் நீ தாங்கி நிற்க,
“தடையேதும் இல்லை வா” என்றிதழ் நகை சொல்லி நிற்க
கடைத்தேறும் வழியைக் கண்டேன்! உன்பதம் சரண் அடைந்தேன்! (85)


07.09.2017 : குருவாரம்; சோகமே அழிக்கும் மங்கை பாகனே சரணம்

மெல்லிய சரீரம். சராசரியான உயரம். இவை இரண்டிற்கும் பொருந்தாத அதிவேக நடை. தேடித் தேடிப் போய், மக்களின் குறைகளைத் தீர்க்கும் அந்தத் தாயின் கருணை.

இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, இவையெல்லாம்தான் நினைவுக்கு வருகின்றது.

பெரியவா சரணம்.



தேகமோ மெலிந்திருக்கும்; பத்மபாதங்கள் செல்லும்
வேகமோ விரைந்திருக்கும்; மக்களின் குறையைத் தீர்க்கும்
தாகமோ மிகுந்திருக்கும்; கருணையில் நனைத்து எங்கள்
சோகமே அழிக்கும் மங்கை பாகனே சரணம் ஐயா! (86)


14.09.2017 : குருவாரம் :சங்கீத சாகரத்தில் திளைத்திடும் தேவே

இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, கண்மூடி சங்கீத்த்தில் அமிழ்ந்திருக்கும் சிவபெருமானையே பார்ப்பதாகத்தான் தோன்றுகிறது.

என்னையும் கூட இந்த சங்கீதமென்னும் அமுதத்திலே சற்றே நனையேன் என்று கேட்கத் தோன்றுகிறது.

கண்கள் மூடி சங்கீதத்திலே திளைத்திருக்கும் தேவனே! உன் முன்னால் நின்று உன்னையேஎ பார்த்துக் கொண்டிருக்கும் என்னையும் சற்றே உன் கண்கள் திறந்து சற்றே பாரேன் என்று கேட்கத் தோன்றுகிறது…..

பெரியவா சரணம்.



சங்கீத சாகரத்தில் திளைத்திடும் தேவே! அந்தப்
பொங்கிடும் அமுத ஊற்றில் என்னையும் நனைத்திடப்பா!
செங்கமலக் கண்ணால் எனையும் சற்றிங்கே நோக்கிடப்பா!

எங்கிலும் எதிலும் உன்னைக் காணவே செய்திடப்பா! (87)


28.9.17 : குருவாரம்:  உளமதைத் தொலைத்தேன், என்றும் உன்பதம் சரணம் ஐயா

ஒவ்வொரு குருவாரத்திலாவது, பெரியவாளை ஒரு கணம் நினைத்து, ஒரு photo பெரியவாளைப் பார்த்து, மனதில் என்ன தோன்றுகிறதோ, அதனை “பாடல்” என்ற பெயரில் எழுதுவது, அவர் அருளாலே இன்று தொடர்கிறது.

இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, மனது கொள்ளைதான் போகிறது. (பெரியவாளின் எந்த poseல் தான் மனம் கொள்ளை போகவில்லை?!!)

அந்த ராமச்சந்திர மூர்த்தி, தன் பாதுகைகளை பரதனிடம் கொடுத்துவிட்டு நிற்பதுபோல பெரியவாளும் நிற்கிறார் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

பரதன் போல, அந்தப் பாதுகைகளை பத்திரமாக நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும் அந்த சிஷ்யர் செய்த புண்ணியம்தான் என்ன!! (அவர் பெயர் ஸ்ரீ.KN குருமூர்த்தி என்று அறிகிறோம்).  

அது என்ன ஒரு புன்முறுவல்? “photo எடுக்கறையா? எதுத்துக்கோ” என்று சொல்வது போல ஒரு ஜாலியான pose!! அந்தக் கண்களில்தான் என்ன ஒரு காருண்யம்?

கரமலர்கள் இரண்டும் பதமலர்களைக் காட்டிக் கொண்டு இருக்கின்றதோ? “என் காலைப் புடிச்சுக்கோ. வேற ஒண்ணும் வேண்டாம்” என்று சொல்கின்றனவோ?

அப்பனே! உன் காலைப் புடிச்சுக்கறதுக்கும், உன் அருள் இருந்தாதானே முடியும்?

பெரியவா சரணம்.



இளநகை முறுவல் பூத்த முகமலர் அழகில் கருணை
அளவிட முடியா அந்தக் கண்களின் அழகில் கேட்கும்
வளமெலாம் அருளும் அந்தக் கரமலர் அழகில் எந்தன்

உளமதைத் தொலைத்தேன், என்றும் உன்பதம் சரணம் ஐயா! (88)



06.10.17:  நேற்று குருவாரம்:  

நடமாடும் இறையவனைத் தொழுவாயென் மனமே

ஒவ்வொரு குருவாரத்திலாவது, பெரியவாளை ஒரு கணம் நினைத்து, ஒரு photo பெரியவாளைப் பார்த்து, மனதில் என்ன தோன்றுகிறதோ, அதனை “பாடல்” என்ற பெயரில் எழுதுவது, அவர் அருளாலே இன்று தொடர்கிறது.

அந்த நடமாடும் தில்லைக் கூத்தனை, இந்த நடமாடும் இறை பணிந்தேத்தும் இவ்வற்புதக் காட்சி காணும்போது, மனம் கரைந்து போகிறது.

பெரியவா சரணம்.



இடமாக இன்னருள்செய் மடமாதைக் கொண்டருளும்
விடமான கண்டத்தன், கனலாடும் சுடலாடி
நடமாடும் இறையவனை உளமாரத் தொழுமிந்த

நடமாடும் இறையவனைத் தொழுவாயென் மனமே (89)


13.10.17 : நேற்று குருவாரம்

ஒவ்வொரு குருவாரத்திலும், ஒரு photo பெரியவாளைப் பார்த்து, மனதில் தோன்றுவதை ஓர் பாமாலையாய் அவர் பாதத்தில் சமர்ப்பிப்பது, இந்த வாரமும், அவர் அருளால் நடந்திருக்கிறது.



இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, விசித்திரமான ஒரு எண்ணம் தோன்றியது. ஞானப் பிழம்பாய், ஞானக் கதிரவனாய் அமர்ந்திருக்கும் பெரியவாளுக்கு, நாம் காட்டும் தீபத்தால் ஆவதென்ன – என்று தோன்றியது.

ஆனாலும், அந்த ஈஸ்வரன் கொடுத்த காய் – கனி கிழங்குகளைத் தானே அவனுக்கே நைவேத்யமாக அர்ப்பணிக்கிறோம்? அதனால் இதுவும் சரிதான் என்று தோன்றியது.

அவன் அளித்த நீரையன்றோ அவனுக்கு சமர்ப்பிக்கிறோம்? அவன் அளித்த கொடையான பாஷையையல்லவா அர்ச்சனையாக அவனுக்கே செய்கிறோம்?


இந்தப் பாடலையும்கூட , “நான் எழுதினேன்” என்று சொல்வது – நினைப்பதும் கூட - எவ்வளவு அபத்தம்? அவன் அருளாலே அவன் அளித்த வார்த்தைகளை, அவன் அளித்த சரீரத்தால், உணர்வால், அறிவால், அவனுக்கே சமர்ப்பிப்பது அல்லவா இது?

பெரியவா சரணம்.



ஞானக் கதிரோன் தனக்கு தீபமே காட்டி நின்றேன்
வானதி தலைவனுக்கு அர்க்யமே தந்து நின்றேன்
கோனவன் தந்த சொல்லால் அர்ச்சனை செய்தேனிந்த
ஈனனைக் காப்பாயப்பா! உன்பதம் சரணமப்பா! (90)

19.10.2017: குருவாரம் : : தீபாவளித் திருநாள் 
இன்று, மும்பையில் தீபாவளி. இந்தத் திருநாளில், குழந்தையாய் மத்தாப்பு விட்டு மகிழும் இந்த பெரியவாளில் மனம் லயித்தது.

என்றும், உன்னயே நினைத்துக்கொண்டு, குழந்தையாய் இருந்துவிட அனுக்ரஹம் புரிவாய் அப்பா என்ற வேண்டுதலோடு, இந்தப் பாடலை பெரியவா பாதத்திற்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
பெரியவா சரணம்.

தீபத் திருநாளில் ஈசா வந்திடுவாய்!!
கோபம் முதலான பகையை அழித்தெங்கள்
பாபம் அகற்றிடுவாய்! கருணை மழையாலெம்
தாபம் தீர்த்திடுவாய்! சோகம் மாற்றிடுவாய்! (91)
28.10.2017 : கடந்த குருவாரத்திற்கான பாடல்
சென்ற 10 நாட்களாக tour. Net connection இல்லை.
ஒவ்வொரு குருவாரமும் ஒரு photo பெரியவாளைப் பார்த்து மனதில் தோன்றுவதைப் பதிவு செய்வதுஇந்த குருவாரத்திலும் அவர் அருளால் தொடர்கிறது. அப்பாடலை, இன்று பதிவு செய்கிறேன்.

மும்மூர்த்திகளின் ஓருருவாய், அந்த முருகனோடு உமையும் சேர்ந்தத் தாயுருவாய் இங்கே அமர்ந்திருக்கும் பெரியவாளை பணிந்து, இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்.
பெரியவா சரணம்.

மாலவன் தன்னோடரனும் அயனுமாய் நின்ற மூர்த்தி
வேலவன் தன்னோடுமையய்த் தாயுமாய் நின்ற மூர்த்தி
காலமும் கணக்கும் நீத்த மூலமா முதல்வா! எந்தன்
ஓலமே கேளாய்! வந்து அபயமே தாராய் ஐயா! (92)

02.11.2017 : குருவாரம் : எம்மையும் காத்தருள்வாய்

இன்றைய குருவாரத்தில், இந்த photo பெரியவாளைப் பணிந்து, இந்தப் பாடலை சமர்ப்பணம் பண்ணுகிறேன்.


அம்மையே அப்பா என்று ஓலமிட்டலறி உந்தன்
இம்மையே போக்கும் பாதம் பற்றவே வந்தோமப்பா!
வெம்மையாம் பிணியையன்று போக்கினாய் இங்கு வந்து
எம்மையும் காத்தருள்வாய்! உன்பதம் சரணமப்பா! (93)



16.11.2017 : குருவாரம் : எங்கிலும் நிறைந்த ஞானச் சுடர்ப்பதம்

இந்த குருவாரத்தில் இந்த photo பெரியவாளைப் பணிந்து, இப்பாடலை சமர்ப்பிக்கின்றேன். பெரியவா சரணம்.



சங்கரா போற்றி ; ஆலம் உண்ட எம் அரசே போற்றி
சங்கடம் தீர்க்கும் தெய்வக் குரலது தந்தாய் போற்றி
மங்கிடாப் புகழோய் காஞ்சிப் பதியுறை அமுதே போற்றி
எங்கிலும் நிறைந்த ஞானச் சுடர்ப்பதம் போற்றி போற்றி (94)



24.11.17 : நேற்று குருவாரம்:


ஒவ்வொரு குருவாரமும், ஒரு photo பெரியவாளைப் பார்த்து, மனதில் தோன்றுவதை ஒரு பாமாலையாய் பெரியவாளின் பாதகமலங்களுக்கு சாற்றுவது, அவர் அருளாலே, இந்த வாரமும் நடக்கிறது.


இடதுபதம் தூக்கி ஆடும் அந்த தெய்வத்திற்கு, காஞ்சி மாநகர வீதிகளிலே நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அந்த நடனத்தின் நினைவு வந்துவிட்டதோ? இல்லை, அந்தக் காஞ்சிக் காமாக்ஷித் தாயே, தனது பதம் தூக்கி நின்று, தவம் செய்யத் துவங்கி விட்டாளோ? யாமறியோம் பராபரமே!!


பெரியவா சரணம்.





இடப்பதம் ஊன்றி நின்று, வலப்பதம் மடித்துத் தூக்கி
நடனமோ? தவமோ? இங்கே இது என்ன கோலம் அப்பா?
விடம் உண்ட கண்டா! எங்கள் இடம் வந்த தேவா! உந்தன்
இடம் வந்தடைந்தோம் ! எம்மை உடன் வந்தருள்வாயப்பா! (95)
30.11.2017 : குருவாரம் :

ஒவ்வொரு குருவாரத்திலும் ஒரு photo பெரியவாளைப் பார்த்து, ரசித்து, மனதில் தோன்றுவதைப் பாடலாக அவரது மலர்ப்பதங்களுக்குக் காணிக்கையாக்குவது, அவர் அருளாலே இன்றும் தொடர்கிறது.

ஆனால், இன்று என்னவோ, பெரியவாளை அந்தத் தில்லை அம்பலவனாகவே பார்க்கத் தோன்றியது. போன வாரப் பாடலிலும்கூட, நடனம் ஆடும் பெரியவா போலவே photo பெரியவா அமைந்து, பாடலும் அமைந்தது. இந்த வாரமும் அவ்வாறே.

பெரியவா சரணம்.



தில்லையில் ஆடும் கூத்தா! பிறவியாம் பிணியை, மிக்கத்
தொல்லையை நீக்க இங்கே நானிலம் நடந்த ஞான
எல்லையே! இறையே! சோதீ! கஞ்சிவாழ் கருணைத் தாயே!
ஒல்லை வந்தருள்வாய், உந்தன் மலரடி பணிந்தோமப்பா! (96)

07.12.2017 : குருவாரம்: மரணமதும் மறைந்துவிடும்
****************************************************************************

இன்றைய குருவாரத்தில், இந்த photo பெரியவாளின் இளமுறுவல், மனதைக் கொள்ளை கொள்கிறது. தருவின் நிழலிலே இளப்பாறும் இந்த குருவின் வடிவம் உள்ளத்தை ஊடுருவுகிறது!

கருணைக் கடலே, உன்னருளால், இந்த குருவாரத்திலும், உன்னை ஒரு கணம் நினைக்க முடிந்தது. உன்னருளால் எழுந்த இந்த பாடல், உனக்கே அர்ப்பணம்.

பெரியவா சரணம்.



குருகுஹனின், பெருமகனின் ஒரு பார்வை துயர்தீர்க்கும்!
பெருங்கருணைக் கடலதுவும் வினைவெப்பம் தனைநீக்கும்!
அருளமுதம் பொழிகரமோ எழுபிறவி தனை மாற்றும்!
திருப்பாதம் தனைப்பணிய மரணமதும் மறைந்துவிடும்! (97)

08.12.2017

இந்த photo பெரியவாளைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. அந்தக் குளிர்முகமும், இளநகையும், ஓய்வாகச் சற்றே மரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கும் கோலமும் மனதைக் கொள்ளை கொள்கிறதே!
அடியேன் கண்டதை, மனதில் தோன்றிய வரிகளால் பெரியவாளின் மலர்ப்பாதங்களுக்குப் பாமாலையாய் சாற்றுகிறேன்.
பெரியவா சரணம்.
ஆலமா மரத்தின் கீழே தென் திசைக் கடவுள் எங்கள்
ஞாலமா குருவைக் கண்டேன்; கருணையாம் கடலைக் கண்டேன்
நாலதாம் வேதம் வாழ நடந்த அப்பாதம் மின்னும்
கோலமும் இங்கு கண்டேன்; குளிர்நகை முகத்தில் கண்டேன் (1)
தென்திசைக்கடவுள் போலே மண்மிசை வந்த எங்கள்
இன்னுயிர்க் குருவைக் கண்டேன்; இன்னருள் பொங்கக் கண்டேன்
மன்னுயிர் எல்லாம் வாழ நடந்த அப்பாதம் என்னும்
பொன்மலர் மிளிரக் கண்டேன்; அயனெழுத்தழியக் கண்டேன் (2)
நீழலில் சற்றே ஓய்வாய் அமர்ந்த பொன் மேனி கண்டேன்
ஆழிபோல் பொங்கும் அன்பை முகமலரதனில் கண்டேன்
ஊழதாம் பிணியை நீக்கும் புன்னகை இதழில் கண்டேன்
ஏழெழு பிறவி போக்கும் பொற்பதம் மிளிரக் கண்டேன் (3)
உலகெலாம் படைத்துக் காத்து, அழித்து ஓர் ஆட்டம் ஆடி
சிலநொடி நேரம் அதனை வேடிக்கை பார்க்குமந்த
நிலவணி இறையைக் கண்டேன், இளநிலா முறுவல் கண்டேன்
மலர்ப்பதம் தன்னைக் கண்டேன்; நலமதே பொங்கக் கண்டேன் (4)

பிறையதை கங்கைதன்னை ஆடையால் மறைத்து மூடிக்
கறைக்கண்டம் அதையும் மூடிப் பொலிந்திடும் சிவனைக் கண்டேன்
மறையதும் போற்றும் உந்தன் மலர்ப்பதம் அருகில் வந்துக்
குறையதே உருவாய் வந்த என்னையும் ஏற்கக் கண்டேன் (5)


15.12.2017 : நேற்று குருவாரம்




ஒவ்வொரு குருவாரத்திலாவது, ஒரு photo பெரியவாளை மனதிலே பார்த்து, மனதில் தோன்றுவதைப் பாடலென்ற பெயரில் எழுதுவது, இன்றும், பெரியவா அருளில் தொடர்கிறது.


இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, அந்த இதழின் கோடியிலே ஒரு குறும் சிரிப்பு – இளநகை – ஒரு சிரிய கேலிச் சிரிப்பு தோன்றுகிறது.


“பெரியவா, பெரியவான்னு சொல்ற…நான் இருக்கேன்னு நம்பற. ஆனாலும் ஏன் கவலைப்பட்டு சாகற”? என்று கேட்பது போலே தோன்றுகிறது .


உடலழியும் மரணம் ஒரு முறை.


மனம் தினம் நொந்தழியும் கவலை நோயால் வரும் மரணம் பல முறை.


அந்த தின மரணத்திற்கு ஒரே மருந்து பெரியவாளின் இந்த இதழ்க்கடை நகை ஒன்றுதானே.


பெரியவா சரணம்.







நிதமொரு கவலை என்னும் நோயினால் சாவேனென்னை
இதழ்க்கடை நகையாமந்த அமுதத்தால் காப்பாயப்பா!
மதங்கொண்டு திரியும் எந்தன் புலன்களை மனதை நீயும்
வதம் செய்தருள்வாயப்பா! பதம் தந்தருள்வாயப்பா! (98)


21/12/2017 : குருவாரம் :

ஒவ்வொரு குருவாரமும், ஒரு photo பெரியவாளைப் பார்த்து, சற்றே அவர் கருணையை நினைத்து, ஒரு பாடல் அவரது பத கமலங்களுக்கு சமர்ப்பிப்பது, இன்றும், அவரது கருணையினால் நடந்திருக்கிறது.

இரட்டை சூரியர்களாய், இரு சங்கரர்களும் வரும் இந்த அழகினைப் பருக, அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன்!

பெரியவா சரணம்.



நலமாகப் புவிவாழ அன்பமுதக் கடலேந்தி
மலர்மாலையோடு மலர் மலையொன்று வருகிறது
அலர்கதிர் ஞாயிறது அழகாக வருகிறது
துலங்கிடும் ஞானமது நமை நாடி வருகிறது (99-1)

அடியார்கள் எல்லோரும் திரண்டிங்கே வாருங்கள்!
வடிவான பேரெழிலை வந்திங்கே காணுங்கள்!
செடியான வல்வினைகள் தீர அவன் பாத நிழல்

கடிதேக வாருங்கள்! விரைந்தோடி வாருங்கள்! (99-2)


29/12/2017 : நேற்று குருவாரம்என்னதான் குறையுண்டிங்கு

ஒவ்வொரு குருவாரமும், ஒரு photo பெரியவாளைப் பார்த்து, சற்றே அவர் கருணையை நினைத்து, ஒரு பாடல் அவரது பத கமலங்களுக்கு சமர்ப்பிப்பது, இன்றும், அவரது கருணையினால் நடந்திருக்கிறது.

அன்பும் கருணையும் அருளும் ஓருருவாய் வதன் அந்தப் பெருமகனைக் கண்டபின்னர், நமக்குக் குறை என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

நிச்சயம் இருக்க முடியாது.

நேற்றைய குருவாரத்துடன் 100 பாடல்கள் நிறைவடைகின்றன. எந்தத் திட்டமிடலும் இல்லாமல் நடந்த ஒரு பாடல் வேள்வி இன்னமும் தொடர, பெரியவாளின் பதமலர்களையே சரணடைகின்றேன்.

பெரியவா சரணம்.



அன்பெனும் பெயரதொன்றும் கருணையாம் கடலதொன்றும்
இன்னருள் என்பதொன்றும் ஒன்றதாய் வந்தெமக்குத்
தன்னையே கொடுக்கும் தெய்வம் உன்னையே கண்ட பின்னர்

என்னதான் குறையுண்டிங்கு? நிறையன்றிக் குறையேதில்லை! (100)


4.1.2018 குருவாரம்

இந்த குருவாரத்தில், தவக்கோலத்தில் இருக்கும் இந்த சிவத்திற்கு, இந்தப் பாடல் அர்ப்பணம்.



தவம்செய் மா தவத்தால் வந்த தவமது சிவத்தை எண்ணி
தவமதே செய்யும் இந்தக் கோலமே கண்டோம்! எங்கள்
பவரோகம் தீர்க்கவென்று துவராடை பூண்டு வந்தாய்

நவக்கோலம் காட்டி நின்றாய்! பதமலர் சரணமப்பா! (101)


11.01.2018 : குருவாரம்

அந்த ஈஸ்வரனின் இதழ்க்கடைப் புன்னகை ஒன்றே நமது துன்பங்களையும் துய்ரத்தையும் போக்கும் என்று சொல்வார்கள் பெரியோர்.

நமது கவலைகளையும், துயரத்தையும்கூட, இந்தப் பெரியவாளின் அந்த அழகிய புன்னகை மாற்றி வைக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு, இந்தப் பாடலை அவரது பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



நிதமொரு கவலை நோயால் வாடிடும் என்னை உந்தன்
இதழ்க்கடை சிரிப்பொன்றாலே காத்திடுவாயோ ஐயா?
பதமதே கதியாய் வந்தேன் அதமனை சற்று நீயும்

கதிதந்து காப்பாய் ஐயா! ஆதரித்தருள்வாய் ஐயா! (102)


18.01.2018 : குருவாரம் : அடைக்கலம் அடைந்திட்டேனே



சுந்தர வதனம் கண்டேன்; சுடர்விழி பொலியக் கண்டேன்
சந்திரன் சிரசில் கண்டேன்; கஞ்சியாம் இமயம் தன்னில்
எந்தையும் தாயும் சேர்ந்து இருப்பதாம் வடிவம் உன்னை

சந்ததம் நினைவில் கண்டேன்; அடைக்கலம் அடைந்திட்டேனே! (103)



25.01.2018 : குருவாரம் : பாதமாய் கொண்டிட்டாளோ?

பெரியவாளின் பதமலர்கள் இரண்டும் தாமரை மலர்கள் போல அவ்வளவு மென்மையாய், அழகாய் இருப்பது பக்தர்கள் எல்லொருமே கண்டு, பாடிப் போற்றி, இன்புற்ற ஒன்றுதான்.

ஏதோ இரண்டு தாமரை மலர்கள் தாம் செய்த புண்ணியத்தினாலேயே, பெரியவாளின் பாத மலர்களாய் மலர்ந்திருக்கின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.

பெரியவா சரணம்.



காமனும் வணங்கும் தாயைப் பெரியவா வடிவில் கண்டு
தாமரை மலர்கள் ரெண்டு போற்றிடக், கருணை கொண்டு
மாமறை தொழுமத் தாயும்  மலர்களை எடுத்து இங்கே
நாமெலாம் வணங்கவென்றுன் பாதமாய் கொண்டிட்டாளோ? (104)

1.2.2018 : குருவாரம் : எதிரிலே நிற்கக் கண்டேன்



சிரசிலே வில்வம் சூடி, கரத்திலே தண்டம் தாங்கி
அரனவன் நிற்கும் இந்த அழகிய கோலம் கண்டேன்
நரனதாய் உருவம் தாங்கி, அடியவர்க்காக இங்கே
தரணியைக் காக்கும் தெய்வம் எதிரிலே நிற்கக் கண்டேன் (105)

8.2.18 : குருவாரம்:

ஒவ்வொரு குருவாரமும், ஒரு photo பெரியவாளைப் பார்த்து, மனதில் தோன்றுவதை ஒரு பாமாலையாய் பெரியவாளின் பாதகமலங்களுக்கு சாற்றுவது, அவர் அருளாலே, இந்த வாரமும் நடக்கிறது.

பெரியவா சரணம். 



அன்பினோர் ஆழியொன்றை, கருணையாம் கடலதொன்றை
துன்பமே துடைக்க வந்த இறையினோர் அருளைக், குன்றா
இன்பமாம் சாந்தமென்னும் அமைதியின் பெருக்கை இங்கே
உன்னிடம் கண்டேனையா! பதமலர் தருவாயய்யா! (106)

15.2.18 : குருவாரம்:

வண்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு மெதுவாய் பெரியவா நடந்து வந்து அனைவருக்கும் அருள் செய்யும் அற்புதக் காட்சி !




தேரினில் வந்து நித்தம் அருள்தரும் அன்புத் தெய்வம்
பாரினில் வண்டி பின்னர் நடந்தலுத்திளைப்பதென்னே!
கோரிய வரங்கள் தந்து அன்பருக்கருளும் தெய்வம்
வாரியே கொடுக்க வலிய வந்தருள் செய்வதென்னே! (107)


குருவாரப் பாடல் : 22.02.2018

பெரியவாளைத் தாங்கி நிற்கும் இந்த மண்தான் – இந்தப் புழுதிதான், என்ன தவம் செய்தது? இந்த மண்ணிலே, பெரியவா பாதம் படும் ஓர் புழுதித் துகளாக இருந்தாலும், இந்தப் பிறவி உய்ந்து விடுமே!



அத்தனின் குறடு தன்மேல் பட்டிடச் சிலிர்த்து எந்தை
நித்தமும் நடக்கத் தாங்கி, பொற்பதம் ஏந்தி நிற்கும்!
எத்தவம் செய்ததிந்த பூமியின் புழுதி? இந்த
உத்தமப் புழுதியாக இங்கு நான் இருந்திடேனோ? (108)

8.3.2018 குருவாரம்

இந்த photo பெரியவாளைப் பார்த்து மெய்மறக்காதோர் யாரேனும் இருக்க முடியுமா என்ன? என்ன ஒரு சிரிப்பு இது? இந்த இன்முகமும், புன்னகையும், பதமலரும் என் மனதிலே என்றும் இருக்கட்டும்.




குழந்தை போல் சிரிப்பு கண்டேன்; முகமலர் அழகைக் கண்டேன்
பழம் என முதிர்ந்த மேனி அழகுர மிளிரக் கண்டேன்
தழல் எனச் சுடரும் ஞானம் ஒளிர்ந்திடும் பாதம் கண்டேன்
உழன்றிடும் எந்தன் வாழ்வில் ஒளி நீயே என்று கண்டேன் (109)


15.3.2018 : குருவாரம் உடல் தளர்ந்து, வற்றிய மேனியராய், வற்றாத கருணை பொழியும் கண்கள் பொலியும் முகத்தினராய் விளங்கும் உம்மாச்சித் தாத்தாவை வணங்கி, இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.


வற்றிய மேனி கண்டேன்; வற்றாத கருணை கண்டேன் பற்றிய தண்டம் கண்டேன்; பற்றெலாம் அழியக் கண்டேன் உற்றிடும் உறவு நீயே; மற்றெதும் உறவு காணேன் சற்றெனைப் பார்ப்பாயப்பா! பொற்பதம் சரணடைந்தேன்! (110)



22.03.2018 : குருவாரம்.

ஒவ்வொரு குருவாரத்திலும், ஒரு photo பெரியவாலைப் பார்த்து, மனதில் தோன்றுவதை, “பாடல்” என்ற பெயரில் எழுத முயற்சிப்பது, பெரியவாளின் அருளால், இன்றும் தொடர்கிறது.

இந்த photo பெரியவாலைப் பார்க்கும்போது, உடம்பு நடுங்குகிறது. 90 வயதில், இது என்ன கொடுமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தள்ளாமை வந்த உடலோடு, கொடும் வெயில் சுட, தெருவிலே இளைப்பாறுவற்கா இந்த தேவதேவர் அவதாரம் பண்ணினார்?

ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும்? எங்கள் தவறுக்கெல்லாம் நீ ப்ராயசித்தம் செய்தாயோ அப்பா? எழுந்து வா. நல்ல இடத்திலே, குளுமையாக இளப்பாற வா என்று அழைக்கத் தோன்றுகிறது.

பெரியவா சரணம்.


உடம்பெடுத்து வந்த வேலை பூர்த்தி செய்யும் ஆவலால்,

நடந்து மேனி நொந்ததோ? நடந்த கால்கள் நொந்தவோ?

சுடும் கொடும் இவ்வுச்சி வேளை தளர்ந்திளைத்தலுத்தயோ?

அடம்பிடித்திருந்திடா தெழுந்து வா என் ஐயனே! (111-1)


மடமுமிங்கலுத்ததோ? உன் இடமுமிங்கலுத்ததோ?
விடம் எனக் கறுத்த எந்தன் உள்ளமும் கசந்ததோ?
சுடர்பொன் மேனி வாடயிங்கமர்ந்த தேவ தேவனே!
அடம்பிடித்திருந்திடா தெழுந்து வா என் ஐயனே! (111-2)

29.03.2018 : குருவாரம் : 

இது என்ன ஒரு மந்திரப் புன்னகை? என்ன அழகு! மனதை அழித்துத் தன் பதத்தை அருளும் அப்பனே உனக்கே அடைக்கலம்!


இன்முகம் என்னும் கருணைப் பொய்கையில் பூத்த நல்ல
புன்னகைப் பூவைக் கண்டு சொக்கி நான் நின்றேனப்பா!
என்குறை எல்லாம் நீக்கி, உன்னையே எனக்கு நல்கும்
உன்பதம் தருவாயப்பா! அன்புடன் அருள்வாயப்பா! (112)



12.04.2018 : குருவாரம்

பெரியவா இருக்கும் இடத்தில் பக்தர்களுக்குக் குறைவே இல்லை. பெரியவாளிடம் சென்று பேசி, தன் ஆதங்கமெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைப்போர் உண்டு. பெரியவாளை பார்த்துக் கொண்டே இருந்தாலே போதுமே – வேறே என்ன வேண்டும் என்று நினைப்போரும் நிறைய உண்டு.

நம்மை முழுக்க அறிந்த தெய்வத்திடம் நமது குறைகளை சொல்ல வேண்டுமா என்ன? அந்த முகமலரை பார்த்துக் கொண்டே இருந்தாலே போதாதோ?

“பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது! பெரியவாளைப் பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது”

இன்றைய குருவாரத்தில், இந்த photo பெரியவாளையும், பெரியவாளின் அருகிருந்து அந்த அருளமுதத்தை நித்தம் பருகிடும் பக்தர்களையும் வணங்கி, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.



உருகி வரும் உள்ளத்தில் பெருகி வரும் பக்தியுடன்
குருவுனையே அண்டி உந்தன் அருகிருக்கும் ஆசையுடன்,
அருளமுதம் ஊறிடுமுன் முகமலரை மொய்த்து நிதம்

பருகிடுமோர் ஆசையுடன் பக்தர் விழி வண்டு வரும்! (113)

19.04.2018 : குருவாரம் : என்னவென சொல்லிடுவேன்?

பெரியவா முகமலரைப் பார்க்கும்போது, அதனை என்னவென வர்ணிப்பது என்று ஒரு கேள்வி மனதில் தீடீரென எழுகிறது. கவிஞர்கள், புலவர்களெல்லாம் அதனை மலரென்றும், மதியென்றும் எல்லாம் வர்ணிக்கிறார்கள். அது சரி இல்லையோ -  என்றும் ஒரு கேள்வி எழுகிறது. சந்திரன் தேய்கிறது. மலர் வாடுகிறது. பெரியவாளின் கருணைபொங்கும் தேஜோமய முகம் அப்படியே அல்லவா இருக்கிறது? 

பெரியவா சரணம்.



உன்முகத்தை மலரென்றும், நிலவென்றும் சொல்லிடுவார்
இன்முகமோ நிரந்தரமாம், அதுமதி போல் தேய்ந்திடுமோ?
தன்னிலையில் மாறாத முகம் மலர்போல் வாடிடுமோ?
இன்னுயிரே! என்னரசே! என்னவென சொல்லிடுவேன்? (114)



03.05.2018 : குரு வாரம்:


ஆற்றின் கரையினிலே நின்று, காவி உடை உடுத்துக்கொண்டிருக்கும் இந்த கருணைக் கடலைக் காலமெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது!

இந்த குருவாரத்தில் இந்த Photo பெரியவாளை மனதிலிருத்தி வந்தனம் செய்கிறேன். பெரியவா சரணம்.



கரைபுரண்டோடும் ஆற்றின் கரையிலே நின்று காவி
அரையிலே கட்டும் தேவே! அறைகூவி அழைத்தேனுன்னை!
புரையிலா வாழ்வே, கருணைக் கரையிலா கடலே உந்தன்
விரைமலர்ப் பாதம் தேடி வந்தனன், அருள்வாயப்பா! (115)

10.05.2018: அறுமுகன் கண்டேனய்யா

அந்த தக்ஷிணாமூர்த்தியே தவம் செய்வது போல, நதிக் கரையிலே தியானம் செய்யும் இந்த photo பெரியவா! அருளும், அன்பும், கருணையும் பொழியும் ஞானத் திருவுருவே! அறுமுகமும் காட்டும் உந்தன் திருமுகம் என்றும் இந்த அடியவன் மனதில் நிலைத்திருக்க அருள்வாயப்பா!




ஒருமுகம் கண்டேன் உந்தன் அருள் முகம் கண்டேன் அன்புத்
திருமுகம் கண்டேன் கருணைபொழி முகம்  கண்டேன் ஞான
குருமுகம் கண்டேன்  வீடுதரு முகம் கண்டேன் எங்கள்

பெருமகன் உன்னில் அந்த அறுமுகம் கண்டேனய்யா! (116)


17.05.2018 : குருவாரம் : கைகட்டி நின்றாயோ நீ?

இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, மனதிலே நிறைய கேள்விகள் தோன்றுகின்றன.



பெரியவா எதற்காகக் கை கட்டி நிற்கிறார் – என்பதுதான் ப்ரதானமான கேள்வி. அந்த அருள் முகத்திலே தோன்றுவது பரவசமோ? காமாக்ஷி வீதி உலா வரும்போது, அந்தத் தேவியைப் பார்த்த பரவசமோ? அந்தத் தேவியின் சன்னதியிலே அர்ச்சகர்கள் பெரியவாளை அழைக்க, தேவியின் முன்னே கைகட்டி நின்றாரோ?

அந்தத் தெய்வத்தின் முகத்தில் தோன்றுவது லேசான குறும்புடன் கூடிய புன்னகையோ? கதறி அழும் பக்தன் முன்னே ஓடி வந்து, கை கட்டி நின்று, “சொல், உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறாரோ?

இல்லை, அந்த குருநாதனின் முகத்தில் தோன்றுவது, “நீ கூப்பிட்டவுடனேயே நான் வரவில்லையப்பா. வந்துதான் இருக்கவேண்டும்…விட்டுவிட்டேன்… இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன். ஓடி வந்துவிடுகிறேன்” என்று சமாதானம் சொல்லும் பாவமோ? அப்படி “sorry” சொல்லும் “posture” என்பதால்தான் கைகட்டி நின்றாரோ?

அப்பனே! நீதான் பதில் சொல்ல வேண்டும்! பெரியவா சரணம்.
*************************************************************************************************


அன்னையாம் தேவிவீதி உலாவர அவளின் மேனி
மின்னெழில் கண்டு நெஞ்சம் கரைந்திங்கு நின்றாயோ நீ?
சன்னதி தன்னில் உன்னை அர்ச்சகர் அழைக்கத் தேவி
முன்னமோர் குழந்தை போலே கைகட்டி நின்றாயோ நீ? (117-1) 

பக்தர்கள் முன்னே தெய்வம் கைகட்டி நிற்கும் என்பார்!
எக்கதி ஏதுமின்றி உன்னையே நினைத்துக் கூவி
பக்கமே வா என் றழைத்திடும் பக்தர்க்காக
அக்கணம் ஓடிவந்து, கைகட்டி நின்றாயோ நீ? (117-2)

அன்பர்கள் உந்தன் பக்த கோடிகள் அழைத்தும் ஓடி
வந்தருள் புரியா நிற்றல் பிழையென்றோ? இருந்தும்கூடப்
பின்னரே பொறுமையாய் உன் ஜபமெலாம் முடித்து பக்தர்
முன்னரே வந்ததால்தான் கைகட்டி நின்றாயோ நீ? (117-3)



24.05.2018 : குருவாரம் :

இன்றைய குருவாரத்தில், இந்த  photo பெரியவாளைப் பார்க்க, பரமானந்தமாக இருக்கிறது. ஸ்வாமி சன்னிதியில் ஹாயாக அமர்ந்திருக்கும் இந்த ஸ்வாமியைப் பார்த்தால், யாருக்குத்தான் சந்தோஷம் வராது?

பெரியவா சரணம்.



கும்பிடப் போன தெய்வம் குருவென வந்ததம்மா!
சம்புவாம் பரம தெய்வம், பழகவே வந்ததம்மா!
“நம்பினார் கெடுவதில்லை”, நான்மறை சொன்ன தீர்ப்பை,
அம்புவி அனைத்தும் கண்டு, உணரவே வந்ததம்மா!  (118)


31.05.2018 : குருவாரம் :

வேத பண்டிதர்கள் சுற்றி நிற்க, அடியார்கள் கூட்டத்தின் நடுவே, குடிசை அருகிலே சிறிய ஆசனமிட்டு அமர்ந்திருக்கும் பெரியவாளின் காட்சியே இன்றைய குருவாரப் பாடலாய் மலர்ந்திருக்கிறது.
பெரியவா படம் : Thanks to Sage of Kanchi blog : https://mahaperiyavaa.blog/2018/05/29/two-rare-photos-of-mahaperiyava-3/
பெரியவா சரணம்.



குடிசையதே அரண்மனையாய், பண்டிதரே அரசவையாய்
பிடிநிலமே ஆசனமாய், தண்டமதே செங்கோலாய்
அடியார்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் நாதனவன்
வடிவாட்சி காண,  வினை, பொடியாகிப் போனதம்மா! (119)



7.6.18 : ஏனிங்கு நின்றாய் நீ?

எல்லா இடங்களிலும், பெரியவாளின் சிலாமூர்த்தியை, அமர்ந்த கோலத்தில்தான் பார்த்திருக்கிறோம். கும்பகோணத்தில் மாத்திரம், விதிவிலக்காய், நின்ற கோலத்திலே காட்சி தருகிறார் நம் பெரியவா.

பெரியவாளின் நின்ற கோல அழகினைப் பார்த்து ரசிக்கும்போதே, மனதிலே, “இங்கே மட்டும் ஏன் பெரியவா நிக்கறா? “ என்று கேள்வி எழுகிறது.

பழனியில் நிற்கும் பெருமானே! அங்கே நிற்பது போதாது என்று இங்கும் வந்து நிற்கிறாயோ? தில்லையிலே, மானோடு மழு சூடும் பெம்மானே, அங்கு ஆடும் ஆட்டத்தையெல்லாம் விட்டு, இங்கு வந்து எங்களுக்காக நின்றாயோ? பக்தர்கள் கூப்பிட்டால் உடனே ஓட வேண்டும் என்பதற்காக நின்றாயோ? உட்கார்ந்திருந்தால், அடியார்கள் அழைத்தவுடன் எழுந்து ஓடிச்சென்று காப்பாற்ற நேரமாகும் என்றுதான் நின்றாயோ? எங்கள் வினையெல்லாம் தீர்க்கவென்று, உன் அடி நோக, உடல் நோக, “ரெடி” யாக நின்றாயோ?

எதற்காக நீ இங்கே இந்த கோலத்திலே இருக்கிறாயோ – யாம் ஒன்றும் அறியோம். ஆனால், இந்தக் கோலத்தில், நீ நின்ற அந்த அவசரத்தை, நீ நிற்கும் இந்தக் காட்சி அழகைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறோம்!

பெரியவா சரணம்.
******************************************************************************************************



பழனியிலே நிற்பவனே! பெம்மானே! பக்தர்களின்
அழுகையினை மாற்றவென வந்திங்கு நின்றனயோ?
மழுவோடு மான் சூடும்  நடராஜா, அடியார்கள்
குழுகூவும் குரல்கேட்டு வந்திங்கு நின்றனயோ? (120-1)

சித்தத்தில் உனைவைத்து, விழிநீரால் நீராட்டும்
உத்தமரும் கூப்பிட்டால் ஓடிடவே நின்றனையோ?
குத்துக்காலிட்டமர்ந்த கோலத்தில் இங்கிருந்தால்
வித்தகனே “தூக்கம்வரும்” என்றேதான் நின்றனையோ? (120-2)

அடியார்கள் கூப்பிட்ட நேரத்தில் உடன் ஓட
முடியாது என்றேதான் அமராமல் நின்றனையோ?
முடியாத எம்வினையை அடியோடு தீர்க்க மலர்

அடிநோக உடல்நோக, “ரெடியாக” நின்றனையோ? (120-3)


14.06.2018 : குருவாரம்



கருணையே வடிவாய், சாந்தஸ்வரூபனாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெரியவாளைப் பார்க்கும்போது, இந்த பாழும் மனது, இந்தப் பெரியவாளின் சரணங்களை விட்டுவிட்டு ஏன் கண்ட இடத்திற்கும் ஓடுகிறது என்று நினக்கத் தோன்றுகிறது.

என் ஐயா! பெரியவாளே! எனக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறாய் நீ? அழிந்து போகக்கூடிய செல்வமெல்லாம் தந்திருக்கிறாய். உருக்குலைந்து அழிந்து போகும் உடம்பு தந்திருக்கிறாய். பாவமே செய்யும் ஒன்றை “அறிவு” என்ற பெயரிலே தந்திருக்கிறாய். புலன்கள் இழுத்த இழுப்பிலெல்லாம் ஓடும் மனதையும், சேறு போன்ற மனதையும், அந்தச்சேற்றில் வாழும் பன்றியையொத்த வாழ்வையும் தந்திருக்கிறாய்.

உலகத்தோர் மதிக்கக்கூடிய – ஆனால் ஒன்றுக்கும் உதவாத - பள்ளிக் கல்வி தந்திருக்கிறாய். மலத்தை நாடி ஓடும் ஈக்கள் போன்ற புலன்களைத் தந்திருக்கிறாய்.

இப்படியெல்லாம் தந்த நீயே இவை எல்லாவற்றிடமிருந்தும் காத்து ரக்ஷிக்கக் கூடிய உன் மலரடிகளையும் தந்து விடப்பா!

பெரியவா சரணம்.

*******************************************************

அழிந்திடும் செல்வம் தந்தாய்; குலைந்திடும் உடம்பு தந்தாய்
பழியொடு பாவம் சேர்க்கும் ஒன்றையென் அறிவாய்த் தந்தாய்
வழியெனப் புலனோடோடும் மனதையும் நீயே தந்தாய்!
விழுத்துணை என்றும் உந்தன் பதமலர் - தருவாயப்பா! (121-1)

ஆறதாம் அறிவு தந்தாய், ஆறென உன்னை எண்ணாச்
சேறதாய் மனதும் தந்தாய், சேற்றிலே உழன்றிழிந்து
நாறிடும் பன்றிபோல உலகிலே வாழ்வும் தந்தாய்
சீரதே உருவாம் உந்தன் மலரடி - தருவாயப்பா (121-2)

உலகினோர் மதிக்கும் பள்ளிக் கல்வியாம் சோகம் தந்தாய்
புலமையோ என்று எண்ணி மயங்கிடத் தமிழும் தந்தாய்
மலத்தையே நாடும் ஈபோல் புலன்களும் நீயே தந்தாய்

கலங்கிடும் என்னைக் காக்கப் பொன்னடி தருவாயப்பா (121-3)


28.06.2018 : குருவாரம்

ஜபம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பெரியவாளைப் பார்க்கவென்றுதான் பகலவனும் உதிக்கிறானோ? அந்த முகமலரொளியினால்தான் இந்த ஜகமெலாம் விடிகின்றதோ? கண்மூடித் தவத்திலே இருக்கும் இந்தப் பொன்முகத்தைக் கண்டு சொக்கி நிற்பது தவிரத் தவம் வேறு எதுவும் உண்டோ? மறைந்திருக்கும் அந்தக் கரமலரையும், சற்றே தெரியும் அந்தப் பதமலரையும் தவிர தியானத்திற்கு உகந்த பொருள் வேறு ஏதும் உண்டோ?

அறியேன் ஐயா. 

பெரியவா சரணம் சரணம்.



இகபர சுகங்களெல்லாம் தரும் பெரும் தெய்வம் உன்னைப்
பகலவன் போற்றி நிற்கும் கோலமே கண்டேன்; உந்தன்
முகமலர் ஒளியில் இந்த ஜகமெலாம் விடியக் கண்டேன்
அகத்திலே உன்னை வைத்தேன்; உன்பதம் தஞ்சம் கொண்டேன் (122)


5.7.18 : குருவாரம்

தகதகவென்று மின்னும் ஒரு ஜோதிப் பிழம்பு, அனல் ஜ்வாலையை வீசாமல், தண்மையே உருவாய் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

ஆயிரம் கோடி சூரியர்களை ஒருசேர, நிதானமாக, கண்கள் குளிரப் பார்த்திருக்கிறீர்களா?

இந்தப் பேரொளி, பெரியவா என்னும் ஒளிப் பிழம்பு அளித்த ஒலி – தமிழ் வேதமாம் அந்தத் தெய்வத்தின் குரல் எத்தனை எத்தனை மனங்களைத் தெளிவித்திருக்கிறது?



பெரியவா சரணம்.

குளிர்ந்ததொரு ஜோதிப் பிழம்பொன்று கண்டேன்; கண்கள்
களிக்கும் ஒருகோடிப் பகலவன் ப்ரகாசம் கண்டேன்!!
ஒளியது ஒலித்த தெய்வக் குரல் வேதம் மக்கள் நெஞ்சைத்

தெளிவித்து அமுதமாக்கும் தெய்வீகச் செயலும் கண்டேன்! (123)


19.07.2018 : குருவாரம்

கோயில் திருப்பதிகத்திலே, மாணிக்கவாசகப் பெருமான், சிவபெருமானிடத்தே சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:

“தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?”

என்று பேசுகிறார் திருவாதவூரார்.

“நீ எனக்கு உன்னையே கொடுத்தாய். பதிலுக்கு, என்னை எடுத்துக் கொண்டாய். இது போல ஏதானும், எங்கானும் கண்டதுண்டா? நம்மிலே யார் புத்திசாலி? சொல்” என்று பேசுகிறார்.

இந்தப் பேச்சு, எம்பெருமான் தன்னை எடுத்துக் கொண்டதால் வந்த ஆனந்தப் பேச்சு.

நான் சொல்லுவதாக இருந்தால், பெரியவாளிடம் என்ன சொல்லுவேன் என்று நினைத்துப் பார்த்தேன்.

அன்பர்கள் குழாத்துடன் என்னைக் கூட்டி வைத்து, தனது அருளமுதெல்லாம் தந்து, தன் பதம் வைத்து என் மனம் புக அவர் எடுக்கும் முயற்சிதான் எவ்வளவு? ஆனால், அது ஏதானும் வெற்றி பெற்றதோ? இல்லை என்றுதான் தோன்றுகிறது. மனது பெரியவாளிடம் லயிப்பதே இல்லை. எவ்வளவுதான் பெரியவாளின் அடியவர்களின் நட்பு வட்டத்தில் இருந்தாலும், “நானும் பூஜை பண்ணுகிறேனாக்கும்” என்று ஏதோ ஒன்று செய்தாலும், மனதிலே பெரியவாளைத் தவிர எல்லா துர்க்குணமும்தான் நிறைந்திருக்கிறது.

பெரியவாதான் இன்னும் கொஞ்சம் மனம் கனிந்து, இந்த கசடே நிறைந்த மனதையும் தனதாய்க் கொள்ள வேணும்.

பெரியவா சரணம்.



எந்னுளம் தராமல் நானும் ஏய்த்தனன் எந்தன் உள்ளம்
வந்திடவென்று நீயும் பாடெலாம் பட்டாய் ஐயா!
உன்பத முயற்சி தோற்க, என்வினை முந்த, நம்மில்
வென்றது நானேயன்றோ? தோற்றது நீயேயன்றோ? (124-1)

வெற்றியால் துவண்டிருக்கும் வினையினேன் உன்னையன்றி
உற்றதோர் துணையாயிங்கே யாரையும் காணேனைய்யா!
குற்றமேயன்றி வேறோர் நற்றவம் ஏதும் இல்லேன்

செற்றது போதும் வந்து அரவணைத்தாள்வாய் ஐயா! (124-2)


26.07.2018 : குரு வாரம்

இன்றைய குருவாரத்தில், சிஷ்யப் பரிவாரர்களோடு நமக்கு அருள்பாலிக்கும் நம் பெரியவாளினைப் பணிந்து, இந்தப் பாமாலையை அந்தப் பங்கயப் பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பெரியவா சரணம்.



மங்கல ரூபனை, மதிமுடி அழகனை
சங்கடம் தீர்க்குமெம் சற்குருநாதனை
அங்கயற்கண்ணி உமையவள் பாலனை

சங்கர தேவனை பணிவையென் மனமே (125)



02.08.2018 குருவாரம்:


இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, அந்த மல்லிகைப் பூக்கள் 

மேலே மிகுந்த பொறாமை வருகிறது. என்ன தவம் செய்திருக்கின்றன 

அந்த பூக்கள்? அந்த மல்லிகைப் பூக்கள் செய்த தவத்திலே கோடியிலே 

ஒரு பங்காவது எனக்கும் வரட்டுமே என்று தோன்றுகிறது. 

பெரியவாளின்  பொற்பாதம் சேரும் அந்த அனுபவம் அடியேனுக்கும் 

கிடைக்கும் அல்லவா!!


பெரியவா சரணம்.





மணம் வீசும் மல்லிகையாய் நான் மாற மாட்டேனோ?

கண நேரம் உன் பாதம் நான் தாங்க  மாட்டேனோ?

உணவாயுன் நாமம் உண்டுயிர் வாழ மாட்டேனோ?


அணியாயுன் திருப்பாதம் அதில் சேர மாட்டேனோ? (126)



9.8.2018 : குருவாரம்

கருணையே கடாக்ஷிக்கும் இந்தக் கண்கள் அடியேனையும் காத்து அருளட்டும்.



எத்தனை எத்தனை பிறவிகள் வந்தாலும்
அத்தனை அத்தனை பிறப்பிலும் எந்தன்
அத்தனாம் உந்தனை மறவாதிருக்கவே

வைத்திடுவாய் என்னைக் காத்திடுவாயப்பா! (127)


16.08.2018 : குருவாரம்

இந்த குருவாரத்திலே, பசுபதியாய் அருள்பாலிக்கும் இந்த photo பெரியவாளை வணங்கி இந்தப் பாடலை அர்ப்பணம் செய்கிறேன்.



பசுபதி என்றிடப் பாசம் போய்விடும்
நசிந்திடும் வினையெலாம்; பிறவி நீங்கிடும்
சசிவசி முடியரன் குருவுருக் கோமகன்

இசைசொல உய்ந்திடும் தரணி யாவுமே  (128)


23.08.2018 : குருவாரம்

இன்றைய குருவாரத்திலே இந்த photo பெரியவாளைப் பார்க்கும்போது, “பெரியவா, இது என்ன சிரிப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.

தினம்தோறும் தினம்தோறும், தாயாம் நீ பார்த்து ரசிக்கவென்று இந்த உலகெனும் மேடை மேலே, உனது சேயாகிய நாங்கள் அடிக்கும் கூத்தினைப் பார்த்து ரசிப்பதால் வரும் ஆனந்த சிரிப்போ இது?  

பெரியவா சரணம்.




மாயமாம் திரையையிட்டு, உலகெனும் மேடைமேலே
நாயகா! கூத்து ஒன்று நடத்தியே பார்க்கின்றாயோ?
சேயெலாம் ஆடியாடி அலுப்பதைக் கண்டு எங்கள்

தாயுமாய் நின்ற கோனே நீயுமே சிரிக்கின்றாயோ? (129)


6.9.2018 : குருவாரம்:

இன்றைய குருவாரத்தில், இங்கே அடியார் ஒருவர் மாலையிட, கம்பீரமாக நிற்கும் வேத நாயகனைப் பாடும் பாக்யம் கிடைத்தது.

பெரியவா சரணம்.



நான்மறை ஓதிடும் நாதனை, தேவர்கள்
கோன்தனை, நானிலம் வாழ்த்திடும் துறவியர்
வேந்தனை, அடியவர்க்கமுதினை, அருன்சுவைத்
தேந்தனை, என் தாய்தனை என்றும் வாழ்த்துவனே (130)

13.09.2018 குரு வாரம்
அப்பனே! இந்த குருவாரத்தில், என்னையும் உன் கடைக் கண்ணால் பார்த்து சற்றே அருள் செய்யேன் அப்பா!





மின்னையே நிகர்த்த மேனிப் பெரியனே! உலகுக்கெல்லாம்
இன்னருள் புரியும் கண்கள் என்னையும் கண்டிடாதோ?
வந்திடென் அருகில் வந்திங்குறங்கிடென் மடியில் என்று
அன்னையாய் அணைத்திடாயோ? அருளதே கொடுத்திடாயோ? (131)

19.9.2018 குரு வாரம்:

அப்பனே! உன் பதம் காண எம் கவலைகள் ஓடிவிடாதா என்ன? உன் கருணை முகம் கண்டபின்னும் நெஞ்சிலே கவலைகள் இருக்குமா என்ன? உனது நாமம் எனது நாவில் இருக்கும்போது, வினைகளெல்லாம் நில்லாதோடிவிடாதா என்ன?
பெரியவா சரணம்.


ஜகத்குரு பாதம் காணக் கவலைகள் கரைந்து போகும்
முகம் அதைக் காண, நெஞ்சு அமைதியில் அமிழ்ந்து போகும்
இகமதை நீக்கி நித்த சுகமதே நல்கும் நாமம்
உகப்புடன் சொல்ல எந்த வினையதும் நில்லாதோடும்! (132)



27.09.2018  : குருவாரம்

இந்த குருவாரத்திலே, நமக்கருள் செய்யவென நடையாய் நடந்த நடராஜப் பெருமானின் திருவுருவாம் இந்த நடை ராஜனை எண்ணி, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன். 

பெரியவா சரணம்.



எமக்கென நடந்த அந்தப் பதமலர் சிரசில் ஏந்தி 
அமுதினும் இனிய உந்தன் முகமலர் அருளை மாந்தி
சுமையெனத் தொடரும் துன்ப பவக்கடல் நானும் நீந்தி
நமன்நமன் உனையே எண்ண, மனதினில் வருமே சாந்தி! (133)


04.10.2018 : குருவாரம்

இன்று, குருவாரம். குருபெயர்ச்சி நாளும் கூட.

இன்றைய நாளிலே, அந்த குருநாதனின் தாள் பணிந்து, அனைவருக்கும், சகல லோகத்திற்கும், இந்த குருபெயர்ச்சி நன்மையையே அளிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், இந்தப் பாடலை, அந்த ஜகத்குருவின் பாதாரவிந்தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். 


குருவுனை நினைத்திடத் திருவருள் கூடிடும்
குருவருள் புரிந்திட வினையதும் ஓடிடும்
குரு பெயர்சொல்லிட வாழ்வதும் உயர்ந்திடும்
குருபதம் பணிதலே இறைவழி ஆகுமே (134)

11.10.2018 : குருவாரம்:

இந்த "பெரியவா கொலு" பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! எத்தனை எத்தனை பெரியவா?

பெரியவா அஷ்டோத்தர நாமாவளியிலே வரும் ""சதா நவ நவா காங்க்ஷ்ய தர்ஷனாய நமோ நமஹ" என்னும் நாமாதான் நினைவுக்கு வருகிறது.

எவ்வளவு முறை பார்த்தாலும் புதிதாய்ப் பார்ப்பதுபோல் அலுக்கவே அலுக்காத காட்சியல்லவா பெரியவா தரிசனம்!

அந்த தரிசனத்தை, இந்த நவராத்ரி வேளையிலே நமக்கெல்லாம் கொலு வடிவில் அளிக்கும் பெரியவாளுக்கும், இந்த கொலுவினை ஏற்பாடு செய்திருக்கும் Bharatiya Vidya Bhavan in Mylapore, Madrasக்கும் இந்த குருவாரத்திலே மனதார நமஸ்காரம் செய்கிறேன்.

இந்த தரிசன சந்தோஷத்தை, இந்த குருவாரப் பாடலாக வடித்து, பெரியவாளின் பாத காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன்.



நவநவமாய்க் காட்சி தந்து அடியாரைப் பாலிக்கும்
நவராத்ரி நாயகனை, நான்மறையின் ஆதியினை
பவரோகம் தீர்த்தெம்மைப் பாலிக்கும் மூர்த்தியினை
சிவசக்தி ரூபமென வந்தவனைப் போற்றிடுவோம்! (135)


18.10.18 : குருவாரம் : சரஸ்வதி பூஜை



சரஸ்வதீ! தாயே! எங்கள் கலையாதி முதலே! கயிலை
அரனவன் வடிவே! மயிலைக் கற்பக உருவே! இந்த
தரணியின் மக்களெல்லாம் குறையின்றி வாழ இங்கே
நரவுரு தாங்கி வந்த உமையவள் அருளே! குருவே! (136)

25.10.2018

இன்றைய குருவாரத்தில், அந்தக் கயிலை விட்டு நம் காஞ்சி நகர் மேவி மனக்கெலாம் அருளும் அந்தப் பெரியவாளின் பதம் பணிந்து, இப்பாடலை அர்ப்பணம் செய்கிறேன். 




நாதனை, கயிலை விட்டுக் கஞ்சிநகர் மேவும் 
வேதனை, பத்தர் மனக்கமலம் வளர்ந்தருள்
பாதனை, பவரோக அழுக்கிருள் களை ஞான
போதனை, நித்தம் பணிந்தெழென் மனமே (137)


01.11.2018 : குருவாரம்

இன்றைய குருவாரத்தில், பெரியவாளிடம் ஒரு வரம் கேட்கத் தோன்றியது. பெரியவாளிடம் வேறு என்ன வரம் கேட்பது? அவரையே அல்லவா கேட்க வேண்டும்? உன் பாத அடைக்கலம் என்றும் நிரந்தரமாக இருக்கும் வரம் தருவாயப்பா என்ற வேண்டுதலோடு, இன்றைய பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.



நன்றுதான் விளைந்திட்டாலும் அல்லதாய் அமைந்தாலும் நீ
ஒன்றிங்கென் துணையென்றுன்னைப் பற்றிடும் வரமே தாராய்!
கன்றெனைக் காக்கும் தாயாய் நீ வரும் வரமே தாராய்!
என்றென்றும் உந்தன் பாத அடைக்கலம் தருவாயப்பா! (138)

08.11.2018

கந்தர் சஷ்டியும், குருவாரமும் சேர்ந்த குருவாரத்தில் பாடிய பாடலை, அந்த முருகப் பெருமானேயான பெரியவாளிடம் இந்த வேண்டுதலை சமர்ப்பிக்கிறேன்.



குருஆறுமுகா! கூர்வேல் அழகா!
திருமால் மருகா! எனையாள் குமரா!
கருவூர் வாரா வரமே தருவாய்
கருணைக்கடலே! அருள்வாய் முருகா! (139)

பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


22.11.2018

இந்த குருவாரத்தில், பொய்யாம் இந்த உடலாலே, பொய்யே நிறைந்த இந்த மனதில் விளையும் அழுக்கையெல்லாம் அந்த மெய் வடிவின் பாதத்தில் இட்டு நிற்கிறேன்.

பெரியவா சரணம்.



உள்ளத்தில் உன்னை வைத்தேன்; , எண்ணத்தில் விளையும் மோச
கள்ளத்தை எல்லாம் உந்தன் பாதத்திற்கணியாய் வைத்தேன்;
மெள்ளவே என்னைப் பாராய்! பொங்குமக் கருணை என்னும்
வெள்ளத்தால் என்னைத் தூய்மை செய்துந்தன் பாதம் சேராய்! (140)

பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.



29.11.2018 : குருவாரம்: 


இந்த குருவாரத்தில்  இந்த photo பெரியவாளை வணங்கி, ஒரு பாமாலையைச் சூட்டி மகிழ்கிறேன். 



கயிலையை விட்டு எங்கள் பூமி வந்திருக்கும் நாதன்
துயிலும்பாற் கடல் விட்டெங்கள் இடம் வந்து அருளும் போதன்
மயில் சேவல் விட்டு தண்டம் ஏந்திடும் வேதன்; பாதம்
பயின்றிடு மனமே உந்தன் துயரங்கள் தொலையும் உடனே (141)


பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


06.12.18 : குருவாரம்: 


இந்த குருவாரத்தில்  இந்த photo பெரியவாளை வணங்கி, ஒரு பாமாலையைச் சூட்டி மகிழ்கிறேன். 




கயிலையின் நாதன் இங்கே பூமியில் காட்சி தந்தான்
மயிலையின் உமையாய், அரியாய்,  மருகனும் தானாய் வந்து,
பயில்பவர் நெஞ்சம் என்னும் பீடம்தான் அமர்ந்து ஆட்சி
செய்திடும் நாதன் வந்தான்! பாதமே போற்றி! போற்றி! (142)


பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

13.12.18 : குருவாரம் :


இந்த குருவாரத்தில்  இந்த photo பெரியவாளை வணங்கி, ஒரு பாமாலையை அவருக்கு அணிவித்து, எனது வேண்டுகோளையும், அவரது பத கமலங்களிலே வைக்கிறேன். 

எத்தனை கவலைகள். எத்தனை வேதனைகள் இந்த வாழ்விலே. மென்மேலும், மென்மேலும் என்று பொங்கும் துயரங்கள். இந்தக் கவலைகளையெல்லாம், வேறு யாரிடம் சொல்வது? என்னருமைப் பெரியவாளே - உம்மிடம் அல்லாது யாரிடம் சொல்லி ஆறுதல் பெற முடியும்? 



கவலைகள் என்னைக் கவ்வித் தின்றிடும்
அவனியில் உனைவிடில் புடலிடம் உளதோ?
தவமெதும் இல்லேன்; வந்தருள்வாயோ?
உவந்தெனை உன்பதம் கொண்டருள்வாயோ? (143)


பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


27.12.2018 : குருவாரம் :


இந்த குருவாரத்தில்  இந்த photo பெரியவாளை வணங்கி, ஒரு பாமாலையை அவருக்கு அணிவித்து, எனது வேண்டுகோளையும், அவரது பத கமலங்களிலே வைக்கிறேன். 



குழந்தையாய் சிரிப்பு கண்டேன்; குறுநகை முகத்தில் கண்டேன்
அழகெலாம் சேர்ந்து வந்துன் வதனமாய் இருக்கக் கண்டேன்
முழுநிலா ஒளியை மிஞ்சும் மோகனம் பெருகக் கண்டேன்
பழுதெலாம் நீங்க, எந்தன் பிறவியின் பேற்றைக் கண்டேன் (144)


பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


03.01.2019 : குருவாரம்: அனுஷ நாள்:

இன்று என்னமோ, பெரியவாளைப் பார்க்கும்போது, பயமும், நடுக்கமும், சமயத்தில் சந்தேகமும் கூட மனதிலே தோன்றுகின்றது. "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்பார்கள். குற்றமே வடிவாய் இருக்கும் மனது இல்லையோ இது? அதனால்தானோ இந்த பயமும் நடுக்கமும்?

இந்த பயம், சந்தேகம் எல்லாவற்றையும் பெரியவாளிடமே சொல்லிவிடுகிறேன்!



1) இதழ்க்கடைச் சிரிப்பு ஏதுமின்றி, கூர்மையாய் நம்மைப் பார்க்கும் இந்தப் பெரியவாளைப் பார்க்கும்போது, என்னுள் ஒரு சிறு நடுக்கம் தோன்றுகிறது. அனுதினமும், நான் செய்யும் தவற்றையெல்லாம் பார்த்துதான் இந்த கோப முகமோ - என்றும் தோன்றுகிறது.






2) கொள்ளைச் சிரிப்புடன் காட்சி தரும் இந்தப் பெரியவாளைப் பார்த்தாலோ, முதலில் சந்தோஷமாக இருந்தாலும், உடனேயே, இந்தச் சிரிப்புதானே அன்று முப்புரம் எரித்தது - என்பது ஞாபகம் வருகிறது. உடனேயே, நடுக்கமும் வருகிறது...




3) பரிவாக, "அப்பனே இந்தா !" என்று கொடுப்பது போலத் தோன்றும் இந்தப் பெரியவாளைப் பார்க்கும்போதும்கூட,, மெதுவாக ஒரு சந்தேகம் மனதில் தோன்றுகிறது. "அப்பனே! அன்று, மதுரையம்பதியில், அந்த மன்னனுக்கு எவ்வளவு அழகாக நீ குதிரைகளை அளித்தாய்! மறுநாள் என்ன ஆச்சு? எனக்கு நீ நிறைய கொடுத்திருக்கிறாய்; கொடுத்துக்கொண்டே இருக்கிறாய். ஆனால், அந்த பாண்டிய மன்னனை ஏமாற்றியதுபோல், கடைசியில், என்னையும் ஏமாற்றி விடாதே" என்றும் கேட்கத் தோன்றுகிறது!!




புது வருஷத்திலே, அப்பனே, எனக்கு வந்த இந்த குழப்பங்களை, அச்சத்தை, நடுக்கத்தை, சந்தேகத்தையெல்லாம், உன்னிடமே சொல்லிவிட்டேன். கருணையுடன் வந்து இவை அனைத்தையும் தீர்த்து வையப்பா!

பெரியவா சரணம்.




குறுநகை இன்றிக் காட்சி தந்திடும் உன்னைப் பார்க்க
நடுக்கமாய் இருக்குதப்பா! பயம் சற்றே வருகுதப்பா!
முறுவலாய் நகையோடிங்கே நின்றிடும் உன்னைப் பார்த்தால்
முப்புரம் சிரித்தெரித்த நிகழ்வச்சம் கொடுக்குதப்பா!


பரிவுடன் அருளே செய்து பொருளொன்று நீ கொடுத்தால்
மதுரையம்பதியில் அன்று விளையாட்டாய் வந்து நீயும்
நரியையே பரியாய் மாற்றிக் கொடுத்திட்ட காட்சி நெஞ்சில்
தோன்றிட ஐயம் வந்து ஆட்டியே படைக்குதப்பா!


கருணையே வடிவாய் நீயும் காட்சியே தருவாயப்பா!
பொறுமையாய் ஐயம், அச்சம் தீர்த்தருள் புரிவாயப்பா! (145)



10.01.2019 : குருவாரம் : நடை ராஜன்


ஒவ்வொரு குருவாரத்திலும், ஒரு Photo பெரியவாளைப் பார்த்து, மனதில் தோன்றுவதைக் கிறுக்கி, அதை "பாமாலை" என்ற பெயரிலே பெரியவாளுக்கு சாற்றுவது, அவர் கருணையினாலே, இன்றும் நடைபெறுகிறது.

இந்த குருவாரத்திலே என் கண்ணில் பட்டது இந்த PHOTO பெரியவாள்தான்.



தில்லை நடராஜனை, தமது ப்ரதம சிஷ்யரான புதுப் பெரியவாளுடனும் கூட சேர்ந்து மஹா பெரியவா தரிசனம் செய்து கொண்டிருக்கு அற்புதமான காட்சி.

அந்த நடராஜனை தரிசிக்க, காஞ்சீபுரத்திலிருந்து நடந்து நடந்து சென்றிருப்பார் இல்லையா?

இந்த "நடை ராஜன்" அந்த "நட ராஜனை" தரிசிக்கும் அற்புதத்தினைத்தான் நாமும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து காண்கிறோம்.

"நடைராஜன்"' என்று பதம் வந்து விழும்போது, கம்பன், ராமனைப் பற்றி "நடையில் நின்றுயர் நாயகன்" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த ராமபிரானும் நடந்தேதானே கங்கைக் கரையிலிருந்து ராமேஸ்வரம் வரை வந்தான்! அந்தக் கடற்கரை வரை வந்தவன், அதற்கப்புறமும்கூட, படகையோ, கப்பலையோ உபயோகிக்காமல், பாலமொன்று கட்டி, நடந்தே அன்றோ இலங்கை சென்றான்?

அந்த தர்மத்தின் அவதாரமாம் ராமச்சந்திர மூர்த்தியாகவே அன்றோ நம் பெரியவாளும் இருக்கிறார்!!

இந்த குருவாரத்தில் இந்த photo பெரியவாளை வணங்கி, இந்தப் பாமாலையை அவருக்கு அணிவித்து, பாடலை, அவரது பத கமலங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

பெரியவா சரணம்.

நடராஜன் அழகைக் காணும் நடைராஜன் அழகைக் கண்டேன்
விடக்கண்டன் அவனைக் காணும் நடமாடும் தெய்வம் கண்டேன்
இடபமே ஊர்ந்தானுமையாள் பங்கனை, எந்தன் நெஞ்சை
இடமதாய்க் கொண்ட தேவை எதிரிலே இங்கே கண்டேன்! (146)



17.01.2019 : குருவாரம்:

கண்கள் மூடி, தக்ஷீணாமூர்த்தி ஸ்வரூபராய் காட்சி அளிக்கும் இந்த photo பெரியவாளை நமஸ்கரித்து, இந்தப் பாமாலையை சூட்டுகிறேன். 

பெரியவா சரணம். 




தவமது தவமே செய்யும் காட்சியை இங்கு கண்டேன்
பவவினை தீர்க்கும் பெம்மான் நவவடிவிங்கு கண்டேன்
அவனியை அளித்து ஆளும் சங்கரா உன்னைக் கண்டேன்
சிவசக்திஸ்கந்த ரூப தரிசனம் கண்டேன்! கண்டேன்! (147)



7.2.2019 : குரு வாரம் : பெரியவா மரத்தின் கீழமர்ந்து அருளும் காட்சி

பண்டிதர்கள் நிறைந்த சபை தனிலே, புதுப் பெரியவா பக்கத்தில் நிற்க, அமர்ந்திருக்கும் அந்த ஜோதியைக் கண்குளிர தரிசிப்போம்!






ஆலமே உண்ட பெம்மான்; நான்மறை போற்றும் பெம்மான்
மாலுடன் அயனும் போற்றும் மதிபுனல் சடையப் பெம்மான்
ஞாலமே காக்க இங்கு நம்மிடை வந்த பெம்மான்
கோலமே கண்டேன் அம்மா! குளிர்முகம் கவசம் அம்மா! (148)


28.02.2019 : குருவாரம் : என்ன ஒரு புன்னகை இது?

என்ன ஒரு புன்னகை இது? மனதை கொள்ளை கொண்டு, உள்ளத்தில் இருக்கும் அத்தனை துன்பத்தையும், துயரத்தையும் அப்படியே அடித்துக்கொண்டு போகிறதே!. இந்தப் பெரியவாளைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டால் போதுமே! வேறு என்ன வேண்டும்?





பொன்பொருள் தேடித் தேடி அலுத்திளைத்தழுது நொந்தேன்
என்ன ஓர் வாழ்க்கை ஈது? உடல், உளம், உயிரும் நொந்தேன்
என்னதான் செய்வதென்று, அறியாது திகைத்திருந்தேன்
பொன்முகம் சிந்தும் இந்தப் புன்னகை கண்டேன்;  உய்ந்தேன்! (149)


07.03.2019 : குருவாரம் : குருவாரப் பாடல்

அந்த காலத்தில், ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யவென்று, மலை போல லட்டு செய்வார்கள். செய்வதற்கு, இரவு ஆகிவிடும். அந்த லட்டுவை, எறும்பு வந்து மொய்த்துவிடாமல் இருப்பதற்காக, ஒரு "trick" செய்வார்கள். 

இந்த காலம் போல, "எறும்பு powder" போட மாட்டார்கள். அந்தப் பாவம் எதற்கு? அதற்கு பதிலாக, அந்த லட்டு மலையைச் சுற்றி, சர்க்கரையினால் ஒரு கோடு போடுவார்கள். 

எறும்புகள், அந்த சர்க்கரைக் கோட்டுக்கு வந்து, அந்தக் கோட்டிலுள்ள சர்க்கரையை சாப்பிடுவதிலேயே இருந்துவிடும். 

எறும்புகள் அழகாக ஏமாந்து விட்டன இல்லையா? அந்த சர்க்கரைக் கோட்டைவிட பல மடங்கு இனிப்பான பண்டம் இன்னும் சற்றே சற்று தூரத்தில் இருந்தும், இந்த "சிறிய" இனிப்பிலே மயங்கி, அந்தப் "பெரிய" இனிப்பினை"க் கோட்டை விடும் அந்த எறும்புகள். 

அதுபோல தான் நானும் என்று தோன்றுகிறது. லட்டு மலைபோல பெரியவாள் இருந்தும், அந்த லட்டு மலை மேலே சிந்தனை போகாமல், வேறு எதில் எதிலோ இல்லையா சிந்தனை லயிக்கிறது? 

அந்த எறும்புகளுக்காவது, உள்ளே அந்த லட்டு மலை இருப்பது தெரியாது. எனக்கு அம்மா, அப்பா, அன்பான பெரியவா குழு நண்பர்கள் என்று அத்தனை பேரும் சொல்லிக் கொடுத்ததால், பெரியவா என்னும் அந்த லட்டு மலை இருப்பது, நிச்சயமாகத் தெரியும். 

அப்படித் தெரிந்தும், அற்பமான விஷயங்களில் மனது போவது, எத்தனை மடத்தனம்?  

இதுவும், பெரியவாளின் செயல் தானோ? 

பெரியவாதான் காப்பாற்ற வேண்டும்!





லட்டுக மலையொன்றுள்ளே இருந்திட எறும்பு வந்து
தொட்டிடாதிருக்கச் சுற்றி சர்க்கரை அரண் அமைப்பார்!
விட்டுள்ளே சென்றால் இன்பம் ஆயிரம் மடங்கு உண்டு!
மட்டியாம் எறும்பும் அதனை அறியாது! அதுபோல் நானும் (150-1)


இன்பமாம் மலை நீயென்னுள் இருந்துமே உணரா  நின்றேன்!
உன்னையென் உள்ளே கொண்டும் சிற்றின்பம் தேடி நின்றேன்!
அன்னையே அப்பா எந்தன் அருமணி முத்தே ஐயா!
என்னவென்றுரைப்பேன் உந்தன் மாயையை? காப்பாய் ஐயா! (150-2)



21.03.2019 குருவாரம் : 


அறுமுகனார் ஒருமுகமாய் வந்த  திருமகனார் அந்த குருப் பெருமகனாரைக் கண்டு விட்டால், நமக்கு வேறென்ன வேண்டும்?

வேறு எதுவுமே வேண்டாத நிலையை அருள்வாய் அப்பனே என்ற வேண்டுதலோடு, இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன். 





குருமுகம் காணில் காலன் உறுமுகம் மறைந்து போகும்
கருமுகம் காணா அமர வாழ்வுமே வந்து சேரும்
திருமுகம் கனிந்து நோக்கும் முருகனாம் சிவனாம் அந்த
ஒருமுகம் கண்டேன் அம்மா! வேறென்ன வேண்டுமம்மா!! (151)


28.3.2019 : குரு வாரப் பாடல் : சிம்மாசனமர்ந்த அரன்


சிம்மாசனமமர்ந்த இந்த இளஞ்சிங்கத்தை, துறவி வேந்தை எப்படித் தொழுவது? எப்படித் தொழுதாலும் அது போதுமோ? 

தெரியவில்லை. பெரியவா சரணம். 



அழுதுந்தன் சரணம் பற்றித் தொழுதிடுமவ் வகையொன்றறியேன்
எழுதேன் நின் கோலம் எந்தன் உள்ளத்தே! ஐயோ, இங்கே
பழுதாயோர்  நெஞ்சம் கொண்டேன்!  இன்னெஞ்சு வேண்டாமென்று
முழுதாய் நீ என்னை விட்டுப் போகாதே அம்மையப்பா! (152)


04.04.2019 : குருவாரப் பாடல்: அந்தச் சிவபெருமான் இங்கு வந்து தரும் காட்சி:



உடுக்கையைப் பற்றுமந்த வலக்கையில்குவளை பற்றி
இடக்கையில் தீயின்றிங்குக் காத்திடும் தண்டம் பற்றி
படர்ந்திடும் அரவம் நீக்கி, மாலைகள் தாங்கி, கங்கை
அடர்ந்திடும் சடையும் நீக்கி மானுடக் காட்சி தந்தாய்! (153)

11.04.2019 : குருவாரப் பாடல்:



உலகத்துப் பாரமெல்லாம் தாங்கிடும் தோள்கள் என்றோ
பலமான மாலையொன்றைச் சாற்றினர் உந்தன் தோளில்?
மலமெலாம் நீக்கும் தேவே! குலம் தந்தாய்! குணமும் தந்து,
நலமெலாம் தந்து வாழ்வில் வளம் தந்து அருள்வாய் அப்பா! (154)


18.04.2019 : குருவாரப் பாடல்: 



பகலவன் விளக்கு ஏற்றிப் பார்த்திடும் அழகைக் கண்டேன்!
புகலரும் ஜோதி இங்கோர் ஜோதி முன் நிற்கக் கண்டேன்!
அகம் புறம் இரண்டும் நீத்த இறையது அன்பால் வந்து
உகப்புடன்  குருவாய் இங்கே அருளிடும் பாங்கு கண்டேன்! (155)


25.04.2019:  குருவாரப் பாடல்: 
தருநிழல் ஆனால் என்ன? சுடுமணல் ஆனால் என்ன?
குருவுனக்கேதும் ஒன்றே! 'உடல் இலை நானிங்கெனுமோர்'
ஒருவுரைக்கெடுத்துக்காட்டாய் விளங்குமுன் வாழ்வு கண்டேன்
கருமுகம் இனியிங்கில்லை! பதமலர் சரணமப்பா! (156)



02.05.2019 : குருவாரப் பாடல் : 



உன்னுடன் காலமெல்லாம் இருக்குமோர் வாழ்வு கேட்டேன்
மின்னொளி மேனி நெஞ்சில் நித்தமே நிற்கக் கேட்டேன்
நின்முகம் மட்டும் எங்கும் பார்த்திடும் பார்வை கேட்டேன்
என்னுளம் தன்னில் நீ வந்திருக்குமோர் வரமே கேட்டேன் (157)

09.05.2019: குருவாரப் பாடல்: 


நவகோள்கள் சுற்றி வர நாயகனாய் நின்றிடுமச் 
சிவசூர்யன் நீதானோ? நீ நிற்கும் எழிற்கோலம் 
பவசாகரம் தன்னை வற்றிடவே செய்துவிடும்
தவசாகரத்தெந்தாய்! பதமலரே சரணமப்பா! (158)


16.05.2019 : குருவாரப் பாடல்: 




கல்வியிலே சிறந்தோர்க்குச் சான்றிதழ்தான் தந்திடுவார்
கல்வியருள் பாரதிக்கே தந்திடுவார் யாருமுண்டோ?
பல்கலைக்கும் தாயகமே! பாரதியின் திருவுருவே!

தொல்லறிவே! துறவியரில் வேந்தனென்றே சொன்னாரோ? (159)

23.05.2019 : குருவாரப் பாடல்






சங்கர குருவினுக்கு அபிஷேகம் செய்து பார்க்கும்
சங்கர குருவே! எங்கள் சங்கடம் போக்க வந்த
மங்கல உருவே! வாழ்வில் நலமெலாம் சேர்க்குமுந்தன்
பங்கயப் பதம் பணிந்தோம்! வந்தருள் புரிவாய் ஐயா!(160)


30.05.2019 : குருவாரப் பாடல்



அருள்மழை என்பதொன்றும், அன்பதன் ஆழியொன்றும்
திருவருள் என்பதொன்றும், அனுக்ரஹக் கடலதொன்றும்
கருணையின் மலையதொன்றும், ஓருருவாக இங்கே
குருவுருக் கொண்டு நாமும் உய்யவே வந்ததம்மா! (161)


06.06.2019 : குருவாரப் பாடல்







ஈசனே எந்தாய் எந்தன் மனயிருள் தீர்க்கும்  பாப 
நாசனே! பாதம் பற்றும் பக்தர்க்குத் தனையே நல்கும்
நேசனே! அடியார் நெஞ்சைக் கோவிலாய்க் கொண்டு வாழும்
வாசனே! உன்னைக் கண்டோம்! பிறவியும் உய்ந்தோமைய்யா! (162)


25.07.2019





சுகவாழ்வு ஒன்றே நோக்காய் கேளிக்கை ஒன்றே வாழ்வாய்
அகம் புறம் அழுக்கே மண்டும், அறிவென்று ஒன்றில்லாதேன்
மிகு கோபம், காமம், க்ரோதம் மனம் நிறைத்துனையெண்ணாதேன்

தகுதியென்றொன்றும் இல்லாத்  தகுதியேன்; அருள்வாயப்பா (163)

01.08.2019 குருவாரம் 





கீதை எமக்கென்றும் சொல்லும் கார்வண்ணன் நீ!
கோதை பயில் தமிழ்ப் பொருளாம் கோவிந்தன் நீ!
மாதை உடலில் ஓர் பாதியாய்க் கொண்டோன் நீ!
வாதை தீர்த்தெம்மைக் காத்திடும் மருந்து நீ!

கல்யாண குணக் கடலாம் என் கண்ணன் நீ!
அல்லலைப் போக்கியிங்கணைத்திடும் தாயும் நீ!
சொல்லிடும் சொற்கள் நீ! எழுதிடும் எழுத்து நீ!
கல்வி நீ! கேள்வி நீ! உணர்ந்திடும் உணர்வு நீ!

சாணுடல் குழந்தை நீ! மூவுலகளந்தாய் நீ!
தாணுமாலயனும் நீ! உமை பங்கன் ஈசன் நீ!
ஆணும் நீ! பெண்ணும் நீ! அலியோடு மற்றும் நீ!

காணுமக்காட்சியெல்லாம் இங்கெனக்காவாயோ நீ? (163)

- கீதா மாமி, கல்யாணம் மாமா, சாணுபுத்ரன் அண்ணா - விற்காக பெரியவாளை வேண்டிக்கொண்டு  (கோவித்துக்கொண்டு!!) எழுதியது. 



8.8.19




சக்தி நாயகன் நீ என்று அறிந்திடும் அறிவு கேட்டேன்
பக்தியால் உருகி உன்னைப் பற்றிடும் நெஞ்சம் கேட்டேன்
எக்கதி ஏதும் இல்லேன்; உன்மலர்த் தாளே இங்கு
திக்கெனக்கென்று வந்தேன் பதம்சதம் அருள்வாயப்பா  (164)



15.8.19




மடிமீதுன் பதமலரை வைத்துடனே இதமாகப்

பிடித்துவிட்டுன் களைப்பைப் போக்கிடவே ஓராசை!
நடையாக நடந்திட்ட  உன்பதத்தை என் சிரத்தில்
குடையாக வைத்தெந்தன் விதிமாற்றப் பேராசை!


10.10.19





பிறையணி பெம்மான் அன்று அமரர்கள் உய்ய கண்டம்
கறையணி பெம்மான் இன்று அடியவர் உய்ய காவி
உறையணி பெம்மான் என்றும் பக்தர்கள் நெஞ்சமென்னும்
நிறையணி பெம்மான் கண்டேன்; உன்பதம் தருவாய் ஐயா!





3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Feeling Very blessed going through each of the photos. Great compilation. Thank u and may Maha Periyava bless u

    ReplyDelete
  3. தினசரி எனக்கு ஒரு அருமையான பயணம். உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete